Tuesday, December 21, 2010

மார்கழி நினைவுகள்.

.
மார்கழி மாதம் என்றதும் சட்டென நினைவுக்கு வருபவை, இதமான பனி,

விடிகாலை கோலங்கள், திருப்பாவை பாடல்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு

கொண்டாட்டங்கள்...; இவற்றோடு எனக்கு மார்கழி பஜனையும் சேர்ந்தே

நினைவுக்கு வரும். அம்மாவுக்கு இந்த பஜனை, பாடல்கள் இவற்றில்

அதிக ஆர்வமிருந்ததால் எங்களை பஜனைக்கு அனுப்பி வைத்தார்கள்.




அதிகாலை நான்குமணிக்கே கோயிலின் ஒலிப்பெருக்கிகள் எல்லோரையும்

எழுப்பி விட்டுவிடும். அம்மாவும் எழும்பி, எங்களுக்கு வெந்நீர் வைத்து,

குளிக்க செய்து, அனுப்பி வைப்பார்கள். அதன்பின் தெருவாசலில் கோலம்

போடுவார்கள். முற்றத்தையே அடைக்கும் பெரிய பெரிய கோலங்கள்.

இப்போது நானும் கோலம் போடுகிறேன், சின்னதா பேருக்கு ஒரு கோலம்..

பொங்கல், கோயில்கொடை என்றால் மட்டுமே பெரிய கோலம். அம்மா

வின் சுறுசுறுப்பு இப்போதும் ஆச்சர்யப் படுத்துகிறது.



மாதுஅண்ணன், நான், குட்டி மூன்று பேரும் பஜனைக்கு போவோம்.

விஜியண்ணன் கூட சில நாட்கள் வந்திருக்கிறான். எங்கள் தெருவின்

முனையில் தான் பஜனைக்கோயில் இருந்தது.எங்களைப் போல நிறைய

சிறுவர், சிறுமியர் வருவார்கள். பஜனையை வழிநடத்தி செல்வது

செல்லத்துரை என்பவர். எங்களனைவர்க்கும் செல்லத்துரையண்ணன்.

ஆரம்ப காலங்களில் பத்து, அதிகம் போனால் பதினைந்து பேர்கள்,

ஒருவர் கையில் ஹார்மோனிய பெட்டியுடனும், சிலர் ஜால்ரா வுடனும்

ஏதோ பாடிக் கொண்டு போவார்களாம். செல்லத்துரையண்ணன் தலைமை

ஏற்று நடத்த ஆரம்பித்த பின்தான் இவ்வளவு பேர் வர ஆரம்பித்தார்கள்.

அவர்களுக்கு நல்ல கம்பீரமான குரல். தொடங்கும் போது

தோடுடைய செவி யென் விடை யேறியோன்;

தூ வெண் மதி சூடி,


என்று தேவாரத்துடன் ஆரம்பிப்பார்கள். அதன் பின்,

போற்றி என் வாழ்முதல், ஆகியப் பொருளே;

புலர்ந்தது பூங்கழல்


என திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்,

ஆதியும் அந்தமும் இல்லாத

அரும்பெரும் சோதியை யான் பாட


திருவெம்பாவை பாடல்கள்...

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்

என சில திருப்பாவை பாடல்கள்..

இதற்குள் சிவன்கோயில் வந்து விடும். அவர்கள் முதலில் பாட, பின்

நாங்களனைவரும் சேர்ந்து பாடுவோம். ஆங்காங்கே கோலம் போட்டுக்

கொண்டிருக்கும் பெண்கள் எங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பர்.

கொஞ்சம் லேட்டாக வருபவர்கள் இடையில் வந்து சேர்ந்து கொள்வர்.

சிவன் கோயிலில் பூஜை முடிந்ததும், அங்கிருந்து கிளம்பி வேறு சில

தெருக்கள் வழியாக மறுபடியும் பஜனைக் கோயிலுக்கே வந்து சேர்வோம்.

சில திருப்புகழ் பாடல்கள்... முடிக்கும் போது

ஆறிரு தடந்தோள் வாழ்க,

ஆறுமுகம் வாழ்க.


என்று முடிப்பார்கள்.



மார்கழிமாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இரவு, கோயிலில் பாடல்கள்

ஒப்பிக்கும் போட்டி நடக்கும். திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள்,

திருவெம்பாவை 20 பாடல்கள், திருப்பாவை 30 பாடல்கள், மொத்தம்

60 பாடல்கள் ஒப்பிக்க வேண்டும். அறுபதையும் ஒப்பித்தால் பொன்னாடை

போர்த்தி, பரிசும் வழங்குவார்கள். பாடல்களின் எண்ணிக்கைக்கேற்ப

எல்லோருக்கும் பரிசுகள் உண்டு. ``எப்ப பாத்தாலும் ஆம்பள பசங்க தா

நெறய சொல்றாங்க, பொம்பள புள்ளைங்களால முடியாதா?’’ என்று

எங்களை சீண்டிவிட போட்டி போட்டு ரோஷத்தோடு படித்தோம். அந்த

வருடம், பெண்களில் நானும், கிருஷ்ணவேணி என்ற பெண்ணும்

60 பாடல்கள் ஒப்பித்தோம். பையன்களில் மாதுஅண்ணனும், குட்டியும்

ஒப்பிச்சாங்க. பொங்கலன்று எல்லோர்க்கும் பரிசுகள், எங்களுக்கு சிறப்பு

பரிசுகள் வழங்கினார்கள்.



ஹைஸ்கூல் வந்ததும் இவையெல்லாம் நின்று போயின. நாங்கள் தாம்

நின்று விட்டோமே தவிர, செல்லத்துரையண்ணனின் பாட்டு, பஜனை,

எல்லாம் தொடர்ந்தன. இதைப்போலவே போட்டிகளும்... நிறைய பேர்

பரிசுகளும் வாங்கியிருப்பார்கள்.



செல்லத்துரையண்ணன் நல்ல கணீரென்ற குரலில் டி.எம்.எஸ் பாடல்

களை அப்படியே பாடுவார்கள். `கற்பகவல்லி நின் பொற்பதங்கள்

பிடித்தேன்‘ `மண்ணானாலும் திருச்செந்தூரின் மண்ணாவேன்’ இன்னும்

எத்தனையோ பாடல்கள்... மிக அருமையாக பாடுவார்கள். ஆன்மீகத்தில்

மிகுந்த நாட்டமுடன், திருமணமே வேண்டாமென்றிருந்த அவர்கள்,

வீட்டாரின் வற்புறுத்தலால் மிகதாமதாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இதைப் போல ஒரு மார்கழிமாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு, திடீரென

இறந்து விட்டார்கள்.



மார்கழிமாத பஜனை, தேவாரம், திருப்பாவை இவற்றோடு, எங்களுக்கு

செல்லத்துரையண்ணனின் பாடல்களும் சேர்ந்தே நிறைந்திருக்கின்றன.


.

Monday, December 13, 2010

விட்டில் பூச்சிகள்.

.

அந்த வீட்டை கடந்து செல்கையில் அவளைப் பார்த்தி்ருக்கிறேன். புதிதாக

குடிவந்திருந்தார்கள் போலும். நைட்டி அல்லது சுடிதார் அணிந்து வாசலில்

அமர்ந்திருப்பாள். பக்கத்துவீட்டு சிறுபெண்களை அழைத்து வைத்து பேசிக்

கொண்டிருப்பாள். குழந்தைத்தனம் மாறாத முகம். கல்லூரிமாணவி போல்

இருந்தாள். ஆனால் கழுத்தில் இருந்த தாலி திருமணம் ஆனவள் என்பதை

பறைசாற்றியது. நிரம்பவும் சின்னப் பெண்ணாயிருக்கிறாளே எண்ணமிட்ட

படியே கடந்து சென்றுவிடுவேன். சில நாட்களிலேயே அவளைப் பற்றிய

செய்திகள் தெரிய வந்தன. அவள் சென்னையை சேர்ந்தவள் என்பதும்,

பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமல் அவள் கணவன் என சொல்லிக்

கொள்ளும் நபரோடு வந்துவிட்டாள் என்பதும், அந்தநபர்க்கு 45 வயதுக்கு

மேலிருக்கும் என்பதும் தெரிந்தது. அதன்பின் அவளைப் பார்க்கையில்

எரிச்சல் கலந்த பச்சாதாபம் தோன்றும்.



ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. என்னப் பிரச்சனையோ, அந்தப்பெண்

தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்கொளுத்திக் கொண்டாள்

என்றும், மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்

பட்டிருக்கிறாள் என்றும் அதிர்ச்சியோடு பேசிக் கொண்டார்கள். அவள்

கணவன் என சொல்லிக் கொண்ட நபர், போலிஸ், விசாரணைக்கு பயந்து

எங்கோ ஓடிவிட்டான். அந்தப் பெண்ணைப் பற்றிய விபரங்கள், பெற்றவர்,

முகவரி எதுவும் தெரியாத நிலையிலே அந்த பரிதாபத்துக் குரியவள்

இறந்து விட்டாள். பூட்டிக்கிடக்கும் அந்த வீட்டை கடக்க நேர்கையில்

அந்த குழந்தைத்தனம் மாறாத முகம் நினைவுக்கு வந்து சங்கடப்

படுத்துக்கிறது.



சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இன்னொரு சம்பவமும் நினைவுக்கு

வருகிறது. அந்தப்பெண்ணுக்கும் 18வயது போல் தான் இருக்கும். ஒரு

கடையில் வேலை செய்து வந்தாள். நல்ல அமைதியான சுபாவமுடைய

பெண் தான். ஆனாலும் விதியோ அல்லது அவளது மதியோ, கடை

முதலாளியோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரும் இதேபோல் நடுத்தர

வயதினர் தான். மனைவி, குழந்தைகள் இருந்தனர். அவளுக்கு அம்மா

மட்டும்தான். அந்த ஏழைத்தாயால் அவளைக்கண்டிக்க முடியவில்லையோ

அல்லது எல்லோரும் கூறியது போல் அந்த முதலாளியின் பணம் ஊமை

யாக்கிற்றோ, அவர்கள் பழக்கம் தொடர்ந்தது.



ஊமை ஊரைக் கெடுக்குங்குறது சரியாத்தா இருக்கு’ என்று ஏசுவோரும்

இருந்தனர். `நல்ல புளியங்கொம்பாத்தா புடிச்சிருக்கா’ எனப் பொறாமைப்

படுவோரும் இருந்தனர். அவளும் ஒரு பெண்குழந்தைக்கு தாயானாள்.

அவள் இரண்டாம்முறை கருவுற்ற பின் அவர் வருவது குறைந்து

போயிற்று. அடுத்ததும் பெண் தான். அவரிடமிருந்து சில சமயங்களில்

பணம் மட்டுமே வந்தது. உறவினர்கள் ஏதோ பஞ்சாயத்து பேசினர்.

கொஞ்சம் பணத்துடன் அவளது உறவு தீர்க்கப் பட்டது. `ரெண்டும்

பொண்ணாப் போச்சி, ஆம்புளப்புள்ளனா வந்திருப்பாரு’ என முதலாளி

யின் மோசடிக்கு சப்பைக் கட்டப்பட்டது.


தாயின் அவலநிலை காண சகியாமலோ, தானும் துன்பம் தர வேண்டா

மென்றோ, இரண்டாவது குழந்தை சில நாட்களிலேயே கண்ணை மூடி

விட்டது. இளவயதில் அடுத்தடுத்த இரண்டு பிரசவங்கள், ஒழுங்கான

பராமரிப்பின்மை, மனப்பாரம் எல்லாமாக சேர்ந்து அவளை காசநோயில்

தள்ளியது. அக்கம்பக்கத்தினர் முகத்தில் விழிக்கவும் முடியாமல், ஆற்ற

முடியாத துயரத்துடன் சரியான சிகிச்சையின்றி, குடிசையிலே அடைந்து

கிடந்தவள், ஓரிரு மாதங்களிலேயே இறந்தும் விட்டாள். அவளது

சாவுக்குக் கூட அந்த முதலாளி வரவில்லை.


