Wednesday, April 6, 2011

`அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’



சாந்தமான முகம், அடக்கமான அழகு, இயல்பான குணசித்திர நடிப்பால் நம்மைக் கவர்ந்தவர் நடிகை சுஜாதா. இன்று, தன் 58 வது வயதில் காலமானார் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இவர் சில வருடங்களாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தீவிர சிறுநீரகக் கோளாறால் அவதிப் பட்டு வந்த அவர், மூன்று நாட்களுக்கொரு முறை `டயாலிஸஸ்’ செய்து வந்தார். திடீரென ஏற்பட்டுவந்த மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.


திரையுலகுக்கே உரித்தான வதந்திகளிலோ, கிசுகிசுக்களிலோ அதிகம் சிக்காதவர், மிக டீசெண்ட்டான நடிகை எனப் பெயரெடுத்தவர். அவர் உடல்நலமின்றி இருந்த செய்தி அதிகம் வெளியே தெரியாத நிலையில் அவரது மரணம் ஒரு எதிர்பாரா அதிர்ச்சியே!


டைரக்டர் கே. பாலச்சந்தரால், `அவள் ஒரு தொடர்கதை’யில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். நாயகியை மையமாக கொண்ட படமென்பதால் முதல் படத்திலேயே பெரிதும் பேசப்பட்டார். அவர்கள், அந்தமான் காதலி, தீபம், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, விதி என பல படங்களில் நடித்திருந்தாலும், மறக்கமுடியாத படம் என்றால் `அன்னக்கிளி’ தான்.


இளையராஜாவின் அறிமுகப் படம். இப்பட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தன. `மச்சானப் பாத்திங்களா...” தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிய பாடல் அது. கேட்பவரை தலையாட்டி தாளம் போடவைக்கும் பாடல். இப்படி ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு இவ்வளவு நளினமாக ஆடமுடியுமா என வியக்க வைப்பார் சுஜாதா.







அன்னக்கிளி படம், பார்த்த சில நாட்கள் மனதை என்னவோ செய்தது. `அன்னம், உன்னப் பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு’ இந்த வரிகள் நினைவிலாடிக் கொண்டே இருக்கும். அன்னமாகவே வாழ்ந்திருப்பார் சுஜாதா.



ஆ...ஆ..உருக வைக்கும் ஜானகியின் ஹம்மிங். அன்னக்கிளி உன்னைத் தேடுதே...!





சுஜாதா...! எத்தனையோ படங்களில், பாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் அன்னக்கிளியாக நெஞ்சில் நிறைந்திருக்கிறார்.

.

Tuesday, March 22, 2011

விளையாட்டு அம்மன்...

.குழந்தைக்கு உடம்பு அனலாக கொதித்தது. கண்கள் இரண்டும் இரத்தமாய் சிவந்திருந்தன. பச்சதண்ணீராக மூக்கில் ஒழுகிக் கொண்டிருந்தது. `எத்தன நாளாக் காய்ச்சல் அடிக்குது? குழந்த ஒழுங்கா பால் குடிக்கிறானா?’ குழந்தையின் நெஞ்சில் ஸ்டெத்தை வைத்தபடியே கேட்ட டாக்டரம்மாவுக்கு, `நேத்து ராத்திரில இருந்து தான் காய்ச்சல்; ஒழுங்கா பால் குடிக்க முடியல டாக்டர்’ என்றாள் கவலையோடு அவள். `எத்தன மாசம் ஆச்சி? மீஸில்ஸ் வேக்சினேஷன் போட்டாச்சா? என்றவர்க்கு, `எட்டு மாசந்தான் ஆச்சிமா, தடுப்பூசி பத்துல தான போடனும்னு சொன்னீங்க என்றாள்.


L மாதிரியான உபகரணத்தை நாக்கில் வைத்து அழுத்திய படி தொண்டையை பரிசோதித்தவர், தொண்டையல்லாம் செவந்து போய் இருக்கு; முகமும் பளபள ன்னு இருக்கதப் பாத்தா அநேகமா குழந்தைக்கு மீஸில்ஸ் போடும்னு நெனைக்கிறேன். நாளைக்கு வேர்க்குரு மாதிரி rashes தெரிய ஆரம்பிச்சுரும், ரெண்டு மூணு நாள்ல காய்ச்சல் கொறஞ்சிரும், ஊசி வேண்டாம், இந்த சிரப்ப அஞ்சு நாளைக்கு, தினம் மூணு வேள, இந்த மூடிக்கி ஒரு மூடி குடு. குளுகோஸ் போட்டு தண்ணி நெறைய குடிக்க குடு, எதுவும் தொந்திரவு இருந்தா கூட்டிட்டு வா ‘ அறிவுறுத்திய டாக்டரம்மாவுக்கு நன்றி கூறியவள் குழந்தையை தோளில் போட்டு துண்டால் மூடியபடி வீட்டுக்கு கிளம்பினாள்.


டாக்டரம்மா கூறியது போலவே மறுநாள் சிவப்பாய் ரேஷஸ் வேர்க்குரு போல தெரிந்தன. வீட்டில் இருந்த அவளது பாட்டி, வேலைக்காரம்மாஆகியோர், ` இதென்ன செய்யும், சிச்சிலிப்பான் அம்மன், சும்மா வெளயாட்டு அம்மன் ரெண்டு நாள்ல எறங்கிரும்’ என்று ஆறுதல் கூறினார்கள். `அம்மா, மாரித்தாயே! பச்சப் புள்ள, பாரம் தாங்காது; சீக்கிரமா எறங்கிருமா’ உனக்கு துள்ளுமாவு இடிச்சு வைக்கிறேன்’ பாட்டி வேண்டிக் கொண்டாள். வெளிவாசல் நடைல ஒருக் கொத்து வேப்பிலையை சொருகி வைத்தார்கள். `ஆத்தா வந்திருக்கா; சுத்தபத்தமா இருக்கணும், தெரிஞ்சுதா’ என்றாள் வேலைக்காரம்மா இவளிடம் தனியாக. புரிந்தவளாய் தலையை ஆட்டினாள் இவள். `தெனம் அந்தியில, அஞ்சாறு வேப்பங்கொழுந்து, எள்ளு போல மஞ்சள், ஒரு சின்ன துண்டு சுக்கு தட்டி போட்டு கொதிக்க வச்சு கொடும்மா, இது தாய் மருந்து, வேற இங்கிலீசு மருந்தெல்லாம் வேண்டாம் என்றார்கள். இவளும் தலையை ஆட்டினாள். ஆனால் குழந்தை எல்லா மருந்தையும் வாந்தியெடுத்தான்.


