Sunday, February 28, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே!...

                             நேற்று மருத்துவமனை சென்றிருந்தேன். மருத்துவர்

வருகைக்காக காத்திருந்த போது தான் அந்த காட்சியை காண நேரிட்டது.

ஒரு சிறுவன், நான்கு அல்லது ஐந்து வயதிருக்கலாம். முகம்,

கை, கால்களெல்லாம் வீங்கி, சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்

பட்டிருந்தான். என் அம்மா, கிட்டதட்ட, ஒருமாதம் அங்கு அனுமதிக்க

பட்டிருந்ததால், அந்த நர்ஸ்களோடு நல்ல பரிச்சயம உண்டு. ஒரு

நர்ஸ்இடம் அந்த சிறுவனை பற்றி விசாரித்தேன். அந்த சிறுவனுக்கு

இரண்டு கிட்னியும் பாதிக்கப் பட்டு `டயாலிசிஸ் ’ செய்து கொண்டிருப்பதாக

கூறிய அவள், விரைவிலேயே மாற்று சிறுநீரகம் பொருத்தப் படாவிட்டால்

உயிருக்கே ஆபத்து எனவும் கூறிய போது வேதனையாய் இருந்தது.

கேட்கும் நமக்கே பதறுகிறதே, பெற்றவர்கள் என்ன பாடு படுவார்கள்

என நினைத்தவள்,வாய்விட்டும் கூறினேன். நர்ஸ் கூறிய பதில்

அதிர்ச்சியாயிருந்தது. `அட போங்கக்கா, நீங்க வேற’ என்றவள்

தொடர்ந்தாள். அப்பா, அம்மா, நேருங்கிய உறவினர்களை அழைத்து

மருத்துவர் நிலைமையை கூறிவிட்டு, மாற்று சிறுநீரகம் பொருத்த

வேண்டும் என்பதையும் விளக்கியிருக்கிறார். இரத்தசம்பந்தம்

உள்ளவர்கள் கொடுப்பது நல்லது என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.

உறவினர்கள் மறுநாளிலிருந்து பார்க்கக் கூட வரவில்லையாம்.

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டையாம். அம்மா, தான் கிட்னி

கொடுத்தால் செத்து போய்விடுவேனென்றும், தன் பெண்ணை பார்த்துக்

கொள்ள வேறு ஆளில்லை,என்றும் சண்டை போட்டு தன்

தாய்மையை நிரூபித்திருக்கிறார். அப்பாவோ தன்னால் முடியாது

என்பதை வெளிப்படையாகவே கூறிவிட்டாராம். அவர்களிடம்

மீண்டும் மீண்டும் பேசிப் பார்த்த மருத்துவர்

பொறுமையிழந்து திட்டி விட்டாராம். உடனே அவர்கள்

பையனை டிஸ்சார்ஜ்’ செய்து விடுமாறும், தாங்கள் வேறு

மருத்துவமனையில் பார்த்துக் கொள்வதாகவும் கூறிவிட்டனராம்.

                    
      நம்ப முடியாத நிஜம். மனிதம் செத்து போய்விட்டதெனக்

கூறுகிறார்கள். பெற்ற பாசமும், இரத்த பாசமும் கூட செத்து

போய்விட்டதா என நினைக்கத் தோன்றுகிறது. இப்படி ஒரு குழந்தையை

சாகடித்து விட்டு இவர்கள் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறார்கள்?.

தெரியவில்லை.