`இவ ஒழுங்கா இருந்தா இந்த நெலம வ்ந்துருக்குமா?’, `அடுத்தவ

புருசனுக்கு ஆசப் பட்டா இப்பிடி தா ஆவும்‘, என அவளைப் பற்றின

விமர்சனங்கள் தொடர்ந்தன. `ஆம்புளன்னா அப்படித்தா, சேறக் கண்டா

மிதிப்பான், தண்ணியக் கண்டா கழுவுவான், பொம்பளயில்ல ஒழுங்கா

இருக்கனும்’ என ஆண்களின் `கல்யாண குணங்கள்’ நியாயப் படுத்தப்

பட்டன. மகன் தவறு செய்தால், `நீ சரியா இருந்தா, அவன் ஏன் இப்படி

அலைறான்’ என மருமகளை குற்றம் சாட்டும் மாமியார்கள், மருமகன்

தவறு செய்தால் ,`பார்த்து பதவிசா நடந்துக்க’ என்று மகளுக்கு புத்தி

கூறும் அன்னையர்கள், கணவன் தவறு செய்தால், `ஏதோ கெட்டநேரம்’

என்று கையாலாகத்தனதுடன் ஏற்றுக் கொள்ளும் மனைவிகள், என எல்லா

கட்டங்களிலும் ஆண்களின் தவறுகள் அங்கீகரிக்கப் படுகின்றன.



இங்கே, இந்த இரண்டு பெண்களின் செய்கையுமே முட்டாள்த்தனமானது,

ஏற்புடையது அல்ல என்ற போதிலும், இருவருக்குமே வாழ்வின்

சூட்சுமங்கள் புரிபடாத வயது. ஆனால் அந்த ஆண்கள்....? மகள்

வயதொத்த பெண்ணின் வாழ்வை பாழாக்குகிறோம் என்பது தெரியாதா?

அவர்களின் ஏழ்மையை, அறியாமையை உபயோகப்படுத்திக் கொள்வது

புரியாதா?

``பெண் என்பவள் மிதிப்பதற்கும், கழுவதற்கும், சேறோ அல்லது

தண்ணீரோ இல்லை, உயிரும் உணர்வுகளும் நிரம்பிய மனிதப் பிறவி ’’

என்பதை எப்போது உணர்வார்கள்?

.

Saturday, December 11, 2010

எனது வலைப்பக்கத்தின் வயது ஒன்று; மகாகவிக்கு 128.

.

.சொல்லத்தான் நினைக்கிறேன் என்று நினைத்ததை எழுத தொடங்கி

இன்றுடன் ஓராண்டு நிறைவுறுகிறது.. பெரிய திட்டமிடல்களோ,

முனைப்போ இன்றி, என் மனம், என் நினைவுகள், என் உணர்வுகள்

என மனதில் பட்டதை ஒரு ஆர்வத்துடன் எழுதினேன். இதுவரை

எழுதிய பதிவுகள் 76, என்னை பின்தொடர்வோர் 140 பேர். மிகப்

பெரிய சாதனையாக இல்லாவிடினும், என் எழுத்துக்கு கிடைத்த

மிகப் பெரிய அங்கீகாரமாகவே கொள்ள முடிகிறது. தமிழ்மணம்

தெரிவு செய்த முதல் இருபது பதிவுகளில் 13 வதாக, ஒருமுறை

வந்ததுமே எனக்கு சாதனையாகத் தான் தெரிகிறது.. என்

பதிவுகளை தொடர்ந்து வாசித்து, வாக்களித்து, பின்னூட்டமிட்டு

எனக்கு அன்பும், ஆதரவும் நல்கும் அனைத்து அன்பு உள்ளங்

களுக்கும், என் அன்பும், நன்றியும். என் பதிவுகள் அச்சில் வர

உறுதுணையாயிருந்த, என்வலைப்பக்கத்தின் முதலாண்டு

நிறைவுக்கு முன்னதாகவே வாழ்த்து தெரிவித்த

திரு.எஸ். வி. வேணுகோபாலன் அவர்களுக்கும் என் நன்றியும்,

அன்பும்.




மகாகவியின் பிறந்த நாளில் என் வலைப்பக்கம் தொடங்கப்

பெற்றது தற்செயலான நிகழ்வெனினும், எனக்கு பெருமைக்

குரியதே! ஆனால் அவர்க்கு அது வருத்தந் தருவதாயிருக்

கலாம். மகாகவியின் பிறந்த நாளில்,


எண்ணிய முடிதல் வேண்டும்;

நல்லவே எண்ணுதல் வேண்டும்.

திண்ணிய நெஞ்சம் வேண்டும்;

தெளிந்த நல்லறிவு வேண்டும்.

பண்ணிய பாவமெலாம்

பரிதிமுன் பனியேப் போல

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னையே!


என்பதைத் தவிர வேறென்ன வேண்டிட முடியும்?

.

Friday, December 3, 2010

ஜவ்வு மிட்டாய்

.

’என்னத் தெரியுதா’ சிரித்தபடியே என்னை நெருங்கியவளை முதலில்

இனம் கண்டுகொள்ள முடியவில்லை. அந்த `ஸ்பிரிங்’ முடியும், வெகுளி

சிரிப்பும் ஒரு புகைப்படலமாய் நிழலாடியது. `நா ந்தா .....’ பேரைச்

சொன்னதும், சட்டென ஸ்படிகமாய் பளிச்சிட்டன நினைவுகள். `எம் மக’

அவளின் பிரதியாய், அதே சுருட்டை முடியுமாய் நின்ற பெண்ணை

அறிமுகப் படுத்தினாள். `காலேஜ் ல படிக்கா’ குரலில் பெருமை வழிந்தது.

பரஸ்பர நலவிசாரிப்புகளுக்கு பின் விலகி சென்ற அவளின் நினைவுகளில்

மூழ்கினேன்.



இருபது வருஷமிருக்குமா அவளைப் பார்த்து... கூடவே இருக்கலாம்.

சிறு வயதில் நான் படித்த பள்ளிக்கு எதிரில் தான் அவள் வீடு. என்னுடன்

ஐந்தாவதோ, ஆறாவது வகுப்போ, சரியாக நினைவில்லை, சேர்ந்து

படித்தாள். `என்னை தெரியுதா’ என்றோ, அல்லது `நீ ஜோதியக்கா மக

தானே’ எனறோ என்னை அணுகும்பலரை அடையாளம் காட்ட முடியாத

என் ஞாபகசக்தியை அவமானத்துடன் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இவள்

குறித்த அனைத்து நினைவுகளும் பதிந்திருக்க முக்கியமான காரணங்கள்

இருந்தன. முதலாவது அவள் பெயர். இரண்டாவது அவள் அம்மா விற்கும்

ஜவ்வு மிட்டாய்.




`பரிபூரணம்’ இப்படி ஒரு பெயரை யார் வைத்தார்கள் என வியப்பாய்

ிருக்கும். இன்னொரு விஷயம், அந்த பெண்ணுக்கு `ர’ வை உச்சரிக்க.

வராது `ஹ’ ன்னு தான் சொல்வாள் இதுக்காகவே ஸ்கூலில் நிறைய

பேர் அவளை கேலி செய்வதுண்டு.

ஒம் பேரு என்ன?

பஹிபூஹணம்.

ஒங்கம்மா பேரு...

ஹாஜபூபதி ( ராஜ பூபதி.)

உந் தம்பி பேரு

ஹாம தொஹ (ராம துரை)

தங்கச்சி...

ஹாஜ குமாஹி (ராஜ குமாரி)

எல்லோரும் கெக்கலி கொட்டி சிரிப்பார்கள். அவளை பார்க்க பாவமா

யிருக்கும். சில சமயம் அழுதும் விடுவாள். அவர்கள் வீட்டில் அத்தனை

பேருக்கும் இந்த குறையும் இருந்தது, அத்தனை பேர் பெயரிலும் ர வும்

இருந்தது. ` நாக்குல வசம்ப சுட்டு தேச்சி வுட்டா, நாக்கு திருத்தமா

பேச்சி வரும்’னு மருந்து சொல்வோரும் இருந்தனர். வீட்டின் வறுமை

காரணமாக அத்துடன் படிப்பையும் நிறுத்தி விட்டாள்.



ஸ்கூலுக்கு எதிரில், மேஜையாகவும் இல்லாத, ஸ்டூல் மாதிரியும்

இல்லாத ஒரு பலகை வச்சி, அதில் ஜவ்வு மிட்டாய் வச்சி அவங்க

அம்மா வியாபாரம் பண்ணுவாங்க. அவங்க ஜவ்வுமிட்டாய் ஸ்கூல்

பிள்ளைகளிடம் மிகவும் பிரபலம். நல்ல பஞ்சுமிட்டாய் ரோஸ்கலர்ல,

மஞ்சள் கலரில், பொரிகடலை நொறுக்கி அதில் தூவி, என தினுசு்தினுசா

வச்சிருப்பாங்க. எனக்கும் ஆசையா இருக்கும். ஆனா அம்மா திட்டுவாங்க.

ஈ மொய்க்கும் வாங்க கூடாதுன்னு சொல்வாங்க. அதனால ஒரு தடவ

`அம்மா இப்போ தா போட்டுட்டு இடுக்காங்க’ ன்னு வீட்டுக்கு கூட்டிட்டு

போனா. அவங்கம்மா பாகு காய்ச்சிட்டிருந்தாங்க. தம்ளர் தண்ணியில

ஒரு சொட்டு பாகை வுட்டு `இப்பிடி கரையாம இருந்தா பதம் வந்துட்டு’

ன்னு சொல்லி ஒரு அகல பாத்திரத்துல தேங்கா எண்ணய தேச்சி அதுல

ஊத்தி ஆற வச்சாங்க. பாதி சூட்டிலேய எடுத்து, கைலயும் எண்ணய

தேச்சிட்டு, மொத்த பாகையும் சுருட்டி கைல எடுத்தாங்க. சூடா இருக்கும்

போதே இழுக்கணும்‘ னு ஒரு கொக்கில போட்டு இழுக்க ஆரம்பிச்சாங்க.

இதுக்குன்னே வாசல் நெலை ல `ட’ மாதிரி ஒரு கொக்கி அடிச்சி வச்சி

இருந்தாங்க. அது எண்ண கசடேறி பளபளன்னு இருந்திச்சி. சூடு தாங்காம

அடிக்கடி கைய ஊதிக்கிட்டாங்க. சூடா மிட்டாய இழுத்து இழுத்து, அவங்க

கையெல்லாம் காய்ப்பு புடிச்சி இருந்திச்சி. ரொம்ப நேரம் இழுத்திட்டே

இருந்தாங்க. `இப்புடி இழுக்கலன்னா மிட்டாயி ஜவ்வு இல்லாம கடுக் கடுக்

ன்னு ஆயிரும்‘னு சொல்லிட்டே எனக்கு மிட்டாய் குடுத்து அனுப்னாங்க.



நினைவுகளில் மூழ்கியிருந்த எனக்கு திடுமென நினைவு வந்தது. அவள்

மகள் அவளைப் போலில்லாமல் சுத்தமாக பேசுவாளா, `ர’ வை அழுத்த

மாய் உச்சரிப்பாளா, என்ன பெயர் வைத்திருப்பாள்? கவலையாய் நினைத்த

போதே, அந்த பெண்ணின் திருத்தமான முகம் நினைவு வந்தது. அதில்

தெளிவும், தன்னம்பிக்கையும் விரவி நின்றதாய் தோன்றியது. கல்லூரி

யில் படிப்பதாய் கூறியது நினைவு வந்தது. ஜவ்வு மிட்டாயின் இனிப்பு

இப்போதும் தித்தித்தது.

.

Wednesday, December 1, 2010

வினோத நட்பு

.

.விலங்குகளின் வினோத நட்பு பற்றிய சில புகைப்படங்கள், இணையத்தில்

( கூகிள் ) காணக் கிடைத்தன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.




ஓ..... எத்துணை இனிமையானவை..., அன்பு நண்பனின் கரங்கள்.

-மேரி ஏங்கல் ஃப்ரைட்.




.நட்பு என்பது, ஒரே ஆன்மா.., இரு உடல்களில். _ அரிஸ்டாடில்




நண்பனுடன் இருட்டில் நடப்பது, வெளிச்சத்தில் தனியே நடப்பதை

விடவும் இனிமையானது. - ஹெலன் ஹெல்லர்.