மறுநாள் பொங்கல். ஊரே களை கட்டியிருந்தது. `வீட்டுல அம்மன் போட்டிருந்தா வாசல்ல பொங்கக் கூடாது’ என்றாள் பாட்டி. போன வருஷம் அவளுக்கு தலைப் பொங்கல். வீட்டின் முற்றத்தில், ஒரே நேரத்தில் மூணு பானை வச்சி பொங்கல் பொங்கினார்கள். ஒண்ணுல சர்க்கரைப் பொங்கல், ரெண்டுல பால் பொங்கல். பனைஓலைய வச்சி தீ போட்டதில முற்றமெல்லாம் ஒரே புகை மண்டல். இவளுக்கு அப்போது எட்டாவது மாசம். மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள். புகைமூட்டத்தில ஒரே தும்மலாக வந்தது. அடிவயிற்றை பிடித்துக் கொண்டு கஷ்டப் பட்டு தும்மிக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டிருந்த அவள் மாமியார், (அவுங்க பட்டணத்துல இருக்கவங்க. ஏற்கெனவே வெளில வச்சு பொங்குறது புடிக்காது) இதுதான் சமயமுன்னு,`இப்போ யாரு இப்படி ஓலைய வச்சு தீ போட்டு வெளிய வச்சு பொங்குறா? பேசாம அடுத்த வருஷம் உள்ள, அடுப்புல வச்சி பொங்க வேண்டியது தான் என்றார்கள். அத ஞாபகப் படுத்திக் கொண்ட பாட்டி, `ஹூம்... போன வருஷம்... நல்ல நாளும் அதுவுமா எந்த நேரத்துல உள்ள வச்சி பொங்கனும் னு சொன்னாளோ, இந்த வருஷம் பொங்க முடியாமலே போச்சி’ எரிச்சலோடு அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.



நாலைந்து நாள் கழித்து `அம்மன்’ இறங்கியதும், முகத்தின் பளபளப்பு குறைந்து சகஜ நிலை வந்திருந்தது. பானை தண்ணியில் வேப்பிலை போட்டு வெயிலில் வைத்து அந்த தண்ணீரால் தலைக்கு ஊற்றி `அம்மனுக்கு போக்கு’ விட்டார்கள். குழந்தை சாதாரணமாய் விளையாடிக் கொண்டு தானிருந்தான். இரண்டு நாட்கள் கழித்து குழந்தைக்கு மறுபடி மேல் காய்ந்தது. இவள் காய்ச்சல் சிரப்பை ஊற்றினாள். ஊரிலிருந்து வந்திருந்த அவள் அம்மா, `அம்மன் போட்டு தலைக்கு தண்ணீ ஊத்துன புள்ளைக்கு காய்ச்சல் திருப்பக் கூடாது. வெளையாட்டுக் காரியமில்ல’ ன்னு சத்தம் போட்டு டாக்டரிடம் கூட்டிப் போனாள்.


`நான் தந்த சிரப்பக் குடுத்தியா ? கேட்ட டாக்டரம்மாவிடம், இங்கிலீஸ் மருந்து குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்றாள் தயங்கியபடி. `என்னம்மா இது? இப்பப் பாரு, குழந்தைக்கு ரெண்டு லங்ஸ்லேயும் சளிக் கட்டியிருக்கு. நிமோனியா அட்டாக் ஆன மாதிரி தெரியுது’, எக்ஸ்ரே எடுத்து வரச் சொன்னார். நிமோனியா கன்ஃபார்ம் ஆனதும் குழந்தையை அட்மிட் செய்தார்கள். குழந்தை மூச்சு விட சிரமப் பட்டான். பொட்டுதண்ணீ உள்ள எறங்கல. பச்சத் தண்ணியா வயிற்றோட்டம் வேற. குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள். எட்டு மாதக் குழந்தையை, கைகால்களை அசைக்க விடாமல் கட்டுப் படுத்து வதற்குள் இவர்களுக்கு மூச்சு முட்டியது. கைகால்களில் அங்கங்கே குளுக்கோஸ் ஏற்றிய இடம் வீங்கிப் போனது. மாற்றி மாற்றி ஊசிப் போட்டார்கள்.


பார்க்க வந்த பெரியவர்கள், `இதே பேறு கால ஆசுபத்திரி; கண்ட பொம்பளையும் வருவா, அந்த தீட்டு வாடைக்கே புள்ளைக்கு வாயாலயும் வயித்தாலயும் வரும். பக்கத்து ஊரு வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போயி வேரு வாங்கி கட்டினா எல்லாஞ் சரியாயிரும்’ என்றனர். `அம்மங்கண்ட வீட்டுல சுத்தமா இருக்கலன்னா இப்பிடித்தா ஆவும்’ இது பக்கத்து வீட்டு பெரியம்மா. வயித்தெரிச்சல் தாங்க முடியாம `கொஞ்சம் பேசாம இருக்கீங்களா?’ கத்தினாள் இவள்.


ஒரு வாரத்தில் குழந்தைக்கு சளியும் காய்ச்சலும் குறைந்தது. `இன்னொரு எக்ஸ்ரே எடுக்கனும், மீஸில்ஸ் வந்து நிமோனியா அட்டாக் ஆனா ப்ரைமரி காம்ப்ளெக்ஸ் வர வாய்ப்பிருக்கு’ என்றார் டாக்டர். சொன்னது போலவே ப்ரைமரி காம்ப்ளக்ஸ் அட்டாக் ஆகியிருந்தது. `விளையாட்டு அம்மன், ஒண்ணும் செய்யாதுன்னு சொன்னாங்களே டாக்டர்’ என்றவளிடம் ,`மீஸில்ஸ் வந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப கொறஞ்சிரும், உன் பையன் ஏற்கனெவே நோஞ்சான். அதுலயும் தடுப்பூசி போடுற்துக்கு முன்னாலயே அம்மன் போட்டுருச்சி. நீ வேற ஆண்டிபயாடிக் மருந்த ஒழுங்கா குடுக்கல. அதனால தான் இவ்வளவு கஷ்டம்’ விளக்கியவர் `இனிமேலாவது மருந்து, மாத்திரைகளை ஒழுங்கா கொடு. மூனு மாசம் தொடர்ந்து குடுக்கனும்; ஒருநாள் கூட நிறுத்தக் கூடாது’ எச்சரித்து அனுப்பினார்.