                    

      என் அம்மா மருத்துவமனையில் இருந்த போது நடந்த

இன்னோரு சம்பவத்தையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இதே

நிலையில் இருந்த மற்றோரு நோயாளி, வயது 35, சாகும்

வயதில்லை. அவரது 30 வயதேயான மனைவி, கணவரை `டயாலிசிஸ்’ க்கு

அனுப்பி விட்டு அறைக்கு வெளியே கண்ணீரோடு காத்திருந்தாள். நானும்

அதைப் போலவே அம்மாவுக்காக காத்திருந்தேன். அந்த பெண்ணிடம்

அவள் கணவரைப் பற்றி கேட்டது தான் தாமதம், யாராவது கேட்க

மாட்டார்களா என காத்திருந்தது போல கண்ணீரோடு மனசையும்

கொட்டித் தீர்த்து விட்டாள். தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு கணவர்

கெஞ்சுவதைக் கூறிய போது நானும் கலங்கி போனேன்.இங்கேயும்

பெற்றோரும், உடன் பிறந்தோரும் ஏதேதோ சாக்குகள் கூறி மறுத்துவிட,

கூடவே பணப் பிரச்சினை வேறு. நானும், என் கணவரும்,

பணத்தை கவலைப் படவேண்டாம். P.M.Fund, Lion`s club, என

ஏதாவது ஏற்பாடு செய்யலாம், நீங்கள் கிட்னி கொடுக்க மட்டும்

ஏற்பாடு செய்யுங்கள், என்று அந்த பெண்ணிடமும், அவள்

உறவினர்களிடமும் பேசினோம். என் கணவரின் தொலைபேசி

எண்ணும் கொடுத்திருந்தோம். அதற்குள் என் அம்மா இறந்துவிட,

நாங்கள் ஊருக்குப் போய்விட்டோம். திரும்பி வந்தபின் மருத்துவ

மனையில் விசாரித்த போது அவர்கள் வேறு மருத்துவமனை

போய்விட்டதாக கூறினார்கள். அந்த பெண்ணையும் தொடர்பு

கொள்ள முடியவில்லை.


                    

      சுஜாதாவின் கதை ஒன்று, பெயர் நினைவில்லை,

இதே நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டது. படிக்கும்

போதே கண்கள் கலங்குவதையும், மனது பதறுவதையும் தவிர்க்க

முடியாது. அப்போது நினைத்தேன், அவர் மிகை படுத்தி எழுதி

யிருக்கிறார், இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்க மாட்டார்கள்

என்று. ஆனால் அவர் ஒரு தீர்க்கதரிசியோ என்று இப்போது

நினைக்கத் தோன்றுகிறது. ஒருவேளை இப்படி ஒரு நிகழ்வின்

பாதிப்பு தான் அவரையும் எழுத தூண்டியிருக்குமோ என்னவோ!.

`தான் பெறனும் பெறவி, தன்னோட பெறக்கனும் பெறப்பு’

என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அதுவும் பொய்த்து

போய் விடுமோ?...

Thursday, February 25, 2010

பிடிமானம்.

எல்லாம் அவனே; என்றுதான்
அனுப்பி வைத்தனர்,
எதுவாகவும் இல்லை
நீ எனக்கு..

விதியை எண்ணி
விட்டத்தை வெறித்து கிடந்தேன்;
`என்ன் நெனச்சுட்டுருக்க?
மௌனமாய் தலையசைக்கிறேன்,
யாரை நெனச்சுட்டுருக்க?
அருவெறுப்பில் குறுகி போகிறேன்.

என்னை முறைப்பவனை
நீ முறைத்தால்,
என் மீதான அன்பு எனலாம்;
ஆளுமை எனலாம்,
என்னையே முறைத்தால்;
உன் மன விகாரமன்றி
மற்றென்ன?

கோயில், கோயிலாக வேண்டவில்லை,
மடிப் பிச்சையும் கேட்கவில்லை; ஆனாலும்,
மடி நிறைந்த மழலையை
தந்தவனுக்கும் தெரிந்திருக்கிறது,
எனக்கோர் பிடிமானம் வேண்டுமென்று.

Sunday, February 21, 2010

கண்ணீரை வென்ற பெண்ணாக...