உங்கள் உறவுகளை நிர்ணயிப்பது விதியென்றாலும், உங்கள் நட்பை

நீங்கள் நிர்ணயம் செய்ய முடியும். _ஜக்யுஸ் டிலைட், பிரெஞ்சு கவி





உண்மையான சந்தோஷம் எத்தனை நண்பர்கள் என்பதில் இல்லை,

நண்பர்கள் யார் என்பதிலேயே....- சாமுவெல் ஜான்சன், பிரிட்டிஷ்

எழுத்தாளர்.





நண்பர்களை் அளவிட நினைத்தால், உன்னால் யாரையுமே நேசிக்க

முடியாது. _ மதர் தெரசா.





நட்பு, நிதானமாக அமையலாம்; ஆனால் இறுக்கமானதாகவும்,

நிலையானதாகவும் அமைய வேண்டும்._ சாக்ரடீஸ்




என்னுடைய சந்தோஷத்தை என் நண்பனின் இழப்பில் கொண்டாட

முடியாது._ ஜார்ஜ் வாஷிங்டன்.





ஒரு உண்மையான நண்பன் 10,000 உறவினர்களுக்கு சமம்.

_ யூரி பைட்ஸ் , கிரேக்க எழுத்தாளர்.


.

Thursday, November 25, 2010

பலநாள் பாவமும், ஒருநாள் புண்ணியமும்...

.

.நேற்று மாலையிலிருந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.

பலத்தமழை இல்லையென்றாலும், கொஞ்சம் பலத்த தூறலாக, அவ்வப்

போது கொஞ்சம் பலமாக என இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.

அந்த சின்ன குடிசையின், முன்னிருந்த ஒட்டு திண்ணையில் சுருட்டி

மடக்கி உட்கார்ந்து இருந்தார் தண்டுபத்து பாட்டி. குடிசையின் பல இடங்

களில் மழைநீர் சொட்டிக் கொண்டிருந்தது. அலுமினிய போணி, தகர

வாளி, பிளாஸ்டிக்டப்பாஎன அங்கங்கே ஒவ்வொன்று, சொட்டும் துளிகளை

வாங்கிக் கொண்டிருந்தன.



பக்கத்து தெருவிலிருக்கும் இந்துஸ்கூலில் லீவு விட்டுவிட்டார்கள் போலும்

குழந்தைகள் `ஹைய்யா’ என்ற உற்சாக ஆரவாரத்துடன், `இன்னிக்கு

ஃபுல்லா மழ பெய்யுமாம்’ எனக் கத்தியபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சாயங்காலம் மாதிரி அடைத்து இருட்டிக் கொண்டிருந்த வானத்தை பார்க்க,

பார்க்க பாட்டிக்கு வயிற்றில் புளியை கரைத்தது போலிருந்தது.


பாட்டியின் பேரே நிறைய பேருக்கு தெரியாது. பிறந்த ஊரான தண்டுபத்தி

லிருந்து வாழ்க்கை பட்டு வந்ததிலிருந்து `தண்டுபத்தாள்’ தான்.இதைப்

போல `காயாமொழியாள், மூலக்கரையாள்’, என ஊர் பெயரே சொந்த

பேரானவர்கள் நிறைய பேர் இருந்தனர். கொஞ்சம் பெரிசுகளுக்கு தண்ட

பத்தக்கா, மற்ற எல்லோருக்கும் தண்டபத்து பாட்டி தான். பாட்டி அவள்

கணவர்க்கு இரண்டாம் தாரம். அவரை விட அவர் கணவர் இருபது

வயது கிட்ட மூத்தவர். மூத்தாள் மகன் ராமசாமிக்கு 18 வயதிருக்கும்.

இவரைவிட நான்கைந்து வயது தான் குறைவு. திருமணமான கொஞ்ச

நாளிலேயே கணவர் போய் சேர்ந்துவிட, குழந்தை குட்டி இல்லாத

பாட்டி தனியானார். `சொந்த மகனே ஒண்ணும் செய்றதில்ல, இவ எங்க

நம்மள கவனிப்பா’ன்னு பாட்டி தன்கையே தனக்குதவின்னு வேலை செய்ய

ஆரம்பத்தார்.


நல்ல மினுமினுக்கும் கறுப்பு நிறம், எண்பது வயதுக்கு தளராத தேகம்.

மூணு வருஷத்துக்கு முன் `சிக்கன்குனியா’ காய்ச்சல் வரும்வரை,

பாட்டி அறுப்பு, நடவு என ஏதோ ஒரு வயல் வேலை பார்த்துக் கொண்டு

தானிருந்தார். தெருவில் முக்கால்வாசி பேரின் நடையே காய்ச்சலால்

வித்தியாசமாக மாறிவிட்டது. பாட்டியையும் மூட்டுவலி படாதபாடு படுத்தி

விட்டது. காய்ச்சலில் கிடந்த போது, ராமசாமியின் மகள் பாக்கியம் தான்

பார்த்துக் கொண்டாள். கொஞ்சம் முன்கோபம் அதிகமே தவிர ஓரளவு

செய்வாள். யார்யாரையோப் பார்த்து, எழுதிப்போட்டதில் முதியோர்

உதவித் தொகை 400 ரூ வருகிறது. அதில் 200 ரூ வை சாப்பாட்டுக்கு

என பாக்கியத்திடம் கொடுத்து விடுவாள். மிச்சப் பணத்தை சேர்த்து

வைத்ததில் 2000 ரூ இருக்கிறது.



கூரைக்கு புதுஓலை வைக்கலாம் என விசாரித்துப் பார்த்தாள். `ஓல

வாங்க மட்டுமே 2000 ரூ ஆவுமாம், அப்புறமா மோட்டு ஓல தனியா

வேணும், இத்துப் போன நாலஞ்சு கம்ப மாத்தணும், கூலி தலக்கி

400 ரூன்னு ரெண்டு பேருக்கு, ‘ பாட்டி தனக்குள் கணக்கு பார்த்துக்

கொண்டு இருந்தார்.



மழை விடுவதாக இல்லை. `போனதடவ ரோடு போடுறேன்னு ரோட்ட

வேற ஒசத்திப் புட்டானுவ. மழத்தண்ணீ உள்ள வந்துறும் போல இருக்கு’

எரிச்சலோடு அங்கேஇங்கேயிருந்து நாலைந்து துண்டு செங்கல்லை எடுத்து

வந்து வாசல் முன்னால அடுக்கி வச்சு, அதும்மேல கொஞ்சம் மண்ணை

அள்ளிப் போட்டு தற்காலிகதடுப்பு சுவர் அமைத்து அதையே பயத்துடன்

பார்த்துக் கொண்டிருந்தார். `ஹூம்... பல நாள் பாவத்த தாங்குனாலும்,

ஒரு நாள் புண்ணியத்த தாங்க முடியாது போல’, அங்கலாய்த்துக் கொண்டு

இருந்தார். மழை இன்னும் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. பக்க வாத்யமாக

பாட்டியின் புலம்பலும் சேர்ந்து கொண்டது.

.

Friday, November 19, 2010

நல்லதொரு குடும்பம்...., பதிவுலகம்.

.

பதிவர் செல்வேந்திரனின் திருமணத்தில் கலந்து கொள்ள மறுநாள் காலை

திருச்செந்தூர் வரப்போவதாக, புதன்இரவு மாதுஅண்ணனிடம் இருந்து

போன் வந்தது. பதிவுலக நண்பர்கள் சிலரும் வந்திருப்பதாகவும்,

திருமணம் முடிந்து திரும்பும் போது என்னை பார்க்க வருவதாகவும்

மாதுஅண்ணன் கூறியதும் சந்தோஷத்துடன், ``அப்போ நம்ம வீட்டுக்கு

மத்தியான சாப்பாட்டுக்கு வந்து விடுங்கள்’ என்றேன். நண்பர்களிடம்

கேட்டு, அண்ணன் சரியன்றதும், மிக உற்சாகமாக, சந்தோஷமாக

காத்திருந்தேன். ஸாரி, காத்திருந்தோம். ஆம், என் கணவரும் லீவு

போட்டுவிட்டு வீட்டிலிருந்தார்.



இந்த டிசம்பர் வந்தால், `சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்ற பீடிகை

யுடன் பதிவுலகத்துக்கு வந்து ஒரு வருடம் முடியப் போகிறது. எழுத

ஆரம்பித்த சில நாட்களில், `நான் உங்கள் பக்கத்து ஊர்க்காரி, தற்சமயம்

துபாயில் இருக்கிறேன்’என்று் இமெயிலில் அறிமுகமானவர் அன்புத்தோழி

சுந்தரா. பின்னர் chat ல் தொடர்ந்த அன்பு, சென்ற ஆகஸ்ட் மாதம்,

லீவில் ஊர் வந்திருந்த போது, ஆறுமுகனேரி வந்து, என் வீட்டை

விசாரித்து, திடீரென என்முன் வந்து நின்றபோது சந்தோஷத்தில் திக்கு

முக்காடிப் போனேன். மிகக் குறைந்த நேரமே பேசிக் கொண்டிருந்தோம்.

அவரும் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. நானும் வெளியே

கிளம்பிக்கொண்டிருந்ததால் மற்றொரு நாள் வருவதாக கூறிச் சென்றார்.

மறுநாள் செல்லில் அழைதுப் பேசினேன். இரண்டொரு நாளில் ஊர்

திரும்புவதாகவும், அடுத்தமுறை வரும்போதும் கட்டாயம் வருவேன் என்று

விடைபெற்றார். நான் சந்தித்த முதல் வலையுலக சொந்தம் இவர் தான்.



சமீபத்தில் சென்னை வந்திருந்த போது பதிவர் தீபாவின் வீட்டில் வைத்து,

அகிலா ஸ்ரீ அகிலாவை தீபா அறிமுகப் படுத்தினார். `அக்கா’ என வாய்

நிறைய அழைத்து அன்போடு பேசிய அகிலாவை சந்த்தித்தது அதுதான்

முதல்முறை என என்னாலேயே நம்ப முடியவில்லை.


நேற்று (வியாழன்) மதியம் பன்னிரண்டு மணியளவில், மாதுஅண்ணன்

பாரா அண்ணன், அண்ணன் மணிஜீ, வடகரைவேலன் ஆகியோர் வந்தனர்.

பின்னூட்டங்கள் மூலம் அன்பை பொழியும் பாரா அண்ணன், எங்கேயோ

கண்காணாத தேசத்தில் இருந்து அன்பால் அறிமுகமான பாரா அண்ணன்,

என்முன் எளிமையான சிரிப்புடன் அமர்ந்திருந்தார். என்னை கட்டாயம்

பார்க்க வேண்டும் என்றதாக மாதுஅண்ணன் கூறிய போது நெகிழ்ந்து

போனேன். அண்ணன் மணிஜீ, வேலன் ஆகியோர் எழுத்துக்களை ஓரளவு

வாசித்திருக்கிறேன். சிறிது நேரம் குடும்பம், குழந்தைகள் என பரஸ்பர

அறிமுகங்கள், விசாரிப்புகளை தொடர்ந்து கலகலப்புக்கு பஞ்சமில்லாத

அரட்டை, சிரிப்பு, பேச்சு, பின் மதிய உணவு என நேரம் போனேதே

தெரியவில்லை. தங்கையின் கணவரை அத்தான் என்றுதான் அழைப்

போம் என பாராஅண்ணன், என் கணவரை அத்தான் என்று உரிமையோடு

பாசத்தோடு அழைத்த போது, அவரும் நெகிழ்ந்து தான் போய்விட்டார்.

மணிஜீஅண்ணன் பிறந்தநாள் என்றறிந்து சந்தோஷத்துடன் வாழ்த்தினோம்

அப்பாவை வணங்கி பிறந்தநாள் ஆசீர்வாதங்கள் பெற்றபின்னர், அனைவ

ரிடமும் விடைபெற்று கிளம்பி சென்றனர். வீடு வெறுமையாய் ஆனாலும்

மனம் நிறைந்திருந்தது.


புதியவர்கள், முதல்முறையாக சந்திக்கிறோம் போன்ற உணர்வுகளின்றி,

ஒரு குடும்பத்தவர் போல் நெருக்கமாய் உணர்ந்தோம். எங்கோ ஒரு

கிராமத்தில் வாழும் என்னையும், இணைய குடும்பத்தில் இணைத்து

வைத்த பதிவுலகை, சந்தோஷமாய், பெருமையாய், நன்றியுடன்

நினைக்கிறேன். இந்த சந்தோஷத்துக்கு காரணமான செல்வேந்திரன்

தம்பதியினர்க்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

.