.

Monday, March 14, 2011

கொஞ்சம் சிரிக்கலாமா....?



கொஞ்சம் சிரிக்கலாமா....?

இ.மெயிலில் வந்த படங்கள் இவை.

உங்கள் பார்வைக்காக...









































vijay to star in Dhoom 3!!!!




Excited?







After Sivaji... The NEXT BIG BLOCKBUSTER!!!

Just wait till you see vijay bike ride in his next movie...( just like he won in KURUVI CAR race by holding accelerator wire using histeeth !!!!!)

IN HIS NEXT MOVIE DHOOM-3


Just go through the mail step by step...
....
...
..
....
vijay is Chasing Villains
...
...
....
...
...
...
His bike is almost out of gas. NO FUEL!!!
....
...
....
....
....
What would you do???
..
...
...
...
...


Give up, of course. YOU are NOT vijay.
...
...
...
...
....

So what would HE do???
..
...
...
....
....


.

Monday, March 7, 2011

பெயர் புரா(கார)ணம்; தொடர்பதிவு.

.

`75+ லும் சாம்பியன்’ என்று மாமாவைப் பற்றி ஒரு பதிவு எழுதி்யிருந்தது நினைவிருக்கலாம். அதில் சண்டிகரில் நடைபெறவிருக்கும் `ஆல் இண்டியா சாம்பியன்’ போட்டிகளில் மாமா கலந்து கொள்ளவிருப்பதாக எழுதியிருந்தேன். மாமா அதில் கலந்து கொண்டு, குண்டு எறிதலில் மூன்றாவது பரிசு வாங்கியி் ருக்கிறார்கள் என்பதை சந்தோஷத்துடனும், பெருமையுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.


`பெயரின் மேல் காதல்’ இந்த தொடர்பதிவுக்கு ஸ்ரீஅகிலா அழைத்து இருந்தார். பெயர் என்பது நமக்கான அதிமுக்கியமான அடையாளம். மற்றவர்கள் நம்மை அழைக்கவும், நம்மை நாமே அறிமுகப் படுத்திக் கொள்ளவும் அவசியமான தொன்று. பிறந்த சில மாதங்களிலேயே நம் பெயரை, உணர்ந்து கொள்கிறோம். அனால் கொஞ்சம் வளர்ந்த பிறகுதான், நம்ம பேரு நல்லா இருக்கா, ஸ்டைலா இருக்கா என்றெல்லாம் யோசிக்கிறோம்.


பிறந்த நட்சத்திரம், தேதிக்கு பொருத்தமாக சிலர்(பலர்) பெயர் வைக்கிறார்கள். குடும்பத்தில் பெரியவர்கள், , தலைவர்கள், பிடித்த நடிகர், நடிகை பெயர் இப்படி ஏதாவது... சிலர் கடவுள் பெயரும் வைக்கிறார்கள். என்பெயர் அந்தவகை தான். ஆனால் என் ஜாதக பெயர் மிக நீ......ளமானது. குணலோஜன மங்கள அம்பிகா. நல்லவேளை, ஸ்கூலில், அம்பிகா மட்டும் தான். ஆசிரியர்கள் பிழைத்தார்கள் (அட்டெண்டென்ஸ்) எடுக்க ரொம்ப கஷ்ட பட்டிருப்பார்கள். நானும் தான். எல்லோரும் எவ்ளோ கேலி பண்ணியிருப்பார்கள். அப்பாடா!


ரொம்ப நாள் வரை குடும்பத்தில் எல்லோருக்கும் நான் `பாப்பா’ தான். கொஞ்சம் வளர்ந்தபின் இந்த பாப்பா வேண்டாமென சண்டை போட்டிருக்கிறேன். ஆனாலும் அம்மாவுக்கு நான் `பாப்பா’ வாகத்தான் இருந்தேன். அதுவும் மிகச் செல்லமாக `பாப்பாம்மா. ஒருதடவை இப்படித்தான், எங்கேயோ போவதற்காக பஸ் ஏறும்போது, (அப்போது நான் காலேஜ் படித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன்) `பாப்பா, பார்த்து... பார்த்து ஏறுமா’ என அம்மா பாசமிகுதியில் சொல்ல, ஏதோ சின்ன பாப்பா, பஸ் ஏறமுடியாமல் கஷ்ட படுது போல ன்னு எல்லோரும் எட்டிப் பார்க்க, வீட்டுக்கு வந்து அம்மாகிட்டே ஒரே சண்டை. இருந்தாலும் அம்மாவுக்கு நான் பாப்பாம்மா தான். அம்மா இறந்தபின் இந்த பாப்பாம்மா என்ற அழைப்புக்காக மிகவும் ஏங்கியிருக்கிறேன். ஒருநாள் என்சின்ன மகன் ஏதோ சேட்டை செய்தானென்று நான் கோபத்தில் கத்த, அவன் மிக கூலாக, `என்ன பாப்பா, எதுக்கு கத்துற’ என்றதும் சந்தோஷத்தில் அமைதியாகி விட்டேன்.


அப்பாவுக்கு நான் எப்பவும் `அம்பிமா’ தான். இதைப் பார்த்து என் பையன்களும் அம்பிமா என்றே அழைப்பார்கள். இதென்ன, இப்படி பேர் சொல்லிக் கூப்பிடுறாங்க என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பேர் சொல்லத்தானே பிள்ளைகள், சொல்லட்டும் என்பேன். இதைப் போலவே என் அண்ணன் மகள், என் கணவரின் தம்பி பெண்கள் எல்லோருக்குமே நான் அம்பிமா தான். பெரியம்மா, அத்தை, இவைகளைவிட அம்பிமா தான் பிடிக்கிறது. பக்கத்துவீட்டு சிறுமிகள் அம்பிகா அக்கா என்று அழைப்பதை, என் இரண்டாவது அண்ணன், `அம்பி காக்கா’ என்று பிரித்துக் கூப்பிட்டு கடுப்படிப்பான்.