கண்ணீரை வென்ற பெண்ணாக வேண்டும்,
என்று தான் விழைகின்றேன் நானும்,

ஆனால்;


செய்திகள் கூறும் குண்டு வெடிப்புகள்,
பூகம்ப புதைவுகள், சாலை விபத்துக்கள்;


மனதுக்கு நெருக்கமானவர்கள்
பகிரும் சோக நிகழ்வுகள்;


படித்த கதையில் பிடித்த
பாத்திரத்தில் லயித்து போதல்;

”வீட்டுக்கு வரனும் போல் இருக்கும்மா”
விடுதியில் இருக்கும் மகனின்
அலைபேசி குரல்;

ஏதாவது ஒன்று;

தினம் தினம்
தோற்று போகிறேன்.

Wednesday, February 17, 2010

`தைர்ய லட்சுமி’.

               அவள் பிறந்த போது இருந்த அழகைப் பார்த்து பெற்றோரும்,மற்றோரும் வியந்து போனார்கள். கொள்ளை அழகாக இருந்த அவளுக்கு, `லட்சுமி’ என்று அழகாக பெயரிட்டு வாய் நிறைய அழைத்தனர். யார் கண் பட்டதோ, அவளுக்கு ஒரு வயது பூர்த்தி ஆவதற்குள் வினையாய் வந்த காய்ச்சல் அவள் கால்களை முடக்கி போட்டது. அவள் வாழ்வையே புரட்டி போட்டது. எங்கெல்லாமோ அலைந்து திரிந்து ஏதேதோ சிகிச்சையெல்லாம் மேற்கொண்டனர். அவளால் எதையாவது பிடித்து கொண்டுதான் நிற்க நடக்க முடியும். அவளுக்கு பின் அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள், அதன் பின் மூன்று ஆண் குழந்தைகள் என அவர்கள் குடும்பம் பெரிதானது. ஆனாலும் லட்சுமியை பிரியத்தை கொட்டி அவளது குறை தெரியாமல் வளர்த்தனர். லட்சுமியும் வளர்ந்து பருவ வயதை அடைந்தாள். அவளது பெற்றொரின் கவலையும் வளர்ந்தது. அவளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பி தீவிர வரன் வேட்டையில் இறங்கினர். எந்த குறையுமில்லாத பெண்ணுக்கு திருமணம் செய்யவே படாத பாடு படுகையில் லட்சுமிக்கு அவ்வளவு எளிதில் வரன் அமைந்து விடுமா. என்னதான் அழகியாயிருந்தாலும், நற்குணவதியாயிருந்தாலும் ஊனமுற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் தியாக சீலர்கள் மலிந்து கிடக்கிறார்களா என்ன? பாவம் லட்சுமியின் பெற்றோர், அடுத்து வளர்ந்து நிற்கும் இரு தங்கைகள் வேறு. பெற்றோர் படும் வேதனை பொறுக்க முடியவில்லை லட்சுமிக்கு. ``பேசாமல் தங்கச்சிக்கு பாருங்கப்பா” என்று சொல்லிப் பார்த்தாள். முடிவில் சல்லடை கொண்டு சலித்து ஒரு மாப்பிள்ளை கண்டுபிடித்தனர். வசதி குறைச்சல் தான், ஆளும் சுமாராக இருந்தான். அவர்கள் குடியிருக்க வீடு, வருமானத்துக்கு ஒரு கடை என சகல சவுகரியங்களும் செய்து கொடுக்க முன் வந்தனர்.