Friday, November 12, 2010

ரயில் பயணத்தில் ஒரு கனவான்.

.

.சமீபத்தில் சென்னை செல்ல நெல்லை எக்ஸ்ப்ரஸ்ஸை தேர்ந்தெடுத்த

போது எனக்கு அத்துணை விருப்பமில்லை.ரயில்பயணம் பிடிக்காததால்

அல்ல. இங்கு நாலரை மணி லிங்க் ட்ரெய்னில் ஏறி, நெல்லை சென்று,

அ்ங்கிருந்து நெல்லை எக்ஸ்பிரஸில் பயணித்து, சென்னை சென்றடையும்

நேரம் காலை 6 1/2 என்பது பலசமயங்களில் 7 1/2 ஆகிவிடுமாதலால்

மொத்தம் 15 மணிநேரம் பயணம்.., வெறுத்துப் போய்விடுகிறது. ரயில்

பயணம் சௌகர்யம் என்றாலும், அலுப்பு தட்டிவிடுகிறது. இதைவிட10 1/2

அல்லது 11 மணி நேரத்தில் சென்னையை அடைந்து விடுகிற ஆம்னிபஸ்

களே தேவலாம் என்றிருக்கிறது.



நானும், கணவரும் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரில் ஒரு பெண்மணி,

பள்ளி ஆசிரியை என்பது கையில் வைத்திருந்த புத்தகத்தில் இருந்து

தெரிந்தது. அடுத்து இரு ஆண்கள், சைட் சீட்டில் ஒருகணவன், மனைவி

இரு பெண்குழந்தைகள். முதல் பெண்ணுக்கு ஐந்து வயது இருக்கலாம்.

அடுத்தது ஏழெட்டு மாதமே நிரம்பியிரு்ந்த கைக்குழந்தை. அந்த கணவர்

நல்ல கண்ணியமான தோற்றத்துடன் காணப்பட்டார். நேர்த்தியாக உடை

அணிந்திருந்தார். பார்க்க படித்தவர் போல் தெரிந்தார். ரயில் கிளம்பியது

தான் தாமதம், ஒரு வாராந்தரியை எடுத்துக் கொண்டு மேல் பெர்த்துக்கு

சென்று விட்டார். அந்த முதல்பெண் `துறு துறு வென ஓடிக்கொண்டும்,

மேல்பெர்த்துக்கும், கீழ்பெர்த்துக்கும் ஏறி இறங்கிக் கொண்டுமாக இருந்தது.

மின்விளக்கு, மின்விசிறிகளின் சுவிட்சுகளை போட அணைப்பதுமாக

விளையாடிக் கொண்டிருந்தது. அந்தபெண் மடியில் கைக்குழந்தையை

வைத்துக் கொண்டு, பெரியபெண்ணின் அத்தனை குறும்புகளையும்

சமாளித்துக் கொண்டிருந்தார்.



சற்று நேரத்தில் அனைவரும் சாப்பிட தொடங்கினர். அந்த கணவர்

கொண்டு வந்திருந்த பார்சலை எடுத்து தருமாறு உத்தரவிட்டார்.

மேலிருந்தபடியே பார்சலை வாங்கிக் கொண்டு அங்கேயே வைத்து

சாப்பிட தொடங்கினார். பெரிய பெண்ணுக்கு அம்மா ஊட்டிக் கொண்டி

ருந்தார்.பெண் தண்ணீர் கேட்க, அந்த பெண் கணவரிடமிருந்த தண்ணீர்

பாட்டிலை தருமாறுக் கேட்டார். அவர்,`ஏன் வேற பாட்டில் இல்லையா’

என்று கேட்டார். மனைவி இல்லையென தலையாட்டியதும், அவருக்கு

வந்ததே கோபம்.,` ஒரு பாட்டில் தண்ணீ எப்படி போதும், காலைல

வரைக்கும் வேண்டாமா? அறிவிருக்கா ஒனக்கு’ என காச்மூச் எனக் கத்த

ஆரம்பித்தார். ``மூணு பெருக்கு ஒரு பாட்டில் தண்ணீ... ஹூம்..’’

தலையிலடித்துக் கொண்டார். அவரின் மனைவி தலை கவிழ்ந்து,

கீழுதட்டை கடித்து, பொங்கிவரும் கண்ணீரை அடக்க பிரயத்தனம் செய்து

கொண்டிருந்தார். அந்த இடமே நிசப்தமாகி விட, அத்தனை பேரும் அந்த

கனவானை உறுத்துப் பார்த்தோம். `நீயெல்லாம் ஒரு மனுஷனா?’ என்ற

கேள்வி அனைவர் பார்வையிலும் தொக்கி நின்றது. நான்குபேர் முன்னிலை

யில் குழந்தைகளை அதட்டுவதே நாகரீகமான செயல் அல்ல. ஆனால்

அந்த கனவான் எதைப்பற்றியும் கவலைப்படாமல், விடுவிடென இறங்கி

சென்றவர், சற்று நேரம் கழித்து வந்தார்; மீண்டும் மேலேறினார்.

மல்லாந்து படுத்தவர் நிச்சிந்தையாக தூங்க ஆரம்பித்தார். கீழே அந்தப்

பெண் அழும் கைக்குழந்தைக்கு பசியாற்றிக் கொண்டிருந்தார். மெல்லிய

குறட்டையொலி வெளிப்பட்டது அந்த கனவானிடமிருந்து.

.

Tuesday, November 9, 2010

பொறுப்புணர்வு.

.

.நான் எழுதிய `கொட ரிப்பேர்’ என்ற சொற்சித்திரம், செம்மலர் தீபாவளி

மலரில் வெளியாகியுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்

மகிழ்கிறேன்.


பொறுப்புணர்வு

.நான்கு சாலைகள் சேரும் இடத்தில், ஒர்ஓரமாக அந்த பெரிய சின்டெக்ஸ்

நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப் பட்டிருந்தது. சுற்றிலுமிருந்த நான்கைந்து

தெருமக்கள் குடிநீர் தவிர்த்த மற்றைய அனைத்து தேவைகளுக்கும் அந்த

நீர்தேக்கத்தொட்டியையே நம்பியிருந்தனர்.வீடுகளில் கிணறு, போர்வெல்

அமைத்திருந்தவர்கள் தவிர, மற்ற அனைவரும் அங்கே தான் தண்ணீர்

பிடிப்பார்கள். தொட்டியின் இருமருங்கிலும், குழாய்கள் அமைக்கப்பட்டு

சுற்றிலும் சிமெண்ட்டினால் மேடை கட்டப் பட்டிருந்தது. அதிக உப்பாயிரா

மல், கொஞ்சம் சப்பென்றிருக்கும். குடிநீர்குழாய்கள் காலை வாரிவிடும்

சமயங்களில், சோறு பொங்கவும், ஏன் குடிப்பதற்கும் கூட சிலர் இந்நீரை

பயன்படுத்துவதுண்டு.



அந்தப்பகுதியை கடந்து செல்கையில் கவனித்தேன், அந்த தொட்டியில்

சிறுதுளை ஏற்பட்டு, அதன் வழியே தண்ணீர் சர்ரென்று பீய்ச்சியடித்துக்

கொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் சிலர் தண்ணீர் பிடித்துக்

கொண்டிருந்தனர். இலேசாக M_Seal வைத்துக்கூட அடைத்து விடலாமே

என எண்ணமிட்டவளாய் கடந்து சென்றுவிட்டேன். இரண்டு நாட்களாய்

இதே நிலை தொடர்ந்தது.



மூன்றாவது நாள் பார்க்கும் போது துளை அடைக்கப் பட்டிருந்தது. சரி

செய்து விட்டர்கள் போலும் என நினைத்தவள், அருகிலிருந்த சிறுமி

யிடம் ``இதை அடைத்துவிட்டார்களா’’ எனக் கேட்டேன். அந்தப்பெண்

தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை சுட்டிக் காட்டி

`அதோ அவங்க தா பபுள்கம்மை வச்சி அடைச்சி வச்சிருக்காங்க’’

என்றாள்.

.

Monday, October 18, 2010

குலசை, தசரா திருவிழா

.
.மூன்று ச.கிமீ. பரப்பளவேக் கொண்ட சிறிய கடற்கரை கிராமம், இன்று

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடி தசராதிருவிழா இங்கு தான் பிர

பலம்.மைசூரைப் போல பிரம்மாண்டமோ. ஆடம்பரமோ கிடையாது.

இந்த திருவிழாவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்

வதாக கூறப்படுகிறது. குலசை என்று சுருக்கமாக அழைக்கப் படும் குல

சேகரப்பட்டிணம் முற்காலத்தில் பாண்டியர்களின் துறைமுகமாக திகழ்ந்

தது. தூத்துக்குடி முக்கிய துறைமுகமாக மாற்றப் பட்டபின்னர், இதன்

முக்கியத்துவம் குறைந்தாலும் 300ஆண்டுகள் பழமையான முத்தாரம்மன்

கோயில் அனைவரையும் ஈர்த்துள்ளது.


இந்த திருவிழாவின் முக்கிய அம்சம், பக்தர்கள் விதவிதமான மாறுவேட

மணிந்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது தான். நவராத்திரி

தொடக்க நாளன்று, மாலையணிந்து, காப்பு கட்டி விரதம் தொடங்குவர்.

அவரவர் விருப்பத்திற்கேற்ப அம்மன், காளி, ராமர், சீதை, முருகன்,

ஹனுமன், கரடி என பலவிதமான வேடமணிந்து, வீடுவீடாக வந்து,

அம்மனுக்கு காணிக்கை வாங்கி கோயிலுக்கு செலுத்துவர். இந்த பத்து

நாட்களிலும், ``முத்தாரம்மனுக்கு காணிக்கை போடுங்க’’ எனும் குரல்களை

தினம் பலமுறை கேட்கலாம். கிறிஸ்டியன், முஸ்லீம் என அனைத்து

மதத்தவரும் இவர்களுக்கு காணிக்கை போடுவது ஆச்சர்யமான

விஷயம்.
ஞானமூர்த்தியாக சிவனும்,முத்தாரம்மனாக சக்தியும்

ஒன்றாக காட்சி அளிப்பது மற்றோரு சிறப்பம்சம்.








``வாராளே..., வாராளே.., முத்தாரம்மா ; நாங்க

வேஷம் கட்டும் அழக பாக்க ...

என்னும் பாடல் அழகான நாட்டுப்புற மெட்டில், நெல்லை, தூத்துக்குடி

மாவட்ட அனைத்துக் கிராமங்களிலும் ஒலிக்கக் கேட்கலாம்.. வேடம்

அணிந்த பக்தர்கள், காலை ஏழுமணியிலிருந்து, இரவு பதினொருமணி

வரையிலும் கூட வருகின்றனர். சிலர் குழுக்களாக சேர்ந்து மேளதாளத்

துடன் ஆடியபடி வருவர். வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை,

வருடாவருடம் அதிகரித்து வருகிறது.


எங்கள் வீட்டு வாசலுக்கு வந்த பக்தர்கள்

காளி






அம்மன்.




ஹனுமன்





லட்சகணக்கான மக்கள் கூடுவதால், இந்த சிறியகிராமம் திணறித்தான்

போகிறது. அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் கூறிய

விஷயம் இது. வேடமணியும் பக்தர்கள் உலோகத்தாலான சூலம், வேல்

கொண்டு வருவது தடை செய்யப் பட்டிருக்கிறது. ஆனாலும் தடையை

மீறி பலர் கொணர்வதால், கூட்டநெரிசலின் போது பலருக்கு குத்தி

கிழித்து காயம் ஏற்படுகிறது. அவர்களுக்கு தையல் போடுவது,ம் , கட்டு

போடுவதுமே எங்களுக்கு பிரதான வேலை என்றார்.


நேற்று முந்தினம், இப்படித்தான் கரடி வேடமணிந்து வந்த பக்தரின்

ஆடையில் ( கருப்பு நிற பாலிஸ்டர் துணியில் இழைஇழையாக தைத்து

இருக்கும் ) கூட வந்த அம்மன் வேடமணிந்தவரின் கையில் வைத்திருந்த

தீச்சட்டியில் இருந்து நெருப்பு பொறி பறந்து விழுந்து தீப்பிடித்து விட்டது.