அம்பிகா என்ற பெயர் எனக்கு பிடித்தமானதாக தான் இருந்தது, ஒரே ஒரு விஷயத்தை தவிர, `அ’ வில் ஆரம்பிப்பதால் எக்ஸாம் ஹாலில் முதல் பெஞ்ச் சில் அமர்ந்திருப்பேன். அப்படி இப்படி திரும்பக் கூட முடியாது. முதலில் என்னிடம் தான் பேப்பர் வாங்குவார்கள், பிடுங்குவார்கள். எரிச்சலாய் வரும். கல்லூரியில் படிக்கும் போது, எனக்கு அடுத்தது அனார்கலி என்னும் பெண். லாயர் பீரியட்ல அட்டெண்டென்ஸ் எடுக்கும் போது, எங்கள் இரண்டு பேர் பெயரையும் வாசித்து விட்டு,` என்ன இலக்கிய காதலர்கள் பேரா இருக்கே’ எனவும், எங்களுக்கு அந்த பெயரே செல்லப் பெயரானது.


கிராமங்களில் நிறைய வித்தியாசமான பெயர்கள் வைப்பார்கள். ஒரு பையன் பெயர் `கப்பல்’. அந்த பையனுக்கு முன்னால் மூன்று குழந்தைகள் பிறந்து இறந்து விட்டதால், அந்த பையனுக்கு இப்படி ஒர் பெயர் வைத்தார்களாம்.


ஒரு பேனா வாங்கினாலோ, அல்லது எதையாவது எழுதிப் பார்க்க வேண்டுமென்றாலோ, அநேகர் முதலில் எழுதிப் பார்ப்பது தம் பெயரைத்தான், காதலர்கள் வேண்டுமெனில் விதிவிலக்காக இருக்கலாம். இது ஒரு மனோ தத்துவ ரீதியான உண்மை.


சிலருடைய பெயர்கள் நம்மை மிகவும் ஈர்க்கக் கூடியவையாய் இருக்கும். என்னோடு கல்லூரியில் படித்த இரட்டை சகோதரிகள் பெயர்கள், மதிவதனா, மதனகீதா, மிக அழகான பெயர்கள். அதேபோல் பதிவுலகில் `சந்தனமுல்லை’ யின் பெயரும் மிகவும் பிடித்த, அழகான பெயர். சமீபத்தில் ஒரு டாக்டர் தம்பதியினர், இருவரும் அமெரிக்காவில் இருக்கின்றனர், தங்கள் பெண்ணுக்கு `இளவேனில்’ எனப் பெயர் வைத்திருப்பதாக கூறிய போது ஆச்சர்யமாக இருந்தது.


இது ஒரு தொடர் பதிவு. யாரை அழைப்பது என்று தெரியவில்லை. விருப்பமிருப்பவர்கள் தொடருங்களேன்....


.

Friday, February 25, 2011

பதிவில் லைவ் கிரிக்கெட் பார்க்க....

பதிவில் லைவ் கிரிக்கெட் பார்க்க....

இதற்கான லிங்க் ஐ என் மகன் அனுப்பியிருந்தான்.






.

Wednesday, February 16, 2011

மனப்பிறழ்வு..

`தொரலிங்கத்துக்கு பைத்தியம் புடிச்சிட்டாம்’ தெரு முழுசும் ஒரே பேச்சாகக் கிடந் தது. தொரலிங்கம் சுபாவத்தில் ஒரு அப்பிராணி. குரலுயர்த்திப் பேசவோ, சண்டை யிடவோ தெரியாது. அப்படிப் பட்டவன் தான், இப்போது திறந்த வாய் மூடாமல் பேசிக் கொண்டே யிருக்கிறான். ஒரே சொற்பொழிவுதான். அதுவும் எப்படி, பழைய தமிழ் படங்களில் பேசுவார்களே, அப்படி தூய தமிழில் பேசுகிறான். அவன் மனைவி ராஜம் செய்வதறியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். `எந் தலவிதியா இது, நல்லா யிருந்த மனுஷன் இப்படி கோட்டி புடிச்சி பேசுராறே, நா என்ன பண்ணுவேன்’ ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறாள்.


தொரலிங்கத்துக்கு அம்மா கிடையாது. சின்ன வயசிலேயே இறந்து போயிட்டாங்க. மாற்றாந்தாயிடம் தான் வளர்ந்தான். கொடுமை என்றில்லாவிட்டாலும் பெரிய ஒட்டுறவோ நெருக்கமோ கிடையாது. இரண்டு தம்பிகள், தங்கையிடமும் அப்படியே. சென்னையில் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்தான். அப்போது தான் அவனுக்கு கல்யாணமும் முடிவாகியது. பொண்ணு அதே ஊர், அதே தெரு தான்; நாலைந்து வீடுகள் தள்ளி. சின்ன வயசுலப் பார்த்திருக்கிறான். ஆளு நல்ல அம்சமா தான் இருப்பாள். சந்தோஷத்தில் மிதந்தான்.


அவனுக்கு பேசிவைத்திருந்த ராஜமோ சுபாவத்தில் அவனுக்கு எதிர்மாறானவள். வாயாடி, மகா கர்வி. மாநிறம் தான் என்றாலும் `பளிச்’ ன்னு இருப்பாள். ஐந்து தங்கைகள், ஒரு தம்பி என பெரியக் குடும்பம் அவளுடையது. அப்போது இவளுக்கு 18 வயது தான் ஆகியிருந்தது. மாப்பிள்ளை தொரலிங்கத்தை அவளுக்கு அறவே பிடிக்க வில்லை. குள்ளமா இருப்பான். கொஞ்சம் கூன் வேற போடுவான். ரெண்டு கையும் கொஞ்சம் திருகினாப்புல இருக்கும். ஒரு கால் கொஞ்சம் கட்டை என்பதால் நடக்கும் போது ஒரு மாதிரி குதிச்சி குதிச்சி நடக்குற மாதிரி தெரியும். எரிச்சலா வந்தது. அம்மாவிடம் முணங்கிப் பார்த்தாள், மூஞ்சிய காட்டிப் பார்த்தாள். எதுவும் நடக்க வில்லை. வாய மூடிட்டு சும்மாக் கிட, நாம இருக்குற நெலமைல இதவிட நல்ல மாப்ள கெடைக்க மாட்டான். அவனுக்கு என்ன கொறச்சல் ’என மகளை ஒரேயடியாக அடக்கி விட்டாள்.