               எளிமையாக திருமணமும் நடந்தேறியது. தனக்கு வாழ்வளித்தவனை தெய்வமாகவே பூஜித்தாள் லட்சுமி. அடுத்தடுத்த இரு ஆண்டுகளில் தங்க விக்ரகம் போல் அழகழகாய் இரு பெண்குழந்தைகள். சீராக போய்க்கொண்டிருந்த அவள் வாழ்க்கை பாதையிலும் கோணல் விழத் தொடங்கியது. அவள் கணவன் தன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தான். கடையில் வியாபாரம் நன்றாக நடந்ததால் பணப்புழக்கம் அதிகமாகவே , வரிசையாக எல்லா பழக்கங்களும் தொற்றி கொண்டன. `நண்டு கொழுத்தால் வளையில் தங்குமா? ’ தண்ணீயடித்து விட்டு வந்து லட்சுமியை கொடுமை படுத்த ஆரம்பித்தான். இவளும் வெளியில் காட்டிக் கொள்ளவே இல்லை. பெற்றோர் வருத்த படுவார்களே என்று அந்த பேதை பெண் அத்தனையும் தாங்கிக் கொண்டாள். ஊரெல்லாம் `பொறுக்க’ ஆரம்பித்த அவன் கண்களை அழகான மைத்துனிகள் உறுத்தினார்கள். மனைவியிடம் மெதுவாக தொடங்கினான், `ஒனக்கும் கொழந்தைகள பார்த்துக்க முடியல. ஒந்தங்கச்சினா ஒனக்கும் ஒத்தாசையா இருப்பா. கொழந்தைகள வளக்கவும் பிரச்சனை யிருக்காது’ அவன் பசப்பு வார்த்தைகள் புரிந்தவளாய், ` வாய மூடுங்க’ ன்னு சீறவும் அவன் தன் மூர்க்கதனத்தை காட்ட ஆரம்பித்தான். இவன் கொடுமை அக்கம் பக்கம் தெரிந்து, அவளது தந்தையின் காதுகளையும் எட்டியது.

                அலறியடித்து வந்தனர் பெற்றோர். உருக்குலந்து போயிருந்த மகளை காணவும் அதிர்ந்து போய், மகளிடம் நடந்ததை விசாரித்தனர். மருமகனை அழைத்து சமாதானம் செய்யவும், அவனோ, விரைத்து கொண்டு நின்றான். அவனுக்கு ஒத்துஊத சில சொந்தக்காரர்களை அழைத்து வந்தான். ஆளாளுக்கு பேசவும், அவன் தீர்மானமாக, கொஞ்சமும் கூசாமல் தன் மனைவியின் முன்னாலேயே, `இந்த நொண்டிய கட்டிகிட்டு நா என்ன சொகத்த கண்டேன். எனக்கு ஆம்புள புள்ள வேற இல்ல. பேசாம சின்னவள கட்டி தாங்க, நா ரெண்டு பேரையும் நல்லா வச்சிக்குறேன்’ ன்னு சொன்னான். இடிவிழுந்தது போலிருந்தது பெற்றோருக்கு. பாவம் லட்சுமி, அழுவதை தவிர அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. ``பாவம். அவனுந்தா என்ன செய்வான். அவன் கேக்குறது நியாயம் தானே’. அவனுக்கு ஜால்ரா போடவும் சிலர் இருந்தனர்.

               அழுதழுது ஓய்ந்து போன லட்சுமி தன்னை சுதாரித்து கொண்டு, சுவர்களை பற்றியபடி மெதுவாக எழுந்தாள். அவள் அப்பாவை நோக்கி,` போதும்பா, என்னால நீங்க அழுதது போதும். எனக்கு நீங்க எந்த கொறையும் வைக்கல. குமரியில்லாம கல்யாணமும் பண்ணியாச்சு, மலடில்லாம புள்ளையும் பெத்தாச்சு. போதும் நா வாழ்ந்தது. இனுமயும் இந்த மனுசங்கிட்டே நா சீரழிய வேண்டா, என்னால எந்தங்கச்சிங்க வாழ்க்க நாசமா போக வேண்டாம். என்ன உங்களோட கூட்டிட்டு போயிருங்கப்பா’ தோளில் சாய்ந்து கத்றிய மகளை அணைத்து கொண்டார் தந்தை. `இல்லம்மா வந்து ... ஏதோ பேச ஆரம்பித்த தந்தையிடம் தீர்மானமாக சொல்லி விட்டாள் லட்சுமி, தான் அவனுடன் வாழப் போவதில்லையென. யாருமே இதை எதிர்பார்க்கவில்லை, அவளது கணவன் உட்பட. கிணறு தோண்ட பூதம் புறப்பட்ட கதையாய், வாயடைத்துப் போனான். தலை குனிந்தபடி அவமானத்துடன் வெளியேறுவதை தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அன்று ஊரை விட்டுப் போனவன் தான், என்ன ஆனான் என்றே யாருக்கும் தெரியாது. யாரும் தேடவும் இல்லை. தன் அழகு மகள்களுடன் தன் பிறந்த வீட்டை தஞ்சம் புகுந்தாள் லட்சுமி. அவளை எந்த குறையுமில்லாது பார்த்துக் கொண்டதோடு, அவள் குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கினர், அவளது பெற்றோரும், அவளது உடன் பிறந்தோரும்...

