Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Friday, January 1, 2010

மனோரஞ்சிதத்தின் மணமாக....

சுவர்களை புதிது புதிதாக பூக்கள், படங்கள் அலங்கரிக்கின்றன. பழைய காலண்டர்கள் குப்பையில் எறியப் படுகின்றன. கடந்த வருடத்தின் நனவாகாத கனவுகளும், கவலைகளும் கூட. தொலைவில் வெடிச்சத்தங்கள், புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அனைத்து ஆலயங்களிலும் விசேஷ பூஜைகள், அனைத்து பத்திரிகைகளிலும் புதுவருட ராசிபலன்கள், அனைத்து டிவி சேனல்களிலும் இனிய புத்தாண்டே, என சிறப்பு ஒளிபரப்புகள், பெருநகர்களில் பார்ட்டிகள், விருந்துகள் என வழக்கமான ஆரவாரங்களுடன் புத்தாண்டு மலர்கிறது.

கடந்து வந்த பாதையின் சுவடுகள் மறையத் தொடங்குகின்றன. நிறை, குறைகள் சிந்திக்கவைக்கின்றன. நிறைகள் கண்களுக்கு புலப்படுகின்றன. குறைகள் கருத்துக்கு மட்டுமே தெரிகின்றன. களைய முயல்வோம்.

இதோ முடியும் இவ்வாண்டின் இறுதியில் தான் வலையுலகில் பிரவேசித்தேன்.
தளர்நடை பழகி ஐந்து எட்டுகள் தான் வைத்திருக்கிறேன். அதற்குள், எத்தனை வரவேற்புகள்
வாழ்த்துகள், பாராட்டுக்கள்.... இத்தனைக்கும் தகுதியானவள்தானா தெரியவில்லை. ஆனால் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியும் என ந்ம்பிக்கை இருக்கிறது. அன்பின் எல்லை விரிந்து கொண்டேப் போகிறது.
கண்ணுக்கு தென்படாமல், மனதை மயக்கும் மனோரஞ்சித மலரின் நறுமணமாக, முகமறியா, தொலைதூரங்களிலிருந்து வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களின் நேசம் நெகிழச் செய்கிறது. இந்த புத்தாண்டு அனைத்து மனதின் ஆசைமலர்களையும் மலர செய்வதாக அமையட்டும். அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.