அத்தனைக் கோபத்தையும் தொரலிங்கத்து கிட்டே காட்டினாள். `உம்மேல ஒரே வீச்சமா வீசுது, கத்தாழ நாத்தம் அடிக்குது, தூரப் போ என விரட்டுவாள். ஒழுங்கா சவரம் செய்யப்படாமல் வளர்ந்திருந்த தாடியப் பாத்து, `ஆட்டு தாடி மாதிரி இருக்கு. பட்டணத்தில் பூதம் ஜீ.பூம்பா’ என்பாள். அவன ஒரு மனுசனாவே மதிக்க மாட்டாள். பாடாப் படுத்தினாள். அவன் `என்ன ராஜம், கொழம்பு இப்படி யிருக்கு’ என்றால் போதும்; வேற வினையே வேண்டாம். பொழிஞ்சு தள்ளிருவாள். `உம்மூஞ்சிக்கு இது போதும், பேசாம தின்னுங்க’ என்பாள். ஆனாலும் கூட அவள் காலால் இட்ட வேலை களை இவன் தலையால் செய்து முடிப்பான். தண்ணி புடிச்சிக் குடுப்பான், துணி தொவச்சிக் குடுப்பான், சமயத்துல வாசல் பெருக்கி தெளிக்கவும் செய்வான். உள்ளூர்லயே ஒரு காண்ட்ராக்டர் கிட்ட வேலைக்குப் போனான. நல்ல உழைப்பாளி அவன். உடம்புக்கு சரியில்ல ன்னாலும் லீவு போட விட மாட்டாள். `உடம்புக்கு என்ன கொள்ளை, பேசாம ஒரு மாத்திரைய முழுங்கிட்டு வேலைக்கு போற வழியப் பாரு’ என்று விரட்டி விடுவாள். மனைவி அமைந்தது அவனுக்கு ஒரு சாபமாகவே ஆகிப் போனது..


எப்படியோ ரெண்டு பொண்ணுங்க பொறந்துச்சுங்க. மூத்தவ அப்படியே தாயைக் கொண்டிருந்தாள்; தோற்றத்திலும், குணத்திலும். சின்னவ அப்படியே தகப்பன எங்கேன்னு இருந்தாள். இதோ முப்பது வருச குடும்ப வாழ்க்கையும் கழிந்து விட்டது. போன வாரம் தான் ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் நடந்தது. கல்யாணமான மூன்றாவது நாளில் இருந்து தான் இவன் இப்படி பேச, சிரிக்க ஆரம்பித்தான்.


கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தவன், இப்போது கம்பீரமாக பேசலானான். முகத்தில் ஜீ.பூம்பா தாடியெல்லாம் இல்லை. மகள் கல்யாணத்திற்காக ஷேவ் செய்திருப்பான் போலும். `ஏய் , ராஜம், இங்கே வா’ கம்பீரமாக அதட்டும் அவனை முறைத்த படியே, `என்ன அதிகாரமெல்லாம் ஒரேயடியா இருக்கு’, என்றவளை மீண்டும் அதட்டினான். `மறு பேச்சு பேசாதே, வா என்றால் வா’ என்றான். எங்கேயோ தேடிப்புடிச்சி சமையல் குறிப்பு புத்தகங்கள் நான்கைந்து வாங்கி வந்தான். `உனக்கு சமையல் செய்யவே தெரிய வில்லை. இதைப் படித்து விட்டு ஒழுங்காக செய்’ என்றவனை பயத்துடன் பார்த்தாள். நடுராத்திரி 12 மணிக்கு எழும்பி உட்கார்ந்து சாமி படத்தை எல்லாம் எடுத்து வைத்து ஊதுபத்தி, சூடம் காட்டி பூஜை செய்தான். `ஏ ராஜம், உன்மேல் துர்நாற்றம் வீசுகிறது, போ, போய் குளித்து விட்டு வா’ என்றான். `ஆமா... எனக்கு வேற வேல இல்லை பாரு’ என மறுத்தவளை பளார் பளாரென நான்கைந்து அறைகள் விட்டான். `அய்யய்யோ.... இந்த பாவி என்ன கொல்றானே’ அலறியடித்து பக்கத்து வீட்டுக்கு ஓடினாள்.


மறுநாள் கலையில் இளைய மகள் அப்பாவை பார்க்க வந்தாள். சர்வாங்கமும் நடுங்கி கூனிக்குறுகி உட்கார்ந்திருந்த அம்மாவை பார்க்க இப்போது பாவமா யிருந்தது. தொரலிங்கம் இப்போதும் விறைப்பாக நின்று பேசிக் கொண்டிருந்தான். மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாசலில் கார் வந்து நின்றது. `எனக்கா பைத்தியம், வாசல்நிலையில் ஓங்கி குத்தியவன், எனக்கொன்றும் பயமில்லை, நான் எங்கு வேண்டுமானாலும் வருவேன், பின்வாசல் வழியாக வர வேண்டுமா அல்லது முன்வாசல் வழியாக வர வேண்டுமா’ வீரவசனம் பேசியபடி காருக்குள் போய் அமர்ந்து கொண்டான். `பாத்தியா, இப்படித்தான் வசனமா பேசிக்கிட்டே இருக்காரு’, மகளிடம் சொன்னவள், `செத்த நேரம் வாய வச்சிக்கிட்டு சும்மாக் கெடங்களேன்’ பழக்க தோஷத்தில் மறுபடி அதட்டினாள். `அம்மா, நீங்க கொஞ்சநாள் அப்பாகிட்ட சண்ட போடாம, எதுத்து பேசாம, அன்பா இருங்க, அப்பாக்கு தன்னால சரியாயிரும்’ என்றாள் மகள் அழுதுகொண்டே!.

.

Tuesday, February 8, 2011

ஹீரோக்களின் சாகசங்கள்; பாதிக்கப்படும் பிஞ்சுகள்.

.