உடலெல்லாம் பலத்த தீக்காயம். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்

பட்டார். கூட்டமும் நெரிசலும் மிக அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு

விதிகள் இன்னமும் அதிகப் படுத்த வேண்டும்.


மொத்தத்தில் ஓர் அழகான நாட்டுப்புற திருவிழாவாக இதை ரசிக்கலாம்.

.

Tuesday, October 12, 2010

பிறப்பின் பிறழ்வு..., திருநங்கைகள்.

.

.
.

.நான் சிறுபெண்ணாக இருந்தபோது ஊரில் `கணியான் கூத்து’ என்றொரு

நிகழ்ச்சி நடக்கும். ஆண்கள், பெண்களாக வேடமிட்டு நடிக்கும் ஒருவகை

நடனநிகழ்ச்சி அது. கொஞ்சம் ஆண் சாயலோடு இருக்கும் பெண்களை,

`கணியான் மாதிரி இருக்கா’ என்று புறம் பேசுவது வழக்கமாயிருந்தது.

அப்போதெல்லாம் நிஜமாகவே அப்படி ஒரு பிரிவினர் இருப்பது தெரியாது.

கொஞ்சம் விவரம் தெரிந்த பின், அரவாணிகள் பற்றி தெரிய வந்தது.

அதுவும், சித்திரை மாதம் அவர்கள் நடத்தும் கூத்தாண்டவர் திருவிழா,

மிஸ்கூவாகம் பற்றிய பத்திரிகைசெய்திகள் வழியாய் புரிந்தது. அரவாணி

என்றழைக்க படும் இவர்கள், தங்களை மகாபாரத அரவாணின் மனைவி

யாக பாவித்து தாலி கட்டிக் கொள்வதும், மறுநாளே தாலியறுத்து ஒப்பாரி

வைப்பதும் செய்திகளாக வந்தன.



ஆனால் நிஜத்தில் இவர்கள் நிலையென்ன? பால்திரிபு காரணமாய் பெற்றோ

ராலும் மற்றோராலும் புறக்கணிக்கப்பட்டு், பிச்சையெடுப்பவர்களாகவும்,

பாலியல் தொழிலாளியாகவும் வாழும் நிலைக்குத் தள்ளப் படுகின்றார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் 1,50,000 திலிருந்து 2,00,000 அரவாணிகள் இருப்ப

தாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இந்தியாவின் முதல் HIV பாஸிட்டிவ்

ரிசல்ட், தமிழ்நாட்டில் இருப்பதாக அறிந்த பின்னர் தான், அரசாங்கம்

பாலியல் தொழிலாளிகள் பற்றியும், அரவாணிகளாக வாழ்பவர்கள் குறித்

தும் கவனம் கொள்ளத் தொடங்கியது. அவர்கள் தங்களைப் பற்றி சிந்திக்க,

பேச ஒரு தளம் அமைத்துக் கொடுக்கப் பட்டது.



திருநங்கையாக பிறந்து, விடாமுயற்சியாலும், உழைப்பாலும் உயர்ந்த

நர்த்தகி நடராஜ், சக்திபாஸ்கர், இவர்களுக்கு தஞ்சை ராமையாப் பிள்ளை

அவர்களின் மாணாக்கராகும் வாய்ப்பு கிடைத்தது. அபார கலைத்திறமை

யால் முன்னேறிய இவர்களில் நர்த்தகி தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில்

நடனத்துறை விரிவுரையாளராக பணிபுரிந்தார். ஒரு பேட்டியில், இந்த

வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திராவிட்டால் நீங்கள் என்னாவாகியிருப்பீர்கள்

என்ற கேள்விக்கு, `மற்ற துர்பாக்யசாலிகளைப்போல நானும், மும்பை

யிலோ, அல்லது வேறு எங்காவதோ விபச்சாரத்துக்கு தள்ளப்பட்டிருப்பேன்

என்கிறார்.



தமிழ்நாடு அரவாணிகள் நல சங்கத்தின் தலைவாராகவும், SIDA எனும்

அமைப்புக்கு மேனேஜிங் ட்ரெஸ்டியாகவும் திகழும் பிரியாபாபு எனும்

மற்றொரு திருநங்கை, அரவாணிகளின் தற்போதைய நிலை தேவலாம்

என்கிறார். 15 வருட போராட்டங்களின் வெற்றியாக அவர் குறிப்பிடுவது,


அரவாணிகளை, `மற்றவர்கள்’ எனும் பிரிவின் கீழ் கொணர்ந்து, அவர்

களுக்கு ரேஷன்கார்டு, வோட்டர் ஐடி, ஓட்டுரிமை வழங்க சுப்ரீம்கோர்ட்

அணையிட்டது,

பால்மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமாக்கியது,

சுயவேலை வாய்ப்பு திட்டங்கள்,

பள்ளி, கல்லூரிகளில் பால்திரிபை காரணம் காட்டி அவர்களுக்கு அனுமதி

மறுக்கக் கூடாது போன்றவைகள்.







`சகோதரி பவுண்டேஷன்’ எனும் அமைப்பை நடத்தி வரும் கல்கி எனும்

மற்றொரு திருநங்கை ஜர்னலிசம் படித்தவர். பள்ளி,கல்லூரிகளில் விழிப்

புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இளம்வயதில், பள்ளி, கல்

லூரிகளில் அவமானப் படுத்தப்பட்டு, அதன் காரணமாக தன்னை திடமான

வராக, தைர்யசாலியாக வளர்த்துக் கொண்டவர். திருநங்கைகளுக்காக

முதல் திருமண தளம் ஒன்றை இணையத்தில் நிறுவியிருக்கிறார். சென்ற

வருடம் `வாழ்நாள் சாதனையாளர்’ விருது அரிமாசங்கத்தினரால்,

இவருக்கு வழங்கப் பட்டிருக்கிறது.


விவரம் புரியாவயதில் தனக்குள் நடக்கும் வினோதத்தை புரிந்து கொள்ள

முடியாமல், பெற்ற தாய் உட்பட அனைவரின் புறக்கணிப்புக்கும் ஆளாகும்

இவர்களுக்கு தேவை அரவணைப்பும், பாதுகாப்புமே. ஆனால் அதை இந்த

சமூகம் தருவதில்லை. மாறாக எள்ளி நகையாடுகிறது.


`ஆணாகி, பெண்ணாகி நின்றானவன்’ என்ற அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை

ஏற்றுக் கொண்ட நாடு இது. ஆனால், உயர்திணையில் பிறந்தும்,இவர்களை

அஃறிணையாகவே சமூகம் பார்க்கிறது. `பேடி‘, `அலி’ என எத்தனை

கேவலமான சொற்கள்.... முதலில் இந்த திரைப்படங்களில், எங்களை

கேவலமாகவும், நகைச்சுவையாகவும் சித்தரிப்பதை நிறுத்துங்கள்’ எனக்

குமுறுகிறார்கள். உண்மைதானே! அரவாணிகள் என்றாலே, பெண்புரோக்

கர்கள், பாலியல் தொழிலாளிகள் என்பதாகத்தானே சித்தரிக்கிறார்கள்.

டி.ராஜேந்தரின், ஒருதலைராகம் தொட்டு ( கூவாத கோழி கூவுற வேள)

அமீரின் பருத்திவீரன் ( ஊரோரம் புளிய மரம்) வரை இவர்கள் நகைச்

சுவை பாத்திரங்களாகத்தானே சித்தரிக்க பட்டிருக்கிறார்கள்..



அரசாங்கமும், அரசாணகளும் வெறும் புள்ளிகள் மட்டுமே வைத்திருக்

கின்றன. அதை அழகான கோலங்களாக்குவது சமூகம், மற்றும் பெற்ற

வர்களின் கையில் தான் இருக்கிறது.

.

Friday, October 8, 2010

`கொடரிப்பேர்’

.
.`கொடரிப்பேர்...., கொடரிப்பேர்...., குடைரிப்பேர் செய்பவனின் குரல்

உரக்க ஒலிக்கிறது. `ஏ கொடரிப்பேர்... இங்க வா...’ ஒரு குரல் அழைக்

கவும் நிற்கிறான். `இந்த பட்டனைக் கொஞ்சம் சரி பண்ணிக்குடு’. சாலை

யின் ஓர்ஓரத்தில் அமர்ந்து கொள்கிறான். பையிலிருக்கும் உபகரணங்களை

எடுத்து பட்டனை சரி செய்ய ஆரம்பிக்கிறான். அதற்குள் `இந்த கம்பியக்

கொஞ்சம் சரிபண்ணித் தா..., இதோ நடுவுல கொஞ்சம் கிழிஞ்சிருக்குப்

பாரு’ அடுத்தடுத்து குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.



ஒவ்வொன்றாய் சரிசெய்து கொண்டே, இருட்டிக் கொண்டுவரும் வானத்தை

யும் அவ்வப்போது பார்த்துக் கொள்கிறான். கையிலிருக்கும் வேலை முடிவ

தற்கும், மழை பெருந்தூறலாய் விழுவதற்கும் சரியாயிருந்தது. உடமை

களை அவசரவசரமாய் பொறுக்கி கிழிந்ததுணிப் பையினுள்ப் போட்டு,

இடதுதோளில் தொங்க விட்டுக் கொண்டான். நான்கைந்து உடைந்துபோன

குடைகளை வலதுகக்கத்தில் இடுக்கிக் கொண்டு வேகமாய் நடக்க ஆரம்

பித்தான். `கொடரிப்பேர்... என்ற குரல் மழையில் கரைந்து போகிறது.

.

Monday, September 27, 2010

மாறிவரும் கிராமங்கள்....

.

.நகரத்து நாகரீகத்தின் கைகள், கிராமங்களை நோக்கி நீண்டு கொண்டிருக்

கின்றன. கண்கூடாக பார்க்க முடிகிறது மாற்றங்களை.



பெண்கள், பாவாடை தாவாணியிலிருந்து சுடிதார்க்கு மாறி விட்டனர்.

ஜீன்ஸ் அணியும் பெண்களைக் கூட பார்க்க முடிகிறது. நைட்டிக்கு மேலே

துண்டு போட்டுக் கொண்டு, குழாயடிக்கும், பக்கத்து கடைகளுக்கும் வரும்

பெண்களை காணமுடிகிறது. பெண்கள் சுதந்திரமாக ஷாப்பிங், லைப்ரரி

எல்லாம் சென்று வருகின்றனர்.


பசும்பால் வாங்க மாடு இருக்கும் வீடுகளை தேடிய காலங்கள் போய்,

பால்பாக்கெட்டுகளும், தயிர்பாக்கெட்டுகளும் கடைகளை ஆக்ரமித்துக்

கொண்டுவிட்டன. பசும்பால் கிடைப்பது இங்கும் அரிதாகி வருகின்றது.

விருந்தினர் வந்தால், யார் வீட்டில் நாட்டுக்கோழி கிடைக்கும் என்று

அலைந்த காலங்கள் மாறி, 24 மணி நேரமும் `பிராய்லர் சிக்கன்’

கிடைக்கிறது. அனைத்து மாவு வகைகளும் ரெடிமேடாக பாக்கட்டுகளில்

கிடைக்கின்றன.


அவ்வப்போது கேட்கும் பஸ்ஹாரன்கள் நிரந்தரமாக ஒலிக்கின்றது.

டிஜிட்டல் ஸ்டுடியோக்கள், கம்ப்யூட்டர் சென்ட்டர்கள், ஏடிஎம் வங்கிகள்,

என அத்தனை வசதிகளும் வந்துவிட்டன.


தெருக்கள் ஏழுமணிக்கே அரவமற்று அடங்க ஆரம்பித்து விட்டன.

முன்பெல்லாம் யார் வீட்டுக்காவது விருந்தினர் வந்தால், உடனே

தெரு முழுக்கதெரிந்து விடும். இப்போது, அனைவரையும் டிவி

சீரியல்கள் இழுத்து பிடித்துக் கொண்டு விட்டன.