Monday, February 15, 2010

தோழீ...

கடன் வாங்கிப் போன தோழி,

வரவே இல்லை...

கொடுத்ததே மறந்து போயிற்று.

பலமாதங்கள் கழித்து

பணம் மட்டுமே வந்தது.

சந்தோஷமாய் இருந்தது,

அவள் செளக்யமாய் இருக்கிறாள்

என்பது புரிந்ததினால்.


* * * * * *


தோழியிடம் வாங்கிய கடன்,

கொடுக்கவும் இயலாமல் - முகத்தில்

விழிக்கவும் முடியாமல்;

அன்பு பரிசாய் குழந்தைக்கு

அவள் அளித்த மோதிரம்,

பணமானது - மனம்

நிம்மதியானது.

Friday, February 12, 2010

சிவராத்திரி விரதமும், நானும்...

               சிவராத்திரி தினத்தை நிர்ணயிப்பதிலேயே இந்த முறை குழப்பம் ஏற்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் தீபாவளி வரும் போதே, இந்த ஆண்டு சிவராத்திரியும் தை கடைசிநாள் வருகிறது என அறிவிக்கப் பட்டு விட்டது. வழக்கமாக மாசிமாதம் சதுர்த்தசி நாள் தான் சிவராத்திரியாக கொண்டாட படும். கோகுலாஷ்டமி முடிந்த 184 வது நாளில் வரும் சதுர்த்தசியை மகாசிவராத்திரியாக கொண்டாடுவார்களாம்.அப்படித்தான் முதலில் அறிவிக்கப் பட்டது. பின்னர் மாசிமாதம் தான் வர வேண்டும் என மாசி 29 தான் சிவராத்திரி என அறிவித்திருக்கிறார்கள். சில இடங்களில் இன்று சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கிறார்கள். எங்கள் ஊரிலும் இன்று கொண்டாடப் படுகிறது.