திருச்சியிலிருந்து நெல்லைக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தோம். ரெயிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவன், எட்டுஅல்லது ஒன்பது வயதிருக்கும், `துறுதுறு’ வெனஅதீத சுறுசுறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்தான். அடிக்கடி வாசலை நோக்கி செல்ல முற்பட்ட அவனைக் கட்டுப் படுத்த அவன் அன்ன பெரும் பிரயத்தனம் பட வேண்டியிருந்தது. ``ஏம்மா வெளிய எட்டி பாக்க வுட மாட்டேங்குறீங்க?’’ கோபமாக கேட்ட அவனிடம், ``வேண்டாம்ப்பா, வெளிய வுழுந்துருவ’’ என்றாள் அன்னை. ``வுழுந்தா என்ன... ட்ரெய்ன மிஸ் பண்ணுவேன், பின்னாலேயே ஓடி வந்து கடைசிப் பெட்டிய ஜம்ப் பண்ணி புடிச்சி, டாப் ல ஏறி வந்துருவேன்’’ என்றான் வீரமாக. பதறிப் போன அன்னை, அவனுக்கு யதார்தத்தை புரிய வைக்க திணறிப் போகிறாள்.


சிறுவனின் உரையாடலைக் கேட்டு அதிர்ந்து போன நான், அதைப் பற்றி என் சகோதரியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவள் கூறிய இன்னொரு சம்பவம் மனதை அப்படியே உறைந்துப் போகச் செய்தது. அவள் மகன் படிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நான்காவது படிக்கும் சிறுவன் ஒருவன், தன்னை சினிமா ஹீரோவாக பாவித்துக் கொண்டு அந்த விபரீத செயலில் இறங்கி யிருக்கிறான். மண்ணெண்ணெயை வாய் நிறைய அடக்கிக் கொண்டு, கையில் தீக்குச்சியை பற்ற வைத்து, அதில் வாயிலிருந்த எண்ணெயை ஊத முற்பட்டிருக்கிறான். குபீர் குபீரென நெருப்பு பறந்து போகும் என நினைத்தவனின் முகமெங்கும் நெருப்பு பிடித்துக்கொள்ள, இரண்டொரு நாட்கள் உயிருக்கு போராடியவன் பரிதாபமாக இறந்து போனானாம்.


என்னக் கொடுமை இது... இந்த அளவுக்கா குழந்தைகள் மனம், ஹீரோக்களின் சாகசங்களுக்கு அடிமை பட்டுக் கிடக்கிறது? இப்படித்தான், முன்பு `சக்திமான்’ என்ற சீரியல் ஒளிபரப்பான போது இரண்டு குழந்தைகள் `சக்திமான் எங்களை காப்பாற்று’ எனக் கூறியபடி உயரமான கட்டிடத்திலிருந்து குதித்ததாக செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து, அந்த சீரியலை தடை செய்ய வேண்டுமெனக் கண்டனங்கள் எழுந்ததும் நினைவிருக்கலாம்.


கட் அவுட், பாலாபிஷேகம் என இளைஞர்கள் தான் இந்த `ஹீரோ வொர்ஷிப்’ புக்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள் என நினைத்தால், இப்படி பிஞ்சு நெஞ்சிலும் நஞ்சு கலந்து விட்டிருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஈன்று புறந்தருவதோடு கடன் முடிந்து விடுவதில்லை. பேணிக்காப்பதும், இத்தகைய மாயைகளை புரிய வைப்பதும் பெற்றோரின் கடமை தான்.

.

Tuesday, January 25, 2011

தலைவர் சிலை திறப்புவிழாவும், தண்ணீர் பஞ்சமும்...

.

ஐந்து நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை. எங்கேயாவது உடைப்பு ஏற்பட்டிருக்கும்; சரி செய்ததும் வந்துவிடும் என்று நம்பிக்கையோடு இரண்டு நாட்கள் காத்திருந்த மக்கள் மூன்றாவது நாளும் வராததால், வார்டு கவுன்சிலர், பஞ்சாயத்துபோர்டு நிர்வாகிகளிடம் முறையிட்டனர். அதன்பின்னர் தான் விஷயமே தெரிய வந்தது.


அரசியல்தலைவரின் சிலை திறப்புவிழாவு்க்கு வருகை தரும் மத்தியமந்திரி ஜி.கே. வாசனை வரவேற்க கட்அவுட்கள், பேனர்கள் வைப்பதற்காக குழிதோண்டிய தொண்டர்களின் கைங்கர்யத்தால் குடிநீர் குழாய் உடைந்து விட்டதாம். சரிசெய்ய வேண்டிய பஞ்சாயத்து நிர்வாகமோ, அவர்கள் பேனரை அகற்றினால் தான் நாங்கள் சரி பண்ண முடியும் என மிகப் பொறுப்பாக பதிலளித்துள்ளனர். ஏனெனில் பஞ்சாயத்து நிர்வாகிகள் அ.தி.மு.க.வினர்.


நேற்றிரவே விழா முடிந்து விட்டது. தலைவர் வருகைக்காக நான்கு நாட்கள் முன்னரே சுறுசுறுப்பாக பேனர் வைக்க குழிதோண்டிய புண்ணியவான்கள், இன்னும் அதை அகற்றாததால், வெற்றிகரமான ஐந்தாவது நாளாக இன்றும் குடிதண்ணீர் வரவில்லை.

மக்கள் காலிக்குடங்களுடன் குடிதண்ணீருக்காக அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். ஐம்பதடி பேனரில் ``மணிமுத்தாறு அணை தந்த மாவீரராக’’ தலைவர் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

.

Saturday, January 15, 2011

.பொங்கல் திருநாள் உற்சாகமாக மலர்கின்றது

பொங்கல் திருநாள் உற்சாகமாக மலர்கின்றது., அழகழகான வண்ணக் கோலங்களுடன்...





`தேங்கா, கரும்பு, மஞ்சக்கொல, காயி எல்லாமே போன வருசத்துக்கு, இப்போ மூணுமடங்கு ஏறிப்போச்சி. ஹூம்ம்ம்.... என்ன செய்ய....’` வயிற்றெரிச்சலோடு புலம்பினாலும் தேவைகளை சுருக்கிக் கொண்டு, பொங்கலை உற்சாகமாக வரவேற்கும் மக்கள்.