போன மாதம், மதியம் பதினோரு மணியளவில், வீடுபுகுந்து, தனியாக

இருந்த 75 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று, அணிந்திருந்த இரண்

டரை பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இத்தனைக்

கும் நல்ல ஜனநடமாட்டம் மிகுந்த தெருவுக்குள் தான் வீடு. இரவு ஏழு

மணியளவில், அந்த பாட்டியின் உறவினர் வந்த பின் தான் கொலை

நடந்ததே தெரிந்துள்ளது.


ஆம்.... கிராமங்கள் மாறித்தான் விட்டன.

.

Monday, September 20, 2010

பூப்புனித நீராட்டு விழாக்கள்.., விளம்பரம் தேவையா..?

.

.அந்த வீதியின் முக்கிய இடங்களில் ப்ளக்ஸ் போர்டுகள். அரசியல் தலை

வருக்கோ அல்லது திருமண நிகழ்ச்சிக்கோ அல்ல. பூப்புனித நீராட்டு விழா

வுக்கான அறிவிப்பே அது. ஒரு சிறுமியின் `பெரிய’ படத்துடன்... பெருகி

வரும் புது கலாச்சாரம் இது. கிராமங்களில், சிறு நகரங்களில், மட்டு

மல்லாது, பெருநகரங்களிலும் பூப்புனித நீராட்டு விழாக்கள் இப்படி ஆடம்

பரமாக, பெரிய அளவில் கொண்டாடப்படுவது வியப்பையும் எரிச்சலை

யும் தருகின்றது.



பெண் பருவமடைந்து விட்டால் `சடங்கு’ வைப்பது சம்பிரதாயமான ஒரு

வழக்கம். முற்காலத்தில் பெண்கள் பருவமடைந்ததும், திருமணம் செய்து

கொடுத்து விடுவது பழக்கமாயிருந்தது. பெண், வயதுக்கு வந்துவிட்டால்,

`எங்கள் வீட்டில் பெண் திருமணத்துக்கு தயாராகி விட்டாள், பெண் கேட்டு

வருபவர்கள் வரலாம்' என்ற பகிரங்க அறிவிப்பாகவே இந்த விழாக்கள்

நடத்தப் பட்டனவாம். அக்காலத்தில் பெண்களை பெரியவர்களாகி விட்டால்

வெளியில் அனுப்ப மாட்டார்கள்.



ஆனால், இப்போது அப்படியில்லை. ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து

பள்ளியில் பயிலுகின்றனர். இந்நிலையில், பெண்களின் உடலில் ஏற்படும்

மிக இயல்பான, இயற்கையான நிகழ்வை, இப்படி பகிங்கரமாக அறிவிக்க

வேண்டுமா? படிப்பறிவும் நாகரீகமும் வளர வளர, இத்தகு பழம் சம்பிர

தாயங்கள் குறைய வேண்டாமா? மிகநெருங்கிய உறவினர்களுடன் வீட்டில்

வைத்து `தலைக்கு ஊற்றி ’ அடக்கமாக முடித்துக் கொள்ள முடியாதா?

அதிலும், இப்போதெல்லாம் பெண்கள், 9 லிருந்தி 11 வயதுக்குள் பருவ

மடைவது அதிகரித்து வருகிறது. குழந்தைத்தனம் மாறாத இந்த சிறுமி

களை மற்றவர் பார்வையில் ஏன் `பெரிய மனுஷி’ யாக்க வேண்டும்?

குழந்தைகளாக அவர்கள் இயல்புடன் வளர விடலாமே.!

.

Saturday, September 11, 2010

எங்கள் பிள்ளையார்.

.

தாத்தா விடு, அந்த காலத்து வீடு. முன்வாசலில் பெரிய திண்ணை,

அதைத் தொடர்ந்து பெரியக்கூடம், உள்முற்றம், சின்னக்கூடம், சின்ன

சின்ன அறைகள், அறைவீடு, அடுப்பாங்கரை, பின்னால் தோட்டம்,

மாட்டுத்தொழுவம், பின்வாசல் என அடுத்தத்தெரு வரை நீண்டிருக்கும்.

வீட்டின் முன் பக்கத்தை இடித்து `ரீமாடல் , செய்யும் போது, வீட்டின்

முன்னால் பிள்ளையார் கோயில் வைக்க வேண்டுமென அத்தை

(மாமியார்) சொன்னதால், திண்ணை இருந்த இடத்தில் பிள்ளையார்

கோயில் கட்டப் பட்டு பிள்ளையார் எங்கள் வீட்டுக்கு குடிவந்தார். அன்றி

லிருந்து அவரும் எங்கள் வீட்டின் நிரந்தர அங்கத்தினர் ஆகிப் போனார்.



அவரை எங்களில் ஒருவராக நினைத்து உரையாடிக் கொள்வோம். வேண்டு

கோள்களைக் கூட செல்லமாகவோ, மிரட்டலாகவோ அவர்முன் வைப்போம்.

தொலைந்து போன மோதிரத்தையோ, பையன்களின் பேனாவையோ, தேடித்

தருவதில் தொடங்கி, குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் போனால்,

விரைவில் குணமாக்குவதென, நிறைய வேலைகள் தருவோம். வேண்டு

தல்கள் நிறைவேறும் போது மாலை வாங்கி போடுவதாக வேண்டிக் கொள்

வோம். வேண்டியது நடந்துவிட்டால் சந்தோஷத்துடனும், நடக்காவிட்டால்

`அடுத்த தடவையாவது ஒழுங்காக நிறைவேற்றி வை’ என மிரட்டலுடனும்

மாலை வாங்கி போட்டு விடுவோம். இப்படி நிறைய மாலைகள் வாங்கி

விடுவார் எங்களிடமிருந்து.



பிள்ளையார் எங்கள் வீட்டுக்கு வந்த புதிதில்தான், `பிள்ளையார் பால் குடிக்

கிறார்’ என்ற வதந்தி நாடு முழுவதும் பரவியது. தெருவிலிருந்த சிலபெண்

களும், கிண்ணத்தில் பாலுடனும், ஸ்பூனுடனும் எங்கள் பிள்ளையாரை

முற்றுகையிட்டு பால் குடிக்கவைக்க முயற்சித்தனர். `பிள்ளையார் பால்

குடிக்கலியே’ என்று எங்கள் பிள்ளையாரின் சக்தியை சந்தேகிக்கவும், எரிச்

சலாகிப் போன நான், `எங்கள் பிள்ளையார் சின்னக் குழந்தை, ஸ்பூனில்

குடிக்கத் தெரியாது, வேணும்னா ஃபீடிங் பாட்டிலில் குடுத்துப் பாருங்க’

என்றதும் என்னை வினோதமாக பார்த்தவாறே நகர்ந்தனர்.







எங்கள் பிள்ளையார் மிகவும் சாது. விநாயகர் சதுர்த்தி அன்று பூஜை

செய்து, அவருக்கு படைக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை

போன்றவற்றை , பக்கத்து வீட்டு குழந்தைகள், நாங்கள் சாப்பிடுவதை

சந்தோஷமாக ரசிப்பாரேத் தவிர, எந்த வன்முறைகளையும் தூண்ட

மாட்டார்.

ஊர்வலம் நடத்தச் சொல்லி எங்களை தொந்தரவு செய்ய மாட்டார்.

ஊர்வலத்துக்காக கட்டாய வசூல் செய்ய மாட்டார்.

ஊர்வலம் செல்லும் போது எதிர்படும் டிவி கேபிள்களை அராஜகமாக

அறுத்தெறிய சொல்ல மாட்டார்.

இரசாயனங்களால் சிலைசெய்து சுற்றுசூழலை மாசு படுத்த சொல்ல

மாட்டார்.

மொத்தத்தில் எங்கள் பிள்ளையார் மிகவும் சாதுவானவர். எங்களுக்கு

அவரிடம், பயத்தைவிட, பக்தியைவிட பாசம் அதிகம்.

.

Monday, September 6, 2010

ஆங்கிலத்தில் உரையாட முடியாததால், ராகிங்..., தற்கொலை.?

.
.
அண்ணா பல்கலைகழக பொறியியல் மாணவி ஜோதி, நேற்று தன் வீட்டில்

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம்,

ராசிபுரத்தில் உள்ள முள்ளிக்குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்த ஜோதி என்ற

18 வயது பெண். +2வில் 1105 மதிப்பெண்கள் பெற்ற ஜோதிக்கு, அண்ணா

பல்கலைகழகத்தில் பொறியியல் (இ.சி.இ) பிரிவில் இடம் கிடைத்தது.




விடுதியில் தங்கி படித்த ஜோதி வார விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்த

போது, தன்னை ஆண் மாணவர்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பி தொந்தரவு

செய்வதாக, அண்ணனிடம் கூறி அழுதிருக்கிறாள். ஆங்கிலத்தில் சரிவர

உரையாட முடிய வில்லை என்பதால் அவளை மற்ற மாணவர்கள் கேலி

செய்ததாக தெரிய வந்துள்ளது. அவள் மொபைல் போனில் உள்ள

எஸ்.எம்.எஸ்களே சாட்சி என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


பல்கலைகழக நிர்வாகம், துணைமுதல்வர் மன்னர் ஜவஹர் முதலானார்

இதை மறுத்துள்ளனர். பல்கலைகழக வளாகத்தில் ராகிங் தடை செய்யப்

பட்டுள்ளதெனவும், புது மாணவர்களை மூத்த மாணவர்கள் சந்திக்க

அனுமதி கிடையாதெனவு்ம் தெரிவித்துள்ளார்.


ஒரு கிராமத்து விவசாயதொழிலாளியின் பெண், இத்தனை மதிப்பெண்கள்

பெற்று பொறியியல் படிப்பது, அதுவும் யுனிவர்சிட்டியில் இடம் கிடைத்தது

அந்த குடும்பத்துக்கு எத்தனை சந்தோஷமான விஷயமாக இருந்திருக்கும்?

எத்தனை கனவுகள் கண்டிருப்பார்கள்? ஆங்கிலத்தில் உரையாட முடிய

வில்லை என்ற காரணத்துக்காக அந்த பெண் தற்கொலைக்கு தள்ளப்

பட்டிருப்பது வேதனையான விஷயம் மட்டுமல்ல, அவமானகரமானதும்

கூட.



தமிழில் பொறியியல் படிப்புகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை

என அறிவிப்புகளை வெளியிடும் அரசாங்கம், இந்த தற்கொலைக்கு

என்ன பதில் சொல்லப் போகிறது..?

.

Thursday, August 26, 2010

நம்பிக்கையின் கரம் ; நம்பமுடியாத நிஜம் !!!

.

.ஜுலியா அர்மாஸ், அட்லாண்டாவில் தாய்சேய் நலத் துறையில் தாதி

யாக பணிபுரிந்த பெண். அவள் கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட சில

உபாதைகள் காரணமாக ஸ்கேன் செய்தபோது, கருவிலிருந்த குழந்தை

`ஸ்பைனா பிஃபிடா (spina bifida)என்ற தண்டுவட நோயால் பாதிக்

பட்டிருப்பது கண்டறியப் பட்டது. இந்த நோயின் விளைவால் குழந்தை

யின் இடுப்புக்கு கீழே செயலற்று போகும் நிலை ஏற்படலாம். கருத்தரித்து

21 வாரங்களே ஆகியிருந்த நிலையில், குழந்தையை பிறக்க வைத்து

அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது. குழந்தை உயிர் பிழைக்க

தாயின் கருவறைக்குள் இருந்தேயாக வேண்டும்.



இந்நிலையில், ஜார்ஜியாவில், புகழ்பெற்ற மருத்துவர் ஜோசப் புருனர்

என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் சிகிச்சைக்கு சென்றாள்.

சகல பரிசோதனைகளும் மேற்கொண்ட பின், அவளுக்கு அறுவைசிகிச்சை

செய்வதென தீர்மானிக்கப் பட்டது. அவளது கர்ப்பப் பையின் சிறுபகுதி

வெட்டியெடுக்கப் பட்டு, அதன் வழி குழந்தைக்கு அறுவைசிகிச்சை மேற்

கொள்வதென முடிவு செய்யப்பட்டது. டாக்டர் புருனர் தலைமையில் ஒரு

மருத்துவக் குழு அறுவைசிகிச்சை மேற்கொண்டது. குழந்தைக்கு வெற்றி

கரமாக அறுவைசிகிச்சை முடிந்த நிலையில் தான் அந்த அதிசயம்

நிகழ்ந்தது.