               தீபாவளி, பொங்கல் அளவுக்கு இங்கே சிவராத்திரியையும் விசேஷமாக கொண்டாடுவார்கள். சொல்லப் போனால் இதை பெண்கள் திருவிழா என்றே கூறலாம். பெண்கள் அதிகமாக படிக்காத, வீட்டை விட்டு வெளியில் வராத காலங்களில், அவர்கள் சந்திக்க, உரையாட, விளையாடி மகிழ ஒருசில சந்தர்ப்பங்கள் மட்டுமே வாய்க்கும். அதனால் பெண்கள் மிக உற்சாகமாக கொண்டாடுவர். சிவராத்திரியன்று, ஒவ்வொரு தெருவிலும் ஏதாவதொரு வீட்டில் விரதமிருக்கும் பெண்கள் கூடுவார்கள்.அதிகாலை குளித்து பூஜை செய்து விரதம் தொடங்குவார்கள். அதிகாலை வெள்ளி {நட்சத்திரம்} மறையுமுன் தொடங்கி, மாலை வெள்ளி தெரியும் வரை பச்சை தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது. வெள்ளி பூத்தபின் ஒரு பெரியநெல்லிக்காயும், ஒரு தம்ளர் தண்ணீரும் அருந்தி விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.(பழரசமெல்லாம் கிடையாது.} மறுபடி குளித்து விட்டு கோயில்களுக்கு அத்தனை பெண்களும் ,அழகாக அலங்கரித்து கொண்டு ஒன்றாக செல்வர். ஊரின் எல்லாத் தெருப் பெண்களும் ஒரே சமயத்தில் கூடுவதால் கோயிலே வண்ணமயமாக கலகலன்னு இருக்கும். கோயில்களிலும் நான்கு கால பூஜை, இரவு முழுவதும் சொற்பொழிவு, என நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்பின் பெண்கள் அனைவரும் தத்தமது வீட்டு பட்சணங்களுடன், விரதமிருக்கும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து உண்பர். பின் இரவு முழுவதும் ஒரே விளயாட்டுதான். முன்பெல்லாம் குலை குலையா முந்திரிக்கா, கபடி எல்லாம் உண்டு. இப்போ, டிவிடி யில் படம் அல்லது டிவி என்றாகி விட்டது.ஆனால் இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டும். விரதமிருப்பவர்கள் தலைக்கு இவ்வளவு பணம், அரிசி என பிரித்து கொள்வர்.அடுத்தநாள் காலைஉணவு, இட்லி, சாம்பார், கேசரி, மதியம், சாதம், சாம்பார், அவியல், பாயாசம் என அந்த விரதமிருக்கும் வீட்டிலேயே விருந்து தயாரித்து கூடி இருந்து உண்பர். ஒரே விளையாட்டும், கூச்சலுமாய் இரண்டு நாட்கள் சந்தோஷமாய் கழியும்.

               நான் சிறுபெண்ணாக இருந்த போது, ஏழாவது படித்தேன் என நினைக்கிறேன், நானும் விரதமிருக்க ஆசைப் பட்டதால், அம்மா பக்கத்து வீட்டு அக்காக்களுடன் எனக்கும் ஒரு பங்கு கொடுத்து சேர்த்துவிட்டர்கள். `ஆனா சின்ன பொண்ணு எல்லாம் சாப்பிடாம இருக்கனும்னு அவசியமில்லை, நீ சாப்டுட்டு இரு’ என்ற க்ண்டிஷனுடன். வீட்ல அண்ணன்கள், தம்பி எல்லாம் ஒரே கேலி. `இது எங்கே சாப்டாம இருக்கும், கண்டிப்பா திருட்டுத்தனமா எதையாவது சாப்டுருவா ‘ என நக்கல் செய்யவும் எனக்கு ரோஷம் வந்துவிட்டது. பிடிவாதமா இருந்தே காட்டணும் னு ஒண்ணும் சாப்டாம இருந்தேன். பசி வயிற்றை கிள்ளியது. மத்தியானம் ஆனதும் தலை சுத்துற மாதிரி இருந்தது. வீட்டுக்கு வந்தா அம்மா வச்சிருந்த பருப்பு குழம்பும், வெண்டைக்கா பொரியலும் அன்னைக்கு பாத்து வாசமா தெரிஞ்சுது. சாப்டுரலாமான்னு சபலம் தட்டியது. அதுக்குள்ள தம்பி, `இதோ சாப்ட வந்துட்டா, தின்னி பண்டாரம் னு’ கேலி செய்தான். `நா ஒண்ணும் சாப்ட வரலை. சும்மாத்தான் வந்தேன்’ என மகா ரோஷமாய் ஓடி விட்டேன். சாயங்காலம் விஜியண்ணன்,கல்லூரியில் இருந்து வந்தவன், `இந்தா, உனக்காகத்தான் கொண்டு வந்தேன்’ என அவன் டிபன்பாக்சை கொடுத்தான்.திறந்து பார்த்தால், நான் பல நாட்களாய் கேட்டுக் கொண்டிருந்த `மல்பெர்ரி’ பழங்கள். கல்லூரியில் உள்ள மரத்தில் இருந்து பறித்து கொண்டு வந்திருந்தான். ஆசையா சாப்பிட போனவள், நிமிர்ந்து பார்த்தால் வீட்டில் எல்லோரும் என்னை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது தான் விரதம் நினைவு வந்தது. பிறகென்ன, டிபன்பாக்சை வைத்துவிட்டு விரதமிருக்கும் வீட்டுக்கு போய், `வெள்ளி தெரியுதா வெள்ளி தெரியுதா ன்னு வானத்தையே பாத்துட்டு இருந்தேன். தொலை தூரத்தில் ஒரு வெள்ளி என்னைப் பார்த்து கண்சிமிட்டவும், உற்சாகமாய்,` அதோ, அதோ’ என வெற்றிகரமாய்.விரதம் முடித்துக் கொண்டேன். அதன்பின் உயர்நிலை பள்ளி முடியும் வரை விரதம் தொடர்ந்தது. பின் கல்லூரி, திருமணம், சிறுகுழந்தைகள், என விட்டிருந்த விரதம் இப்போது நான்கைந்து ஆண்டுகளாக மறுபடி தொடரப்படுகிறது.