`101 தேங்கா, 21 வாழத்தாரு, ஒருக்கட்டு கரும்பு, பித்தளப்பான, சாமான், அரிசி, காய்கறி ன்னு வாங்கி தல பொங்கப்படி குடுக்குறதுக்குள்ள மூச்சு முட்டிப் போச்சு,’ மகளை திருமணம் செய்துக் கொடுத்துவிட்டு மாப்பிள்ளை வீட்டார் கேட்ட தலைப் பொங்கல் சீர் கொடுக்கத் திணறிப் போன தாயின் அங்கலாய்ப்புகள்....



`அரசு வழங்கிய பச்சரிசி, வெல்லம் சேர்த்து பொங்கலிட்டு மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் தமிழ் புத்தாண்டு, பொங்கல் திருநாளை கொண்டாடுங்கள்.’


என்ற தமிழக முதல்வரின் வாழ்த்துக்களோடு பொங்கல் திருநாள் உற்சாகமாய் மலர்கின்றது.


அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

.

Tuesday, January 11, 2011

75 + லும் சாம்பியன்

.
``இன்னும் தூங்கிட்டா இருக்கீங்க ? நேரமாச்சு.. சீக்கிரம் குளிச்சி கிளம்புங்க‘’ அதிகாலையில் எல்லோரையும் விரட்டும் இந்த சுறுசுறுப்பான குரலுக்கு சொந்தக்காரர், அம்மாவின் தம்பி... முழுப்பெயர் சித்தரஞ்சன். எங்களுக்கு `ரஞ்ச மாமா’. எங்கள் குடும்பத்து விசேஷம் என்றில்லை, உறவினர்கள், நண்பர்கள் என அனைவர் வீடுகளிலும் மாமாவின் கலகலப்பான குரல் எல்லோரையும் அதட்டிக் கொண்டிருக்கும்.





ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் யுனிவெர்சிட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தடகள விளையாட்டுபோட்டிகளில் 75 வயதினர்க்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் பங்கேற்று மூன்று பதக்கங்களுடன் ( இரண்டு முதல் பரிசு, மூன்றாம் பரிசு ஒன்று ) வெற்றி வீரராக நேற்று மாமா வந்திருந்தார்கள். 60 வயது தாண்டிவிட்டாலே, ` அய்யோ வலிக்குதே’, என்று இடுப்பையும், முழங்கால்களையும் பிடித்துக் கொள்பவர்கள் மத்தியில் மாமா விதிவிலக்கானவர்கள். 76 வயதுக்கு அதிபயங்கர சுறுசுறுப்பு. காலையிலேயே குளித்து தவறாது கோயிலுக்கு போய்வருவார்கள். எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது கூட மாமா அனேகமாக அங்கும் இங்குமாக நடந்து கொண்டே தான் பேசுவார்கள்.







பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மாமா சிறந்த விளையாட்டு வீரர் என்று தெரியும். சிறுகிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர்கள் பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆனது குறித்து அவர்களிடமே விசாரித்து தெரிந்து கொண்டது:-

ஆறுமுகனேரியில் நடுநிலைப்படிப்பை முடித்து, மெஞ்ஞானபுரம் csi ஹைஸ்கூலில் சேர்ந்தபின் தான் ஆர்வத்துடன் விளையாட்டுபோட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்கள். 400mts, 800mts ஓட்டபந்தயங்களில் கலந்து கொண்டார்கள். சுற்று வட்டாரங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு சென்றும் விளையாடி வெற்றியும் பெற்றார்கள். இண்டர்மீடியட் (தற்போதைய +1, +2, அப்போது கல்லூரியில்) படிப்புக்காக பாளையங்கோட்டை செயிண்ட். ஜான்ஸ் கல்லூரியில் சேர்ந்தார்கள். இண்டர்காலேஜ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400mts, 800mts கலந்து கொண்டு வெற்றிபெறாவிட்டாலும் நிறைய அனுபவங்கள் பெறமுடிந்தது. போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மணவரிடம் அவரது பயிற்சி முறைகள் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார்கள். அந்தமாணவர் ஆற்று மணலில் ஓடி பயிற்சி எடுப்பேன் என்றாராம். அந்த வருடம், 2 மாத கோடை விடுமுறையில், காயல்பட்டினம், அடைக்கலாபுரம் (இரண்டும் பக்கத்து ஊர்கள் ) ரெயில்வேலைனை ஒட்டி இருந்த வழியில், (மணல்வெளியாக இருக்குமாம்), ஓடி பயிற்சி எடுத்தார்களாம். இரண்டாமாண்டு படிக்கும் போது 400 மீ, 800மீ, 400மீ தடை ஓட்டம், லாங்ஜம்ப் அனைத்திலும் கலந்து கொண்டதில் 400மீ ரன்னிங்கில் யுனிவெர்சிட்டி சாம்பியன். அப்போது ஏரியாக்கு ஒரு யுனிவெர்சிட்டியெல்லாம் கிடையாது. சதர்ன் யுனிவெர்சிட்டி என ஒரே யுனிவெர்சிட்டி தான். அதன்பின் கோச் மூலம் மாமாவுக்கு டிரெய்னிங் கொடுக்கப் பட்டிருக்கிறது. இதுதான் முறைப்படி எடுத்துக் கொண்ட முதல் டிரெய்னிங். அந்த வருடம் கல்லூரியின் அனைத்து போட்டிகளிலும் மாமாதான் சாம்பியன்.


இவர்களுடைய விளையாட்டுத் திறமையால் சென்னை லயோலா கல்லூரியில் B.A; வில் இடம் கிடைத்தது. அதலெடிக்ஸ் பிரிவில் 400மீ, 800மீ, 400மீ தடையோட்டம், எல்லாவற்றிலும் மாமா தான் சாம்பியன். வாலிபாலில் யுனிவெர்சிட்டி ப்ளெயர் இரண்டாமாண்டு படிக்கும் போது வாலிபால் டீம் காப்டனாக இருந்திருக்கிறார்கள். அலிகார்யுனிவெர்சிட்டி, கல்கத்தா, அகமதாபாத் ல் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.