21 வாரங்களை, வயதாக கொண்ட அந்த சின்னஞ்சிறு சிசுவின் கரம்,

அறுவை சிகிச்சைக்காக போடப் பட்டிருந்த துவாரத்தின் வழியாக

நீண்டு, தனக்கு சிகிச்சை செய்த மருத்துவரின் கைமேல் பட்டது.

அந்த அதிசயக் காட்சி படமாக்கப்பட்டது. டாக்டர் புருனர், அந்த சம்ப

வத்தை விவரிக்கையில், `குழந்தையின் கை என் கையை தொட்டநொடி

நான் உறைந்து போனேன். நான் மெய்சிலிர்த்து போன தருணம் அது’,

என்கிறார். இந்த படத்தைப் பார்க்கையில் நாமும் மெய்சிலிர்த்து தான்

போகிறோம்.







தனக்கு உயிர் கொடுத்த கையை நம்பிக்கையோடு பற்றுவதாக அர்த்தப்

படுத்தி, `நம்பிக்கையின் கரம் (hand of hope)' என்ற பெயரோடு, அந்த

படம் உலகெங்கும் வலம் வந்தது. சம்பவம் நிகழ்ந்தது ஆகஸ்ட் 19,

1999 ம் ஆண்டு. அதே ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முழு ஆரோக்கியத்

துடன் ஆண்குழந்தை பிறந்தது. சாமுவல் அலெக்ஸண்டர் அர்மாஸ்

என்ற அந்த சி்றுவனின் பத்தாவது வயதில் எடுக்கப் பட்ட புகைப்படம்

தான், கீழே நீங்கள் காண்பது. 25 yard backstroke நீச்சல் போட்டியில்

முதல் பரிசாக வென்ற பதக்கங்களுடன் சிரிக்கும் அர்மாஸிடம் அவனது

முதல் புகைப்படம் ( 21 வார) பற்றிக் கேட்டால், `அந்த கைகள் என்னு

டையவை என்று உணரும் போது சந்தோஷமாகவும், பெருமையாகவும்’

இருப்பதாக கூறுகிறான்.






`இட்ஸ் எ மெடிக்கல் மிரக்கில்’ என்ற வசனத்தை அடிக்கடி தமிழ்படங்

களில் கேட்டிருப்போம். நிஜமாகவே இது தான் மெடிக்கல் மிரக்கில்!!

.

Wednesday, August 25, 2010

அகத்தின் அழகு, முகத்தில்.....

.

`.என்ன வலி அழகே’ என சகோதரி முல்லை, ஒரு வாடிக்கையாளராக

தன் அழகுநிலைய அனுபவங்களை நகைச்சுவையாக எழுதி இருந்தார்.

அவரது கருத்தில், ஒரு அழகுக் கலை நிபுணராக நான் முரண் படுவதால்,

இந்த பதிவு.



அழகாகத் தோன்ற வேண்டும் என்ற எண்ணம், ஆண், பெண் இருவருக்

குமே பொதுவானது. வேண்டுமானால் பெண்களிடம் கொஞ்சம் கூடுதலாக

இருக்கலாம். புறஅழகுக்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும் எனும்

கேள்வி எழலாம். அக அழகை வெளிப்படுத்தவும் புறஅழகு தேவையே.

பார்த்த மாத்திரத்தில் மனதில் பதிவது புறத் தோற்றமே! எனக்கு புறஅழகு

முக்கியமில்லை, இயல்பாக இருப்பதையே விரும்புவேன் என்பவர்கள் கூட

ஏதோ ஒரு வகையில் புறத்தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ளத்தான்

செய்கின்றனர்.



அழகுப்படுத்திக் கொள்ளுதல் என்பது இப்போதில்லை, பழங்காலத்திலே

இருந்திருக்கிறது. சருமம் பளபளக்க கழுதைப்பாலில் ஒரு அரசி குளித்

தாளாம். ஆயக்கலைகள் 64ல் ஒப்பனைக் கலையும் உண்டு என படித்த

நினைவில் பார்த்தால், ` முகஒப்பனை, முடிக்கு சாயம் தடவுதல், உடை

களுக்கேற்ப நகைஅலங்காரம் என தனித்தனியாக நான்கு வகைக்கலைகள்

இடம் பெற்றிருந்தது ஆச்சர்யப் படுத்தியது.



அழகுநிலையம் செல்வதென்பது வெறுமனே அலங்காரம் செய்து கொள்ள

என தவறாக எண்ணுகின்றனர். நம்மிடம் இருக்கும் சிற்சில குறைகளை

நிவர்த்தி செய்து கொள்ளவும் தான். மேல்நாட்டு பெண்கள் போல முடிக்கு

சாயம் தடவிக்கொள்ளுதல் போன்ற சிலவற்றை வேண்டுமெனில் ஆடம்பர

மாக கருதலாம். ஆனால் சில அடிப்படை தேவைகளுக்காக செல்வோரின்

எண்ணிக்கை மிக அதிகம்.



முதலில் `வாக்ஸிங்’ பற்றி பார்ப்போம். கை கால்கள், முகம் போன்ற

வற்றில் வளரும் முடிகளை நீக்க வாக்ஸிங் செய்யப் படுகின்றது. ஹேர்

ரிமூவர் க்ரீம்கள் பயன் படுத்தினால் ஒரே வாரத்தில் வளர்ந்து விடும்

என்பதாலும், அதில் உள்ள ரசாயனங்கள் பலருக்கு `அலர்ஜி’ ஏற்படுத்து

கின்றன என்பதாலும் இதை நாடுகின்றனர். கைகால்களில் நீக்குவ

தென்பது வேண்டுமெனில் அவரவர் விருப்பத்தை பொறுத்து அமையலாம்.

ஆனால் மேலுதட்டில், நாடியில், இலேசாக அல்ல, பளிச்சென்று தெரியும்

அளவுக்கு சிலருக்கு முடி வளர்கின்றது. மரபு ரீதியாகவோ, அல்லது

ஹார்மோன் குறைபாட்டினாலோ இப்போது பல பெண்களிடம் இந்த

குறைபாடு காணப் படுகின்றது. பொதுவிடங்களில் பிறரின் கேலிப்

பார்வைக்கும், குத்தல் பேச்சுக்கும் ஆளாகும் இவர்கள் மிக மோசமாக

தாழ்வு மனப்பான்மை அடைகிறார்கள். இவர்களூக்கு வாக்ஸிங் அவசிய

மானதாகி விடுகிறது. நான் இயல்பாகத் தான் இருப்பேன் என நிச்சயம்

இந்த பரிதாபத்துக்குரியவர்களால் வாதம் செய்ய முடியாது.




சாதாரணமான சருமம் கொண்டவர்களுக்கு ஃபேஷியல் தேவையில்லாமல்

இருக்கலாம். ஆனால் எண்ணெய் வழியும் முகமும், சொரசொரப்பாக

வொயிட் ஹெட்ஸ், ப்ளாக் ஹெட்ஸ் போன்றவையும், பெரிய பெரிய

பருக்களும் நிறைந்த முகம் பெற்றவர்களுக்கு `அரோமா ஃபேஷியலோ,

ஹெர்பல் ஃபேஷியலோ, ஒரு மருத்துவமாக தேவைப் படுகின்றது.

சரியான முறையில் செய்யப் படும் ஃபேஷியல் மஸாஜ் தூக்கம் வருவது

போல சுகமாகத் தான் இருக்கும். `ப்ளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ்

நீக்குவது தான் வலி தரும். ஆனால் தாங்க முடிந்த அளவில் தான்.

மருத்துவரிடம் ஊசி போட்டுக் கொள்வதில்லையா அதுபோல. ஆனால்

உரித்த கோழி உதாரணம் எல்லாம் மிக அதிகம். (முல்லை இதை

நகைச்சுவைக்காகத் தான் சொல்லியிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன் ).



புருவம் திருத்திக் கொள்வதென்பது இப்போதெல்லாம் மிகமிக சாதாரண

விஷயமாகி விட்டது. சரியான அளவில், அல்லது கொஞ்சம் சுமாராக

அமைய பெற்றவர்கள் அதை அநாவசியம் என நினைக்கலாம். ஆனால்

அதுவே அதிகமாக பாதி நெற்றியை மறைக்கும் அளவுக்கு இருந்தால்

அவசியமாகி விடுகிறது.. முதலில் ஓரிரு முறை வலி தெரியும்.

தொடர்ந்து செய்யும் போது வலி மிக சாதரணமாகி விடும். ஐந்து

அல்லது பத்து நிமிடங்களில் திருத்திக் கொள்ளலாம் .எட்டாவது,

ஒன்பதாவது படிக்கும் பெண்கள் கூட வருகிறார்கள். +2, அல்லது

காலேஜ் படிக்கும் போது வாருங்கள் என துரத்த வேண்டியருக்கிறது.


.




.





ஒருமுறை, பக்கத்தில், ஒரு குக்கிராமத்தில் இருந்து ஒருப் பெண்ணை

அவள் தாயார் அழைத்து வந்திருந்தார். வயலில் வேலை செய்பவர்கள்.

அவர்கள். அந்த பெண்ணுக்கு திருமணம் பேசிவைத்திருப்பதாகவும்,

பெண்ணைப் பார்த்து சரியென்று விட்டால் உடனே திருமணம் என்றும்

கூறினார். அத்தனை அடர்த்தியான, புருவத்தை நான் பார்த்ததே

இல்லை. சுமார் 1 1/2 இஞ்ச் அகலத்தில் நெற்றிதெரியாதபடி வளர்ந்

திருந்தது. படத்தில் இருப்பதை விடவும் இரண்டு அல்லது மூன்று

மடங்கு இருக்கும். சரிசெய்யும் போது முகச்சுழிப்போ, சிணுங்கலோ

அவளிடம் இல்லை. சரி செய்யப்பட்டபின் பெண்ணின் முகத்தைப்

பார்த்த அம்மா சந்தோஷத்தில், ` நீ நல்லாயிருக்கணும் மா’ என்று

வாழ்த்திய வார்த்தைகளில் அந்த தாயின் வலி வெளிப்பட்டது.

அவளுக்கு திருமணம் முடிவாகி, திருமணத்துக்கு முன்னரும் வந்து

புருவம் திருத்திக் கொண்டது, கூடுதல் சந்தோஷம்...



இப்போதெல்லாம் பெண்கள் அதிக அளவில் வேலைக்கு செல்கின்றனர்.

அதனால் அதிக அளவு தம் தோற்றத்தில் அக்கறை எடுத்து கொள்

கின்றனர். கணவர் அல்லது நண்பரின் வற்புறுத்தலுக்காக அழகு

நிலையம் செல்வதாக கூறும் பெண்கள் மிக சொற்பமே! `அவர் மட்டும்

தலைக்கு, மீசைக்கு டை அடித்து கொள்கிறார்., என்னை பார்லருக்கு

அனுப்ப மாட்டேங்குறார்’ என்னும் பெண்கள் தாம் அதிகம்.



ஒரு ஆண் இண்டர்வியூ க்கு செல்லும் போது, முடி வெட்டி, `ஷேவ்’

செய்து, திருத்தமான உடை உடுத்தி போவதில்லையா? என்னிடம்

நிறைய திறமைகள் இருக்கின்றன, நான இயல்பாகத்தான் இருப்பேன்

என கலைந்த ஆடைகளுடன், சவரம் செய்யாத முகத்துடன் சென்றால்

என்ன நடக்கும்? பல சமயங்களில் புறத் தோற்றமும், மிக மிக

அவசியமே! `ஏன் ஷேவ் பண்ணிக்கலை’ என்று ஆணிடம் கேடபதைப்

போல ஏன் `ஐ ப்ரோ பண்ணிக்கலை’ என பெண்ணிடம் கேட்கும் காலம்

விரைவில் வரலாம்.


இன்னும் நிறைய குறிப்பிடலாம். பதிவு ஏற்கனவே பெரிதாகி விட்டது.

.

Monday, August 23, 2010

எங்கள்அன்புத்தம்பி...

.