Monday, February 8, 2010

நினைவுகளின் பக்கங்கள்

               டீனேஜ் டைரியின் பக்கங்கள் எனும் தொடர்பதிவுக்கு நம் முல்லை அழைத்திருந்தார்கள். அந்த வயதில் டைரி எழுதும் பழக்கம் இருக்கவில்லை. இப்போதும் இல்லை. உண்மைகளை எழுத முடியாததால் டைரி எழுதுவதில்லை என்று யாரோ ஒரு மேதை குறிப்பிட்டிருந்தார். நானும் என்னை மேதை என்று நினைத்து கொண்டு டைரி எழுதுவதில்லை. டைரி எதுவும் இல்லாததால் என் நினைவின் பக்கங்களில் இருந்து சிலவற்றை உங்களோடு பகிர்கிறேன்.

               நான் பள்ளியில் படித்த காலங்களில் யூனிபார்ம் பாவாடைதாவணிதான். அதுவும் தாவணியை பின்னால் `v shape' வர்ற மாதிரியெல்லாம் கட்டக் கூடாது. 2 1/2 மீட்டர் வாயில் தாவணி, முன்னால் 2சுருக்கு வைத்து தான் கட்ட வேணடும். நல்ல திக்கு பச்சை கலரில் பாவாடை தாவணி, ஒற்றை பின்னல், கருப்பு ரிப்பன் வைத்து மடித்து கட்ட வேண்டும். ஒரு மார்க்கமாக இருப்போம். என் ப்ரெண்ட், சுமதி னு ஒரு பொண்ணு, ஆசையா 2 மீட்டர் ல தாவணி எடுத்து வி ஷேப்ல கட்டிட்டு வந்தா. அசெம்பிளி யில நிக்கவச்சு H.M விட்ட டோஸ் ல, மறுநாளே ஒரு தாவணிய ரெண்டா வெட்டி மத்த தாவணியோட ஒட்டு போட்டு, அடக்க ஒடுக்கமா கட்டிகிட்டு வந்தா.