கல்லூரி படிப்பு முடிந்து வேலை, குடும்பம் என்றான பின் விளையாட்டை தொடர முடியவில்லை. சமீபத்தில் முதியோருக்கான தடகளப் போட்டிகள் நடப்பதை கேள்விப் பட்டு 70+ பிரிவில் கலந்துகொண்டு ரன்னிங்கில் இரண்டாம் பரிசு பெற்றார்கள். சிறுவயதில் விளையாடும் போது இரண்டு முறை கீழே விழுந்து வலது காலில் முறிவு ஏற்பட்டிருந்ததால், அந்தகாலில் வீக்கம் ஏற்பட்டு அடுத்த வருடம் விளையாட முடியாது போயிற்று. அதிகம் ஓடவேண்டாம் என அறிவுறுத்தப் பட்டதால், எறியும் போட்டிக்காக பயிற்சி எடுத்துக் கொண்டு அதில் கலந்து கொண்டார்கள். இந்த வருடம் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்றவற்றில் முதலிரண்டில் முதல் பரிசும், மற்றதில் மூன்றாவது பரிசும் வாங்கியிருக்கிறார்கள்.


சென்றவருடம், லயோலாகல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, விளையாட்டுபோட்டிகளில் இவர்களது திறமை பற்றி தெரிந்து கொண்டதும், மேடையில் அமரவைத்து கவுரவப் படுத்தியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் முன்னாள் டி.ஜி.பி.ஸ்ரீபால், தற்போதைய ஜார்கண்ட்கவர்னர், தயாநிதி மாறன் போன்றோரும் கலந்து கொண்டனராம்.






அடுத்தமாதம் சண்டிகாரில் ஆல் இண்டியா போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதாக ஆர்வத்துடனும், தன்னம்பிக்கையுடனும் கூறும் மாமாவுக்கு ஷுகர், பிபி, கொலாஸ்டிரல் எதுவும் கிடையாது. உணவில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. அதீத ஆர்வத்துடன் இனிப்புகள் அதிகமாக சாப்பிடும் மாமா, இப்பவும் பேரன்களுடன் சேர்ந்து ஆசையாக பட்டம் விடுவார்கள். தன்பிள்ளைகள், பேரன்கள் யாரும் விளையாட்டில் பிரகாசிக்க வில்லையே என்ற ஆதங்கம் அவ்வப்பொழுது பேச்சில் வெளிப்படும். இவர்கள் எனக்கு மாமா மட்டுமில்லை, மாமனாரும்கூடத்தான்.

Monday, January 3, 2011

இலவச தொலைக்காட்சியை முதல்வர்க்கே அன்பளிப்பாக தந்த விவசாயி!!

.

.என் மகனுக்கு இ.மெயிலில் வந்த செய்தியை எனக்கு ஃபார்வர்ட்

செய்திருந்தான். அதை கீழே தந்திருக்கிறேன்.



புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும்

விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவசதொலைக்காட்சிப்

பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி

கொடுத்திருக்கிறார்.



கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட

தி.மு.க.செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத்

தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது

பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்

பட்டதும், கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார்

என்ற விவசாயி மேடையேறினார்.



அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டியை வாங்கிக்

கொண்டார். ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி. வி. யை பெரியண்ண

அரசுவிடமே கொடுத்துவிட்டு, கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.

ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக

வாங்கிப் படித்தார்.



அதில் ‘ மனிதனுக்கு டி . வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான்.

ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம்.

தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன . இவை

எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகுஅடைந்து விட்டனவா?

குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு

அடைந்து விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்தபின்

மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி . யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக

இருந்திருக்கும் . இதற்கு மட்டும்எங்கிருந்து நிதி வந்தது? இந்தியாவின்

முதுகெலும்பான விவசாயிகள்தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள்.

டி . வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான

மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.



தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து

போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு

மாவாட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம் .

இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி,

மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே

போதும்.



அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி. வி.முதல் கார் வரை

அனைத்தையும்வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ

அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.




விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை,

லஞ்சம் ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு

நடமாடும் பிணமாக நான் எப்படி டி . வி. பார்க்க முடியும்? எனவே

எனக்கு இந்த டி.வி . வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு

மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது .



எனவே,இந்த டி.வி . யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் இதை ஏற்றுக்

கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும்

அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச செய்தாலே போதும்.

இந்தியா வல்லரசாகி விடும் ’ என்று நீண்டது அந்த மனு.



இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை. அருகில்

இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த

மனுவையும் டி. வி. யையும்வாங்கி வைத்துக் கொண்டு மேலும்

பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.



இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.



“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்

பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு

நகரத்துலபோய் கூலி வேலைக்கும், ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்

கிட்டிருக்கான் . இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும்

வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய்

இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது .



சாராயத்தை குடிச்சுட்டு , ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்

வர்க்கம் சோம்பேறியாகிக் கிட்டிருக்கு .ரொம்ப சீப்பா கணக்குப்

போட்டாலும் ஒரு டி. வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில்

ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. 2கோடி குடும்பஅட்டைக்கும்

டி. வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும் . இதை

வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.



கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு

டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி. வி. பாத்து

வேற சிரிக்கணுமாக்கும். அதுனாலதான் நான் டி.வி . யை திருப்பிக்

கொடுத்தேன்’’ என்றார் .


டி.வி . யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு

கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில் ‘ கொத்தமங்கலத்துக்கு வந்த டி . வி. க்கள் 2519.

அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு

டி.வி. யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ’

என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார் .



மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்

படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார்

பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார் . மக்களை சோம்பேறி

களாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை

பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!




செய்தி உண்மையா அல்லது பொய்யா என்று தெரிய வில்லை.

உண்மையெனில், விவசாயி விஜயகுமார் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் .

உரியவர். அவருக்கு வாழ்த்துக்கள்.


கற்பனையெனில், இந்த இலவசங்கள் மீதான வெறுப்பில்,

இப்படி நடந்து விடக் கூடாதா, என்ற ஆதங்கத்துடன், இவ்வாறு

கற்பனை செய்து ஒரு செய்தி அனுப்பிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.


செய்தி உண்மையென்று முத்துச்சரம் ராமலக்ஷ்மி உறுதி செய்திருக்கிறார்.

அதற்கான சுட்டியும் கொடுத்திருக்கிறார்.


http://surveysan.blogspot.com/2010/12/blog-post_22.html
.

.