               டீனேஜ் டைரி குறிப்பு, சி.பி.ஐ டைரி குறிப்பு மாதிரி சுவாரஸ்யமா இல்ல னு பாக்குறீங்களா?. நான் படித்ததெல்லாம் முழுக்க முழுக்க பெண்கள் பள்ளிதான். கிராமம் வேறு, அதனால் பேப்பர் வைக்கிறது, ஸ்டிக்கர் ஒட்டுறது எல்லாம் கிடையாது. அதிலும் மூன்று அண்ணன்கள், ஒருதம்பி என நாலு பையன்கள் இருக்கும் வீட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்ய யாருக்கு துணிச்சல் வரும். காதலுக்கு மரியாதை பாணியில் வாங்கி கட்டிக்கொள்வோம் என்ற பயமாகக் கூட இருக்கலாம். நாங்கள் பள்ளி செல்லும் வழியில் பள்ளிக்கு கொஞ்சம் முன்னால் ஒருகடை உண்டு. அதில் பையன்கள் கூட்டமாய் நிற்பான்கள். அந்த கடையை தாண்டும் வரை நாங்கள் எதுவும் பேசமாட்டோம். ஆனாலும் ஏதாவது சொல்லி சிரிப்பான்கள். எனக்கு வில்லன் என் பெயர் தான். எப்படியோ என் பேரை தெரிஞ்சுகிட்டு, நான் போகும் போதெல்லாம் “அம்பிகையே, ஈஸ்வரியே, என்னை ஆளவந்து கோயில் கொண்ட குங்குமகாரி ”ன்னு பாடுவான்கள். நானும் இரண்டொரு நாள் முறைத்துப் பார்த்தேன். அதற்குள் பள்ளி ஆண்டுவிழா வர, அதில் ஒரு நாடகத்தில் நான் ராமராக நடித்தேன். தசரதராக நடித்த என் தோழி எபனேசர், நிஜமாகவே அப்பா மாதிரி இருப்பாள்.அப்படி ஒரு ஆகிருதி, குரல். நாடகம் முடிந்த மறு நாளிலிருந்து, என்பெயர் மாறி விட்டது. ராமர் ராமர் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். உடன்வந்த என் நாடக அப்பா, `எவன் ல‘ அது ன்னு கட்டைகுரலில் அதட்ட, அனைவரும் கப்சிப். நாங்கள் H.M. இடம் புகார் செய்ய, அவர்கள் கடைக்காரரை கூப்பிட்டு மிரட்டிய மிரட்டலில் மறுநாளில் இருந்து கடை, கடையாக மட்டும் இருந்தது.

               கல்லூரியில் படிக்கும் போது தோழியொருத்தி, சகதோழிகளுடன் சினிமாவுக்கு போயிருக்கிறாள். அவளது அண்ணன், அவளை பார்த்துவிட்டு, தியேட்டரில் வைத்தே அவளை அடித்து அழைத்துப் போயிருக்கிறான். இப்படியும் இருப்பார்களாவென அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் வீட்டில் அம்மாவோ, அப்பாவோ, அண்ணன்களோ, இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் உடை அணிய வேண்டும் என எனக்கு எந்த கோடுகளும் கிழிக்கவில்லை. அண்ணன்கள், தம்பியோடு சண்டைகள், விளையாட்டுகள் இருந்தனவே தவிர சந்தேக பார்வைகளோ, மிரட்டல்களோ ஒரு நாளும் இருக்கவில்லை. என்னை ஒரு இளவரசியாகத்தான் வைத்து இருந்தார்கள்.



               என் சந்தோஷமான நாட்களை நினைவுகூரச் செய்ததற்காக, முல்லை உங்களுக்கு என் அன்பும், நன்றியும்..


               நானும் தொடர்பதிவுக்கு யாரையாவது அழைக்க வேண்டுமே!. ஹூசைனம்மா, கண்ணகி, சங்கவி, ராகவன், விருப்பமிருந்தால் தொடருங்களேன்...

Thursday, February 4, 2010

சந்தோஷ கல்யாணம்.

பெண்பார்க்கும் படலம்

இல்லாமல;

வரதட்சணை, ரொக்கம்

இல்லாமல்;

பெண்ணுக்கு நகைநட்டு, சீர்செனத்தி

இல்லாமல்;

மாப்பிள்ளை `முறுக்கு’

இல்லாமல்;

பெண்ணுக்கு செயற்கைபூச்சு, ஒப்பனை

இல்லாமல்;

பயமும் பதட்டமும்

இல்லாமல்;

பிள்ளைகள் பெற்றோருக்கு

செய்து வைக்கும் ஒரு

சந்தோஷ கல்யாணம்;

அப்பா அம்மாவின்

அறுபதாங் கல்யாணம்.
.