.`எக்கோவ்’ என பாசமாக, `ஏ புள்ள’ என செல்லமாக, அழைக்கும்

அன்புக்குரல் காணாமல் போய் ஐந்து வருடங்களாகின்றன. அற்புதமான

ஓவியன், அருமையான பாடகன், இனிய நண்பன், எங்களுக்கு செல்ல

தம்பி.



என் அக்காவின் மகன் இப்படித்தான் இருப்பான் என பையனை

பார்க்க வரும்போது, கற்பனையில் வரைந்து கொணர்ந்த ஓவியம் கண்முன்

சிரிக்கிறது. அழகாக பாட, ரசித்துக் கேட்டிருந்த காதல்ஓவியம் பட பாடல்கள்

கண்ணீரை வரவழைக்கிறது. எத்தனையோ நினைவுகள் பசுமையாய்....



ஜுலை18 அன்று என் தம்பியின் மகள், `அத்தை, இன்று என் டாடியின்

பிறந்தநாள், என எஸ் எம் எஸ் அனுப்பிய போது ஆறுதல் கூற வார்த்தை

இல்லாமல் கலங்கிப் போனேன்.



தம்பி, விமானப்படையில் சேர்ந்து, பெங்களூரில் டிரெய்னிங் முடித்ததும்,

அவனுக்கு பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் முதல் போஸ்டிங். போய்

சேர்ந்ததும் எழுதிய முதல் கடிதத்தில்` இந்தியா மேப்‘ வரைந்து, அதில்

ஆறுமுகனேரியையும், பஞ்சாபையும் குறித்து, `நீங்கள் அங்கே இருக்

கிறீர்கள், நான் மட்டும் இவ்வளவு தூரத்தில் இருக்கிறேன்’ என்று எழுதியி

ருந்தான். இப்போது எங்களை தவிக்க விட்டு தொலைதூரம் பறந்து

விட்டான்.



காலம் எல்லாவற்றையும் ஆற்றும், மாற்றும் என்பார்கள். நினைத்த

மாத்திரத்தில் விழி நிறையும் நீரும், நெஞ்சை அடைக்கும் பெருமூச்சும்

மாறவே யில்லை.

.

Tuesday, August 17, 2010

என் ஆண்டுவிழா அனுபவங்கள்...( தொடர்பதிவு)

.

.பள்ளி, கல்லூரி, ஆண்டுவிழாக்களில் பங்கெடுத்துக் கொண்டஅனுபவங்

களை பகிர்ந்து கொள்ளும்படி தீபா அழைத்திருந்த தொடர்பதிவு இது.



அப்போது நான் மூன்றாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி

சுதந்திர தினவிழாவுக்கான நடன நிகழ்ச்சியில் என்னை சேர்த்திருந்தார்கள்

அதுதான் என் முதல் நிகழ்ச்சி என நினைக்கிறேன். நடனம் சொல்லித்

தந்த ஆசிரியை, வீட்டில் போய் ப்ராக்டிஸ் பண்ணிப் பார்க்குமாறு சொல்லி

அனுப்பினார்கள். அது போதாதா..? நிற்கும்போது, நடக்கும் போது என

எல்லாப்பொழுதும் ஆடிக் கொண்டே அலைந்தேன். ``ஆடுவோமே, பள்ளு

பாடுவோமே, ஆனந்த சுதந்திரம்...ஆ.. டமார். ஒன்றுமில்லை. வீட்டின்

முன்னிருந்த திண்ணையில் நின்று ஆடிக்கொண்டிருந்த நான் தான் விழுந்து

விட்டேன். கீழ்பல்லில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. அப்பாவும், அம்மா

வும் பல்டாக்டரிடம் அழைத்து சென்றார்கள். பல்லை எக்ஸ்ரே எடுத்துப்

பார்த்து விட்டு, `நல்லவேளை, க்ராக் எதுவும் இல்லை, லேசாக அசைய

மட்டும் தான் செய்கிறது,’’ என்று கம்பி போட்டு அடுத்த பல்லோடு

சேர்த்து கட்டி விட்டார். இரண்டு மூன்று நாட்களில் வலியும், வீக்கமும்

குறைந்து, வெற்றிகரமாக நடனமும் ஆடினேன். ஆனந்த சுதந்திரம்

அடைய நானும் ரத்தம் சிந்தியிருக்கிறேன் என்பதை வரலாறு மறந்தாலும்,

நான் மறக்க மாட்டேன்.




சென்னையிலிருந்து ஊருக்கு படிக்க வந்த போது பட்டணத்து பிள்ளைகள்

என்று அத்தனை ஆசிரியர்களுக்கும் எங்களை மிகவும் பிடித்துப் போனது.

செல்வின் என்ற டீச்சர்,``நீ என் வகுப்புக்கு’’ என்று தோளில் கைபோட்டு

அன்போடு அழைத்து சென்றது இன்னமும் நினைவிலிருக்கிறது. அவர்கள்

தான் அங்கே நடன ஆசிரியை என்பதால், ஒவ்வொரு வருடமும் பள்ளி

ஆண்டுவிழாவில், இரண்டு நடனத்தில் கட்டாயம் நானிருப்பேன். இருபது

நாட்களுக்கு மேல் ப்ராக்டீஸ் இருக்கும். க்ளாஸ்க்கு அட்டெண்டென்ஸ்

கொடுத்தால் போதும். எம்ட்ராய்டரி, ஜமிக்கி சேலைகள் தெருவில்

இருக்கும் பெரிய அக்காக்களிடம் (அவங்களுக்கெல்லாம் நான் ரொம்ப

செல்லம்) இரவல் வாங்கி போவேன். அதை பெரிதுபெரிதாக ப்ரில் எடுத்து

எங்கள் அளவுக்கு வைத்து பாவாடை மாதிரி கட்டி விடுவார்கள். ரிங்

கொண்டை, பன் கொண்டை என்று தலைஅலங்காரம் பண்ணிவிடுவார்கள்.



இப்படி நடனத்தோடு நின்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும். ராமாயணத்தில்

ராமர் காட்டுக்கு செல்ல கைகேயி வரம்வாங்கும் காட்சியும், தசரதர் உயிர்

துறக்கும் கட்சியையும் நாடகமாக போட்டார்கள். ராமராக நடிக்க என்னை

தேர்வு செய்தார்கள். அவ்வளவு சாந்தசொரூபியாகவா நான் இருந்தேன்?

ஆண்டுவிழாவுக்கு முன்தினம் கரஸ்பாண்டெண்ட் முன்னால் ஒத்திகை

நடக்கும். நாடகத்தில் கடைசிக் காட்சியில் தசரதராக நடித்த எபனேசர்,

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு வேகமாக கீழே விழுந்தாள்.எல்லோரும்

சிரிக்க, நானும் சத்தமாக சிரித்து விட்டேன். `அப்பா விழுந்து கிடக்கும்

போது நீ சிரிப்பியா?’’ என்று செண்டிமெண்டலாக காய்ச்சி எடுத்து

விட்டனர். நானும் எபனேசரிடம்,`உனக்கென்ன அவார்டா கொடுக்குராங்க

இப்படி ஓவர் ஆக்ட் பண்றீயே’’ன்னு சொல்லி பார்த்தேன். ஆனால் ஆண்டு

விழாவின் போதும் இதேபோல் விழுந்து என்னை மாட்டிவிடப் போகிறாள்

என்று நிச்சயமாக தெரிந்தது. அதுக்கும் டீச்சரே வழிசொன்னாங்க. அவள்

விழுந்ததும், `ஐயோ தந்தையே’ன்னு கத்திட்டு அவள் பக்கத்துல

உக்கார்ந்து அழுற மாதிரி எம்ஜிஆர் ஸ்டைல்ல மூஞ்சிய மூடிக்கன்னு

சொன்னாங்க. நானும் அப்படியே செய்து சமாளித்தேன்.



கல்லூரி வந்தபின் இப்படி அரைகுறை ஞானத்தோடு நடனம், நடிப்பு

எதிலும் சேர்வதில்லை என்ற நல்ல முடிவோடு, முழுமையாய் தெரிந்த

அரட்டை கச்சேரியில் மட்டும் சேர்ந்தேன்.கல்லூரியில் பைன் ஆர்ட்ஸ்

வீக்’ என்று கலைவிழா நடத்துவர்கள். டிப்பார்ட்மெண்ட்வாரியாக,

அனைத்து வகை போட்டிகளும் நடக்கும். நான் இரண்டாமாண்டு படிக்கும்

போது, சீனியர் அக்கா, `விஸ்வநாதா, வேலை வேண்டும் பாட்டுக்கு

க்ரூப் டான்ஸ் போடப் போறோம், நீ சேர்றீயா‘ன்னு கேட்டாங்க. `எனக்கு

டான்ஸ் சரியா ஆட வராது; வேணும்னா மாடிலருந்து தண்ணீ ஊத்துவாங்

களே, அதுக்கு வரட்டுமா’ன்னு பணிவோடு கேட்டேன். என்னை மகா

உஷ்ணமாய் முறைத்து விட்டு, அந்த சீனெல்லாம் கிடையாதுன்னு

போயிட்டாங்க.



ஆனால் விதி என்னை வேறு ரூபத்தில் மாட்டி விட்டது. `ப்ளாக்போர்டு

ட்ராயிங் நல்லா வரையும் பெட்டில்டா என்னும் சீனியர் அக்கா காய்ச்சல்

காரணமாக வராததால், வேற யாராவது வரைறவங்க இருந்தா சொல்லுங்

கன்னு கேட்டப்போது, தோழிகள் என்னை மாட்டிவிட்டனர். பத்திரிக்கை

களில் வரும் ஜெ... படங்களை நோட்டுகளில் வரைந்து பார்ப்பேன்.

அவ்வளவுதான். வேறுவழியில்லாமல் நானும் தோழிகளும், எங்களுக்கு

ஒதுக்கியிருந்த அறைக்கு சென்றோம். இது குழுவாக பங்கெடுக்கும்

போட்டி. கொடுக்கப்பட்ட தலைப்பு `பாரதி கண்ட கனவு’. கையில் விலங்

குடன், கண்ணீரோடு ஒரு பாரதமாதா, விலங்குகள் உடைக்கபட்டு வீரமாக

ஒரு பாரதமாதா வரைந்து விட்டு, எதாவது ஒரு பாரதியார் பாட்டு சொல்

லுங்கப்பா’ என்றேன். காற்றுவெளியிடை கண்ணம்மான்னு ஒருத்தி

சொல்ல, `சனியனே! பாரதமாதாவும், ஜெமினியும் டூயட்டா பாடுறாங்க

படத்துக்கு பொருத்தமா சொல்லு’ என்றாள் இன்னொருத்தி. முடிவில்

`என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’, இன்னொரு படத்துக்கு மேல

`விடுதலை விடுதலை விடுதலை’ என்று எழுதினோம். எங்க மிஸ் பாரத

மாதா ஜெ... ஓவிய சாயல்ல இருக்காங்க என்று கேலி செய்தார்கள்.

மற்ற டிப்பார்ட்மெண்ட் எல்லாம்,`ஆலைகள் செய்வோம்; கல்வி சாலை

கள் செய்வோம், சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்று

போர்டு முழுவதும் வரைந்து வைத்திருந்தார்கள். நான் பேசாமல்

விடுதிக்கு சென்று படுத்து தூங்கி விட்டேன். திடீரென என் தோழிகளின்

சத்தம். `உன் டிராயிங் க்கு தான் முதல் பரிசு‘ என எழுப்பிய போது

நம்பவே முடியாத சந்தோஷம். கல்லூரிக்கு சென்றபோது மிஸ்ஸெல்லாம்

கை கொடுத்தாங்க...



பள்ளி, கல்லூரி நினைவுகள் பொக்கிஷம் போன்றவை. அந்த சந்தோஷ

தருணங்களை மீட்டெடுக்க உதவிய தீபாவுக்கு நன்றி.

.

இந்த தொடரை தொடர நான் அழைப்பவர்கள்,

1) இரண்டு அண்ணனை மட்டும் கூப்பிட்டதற்கு உரிமையோடு கோபித்துக்

கொண்ட பாரா அண்ணன்,

2) பொன்ராஜ்,

3) தம்பி செ,சரவணக் குமார்,

4) எதையும் கலகலப்பாக எழுதும் சித்ரா.


நேரம் கிடைக்கும் போது தொடருங்கள் உங்கள் அனுபவங்களை...

.

Friday, August 13, 2010

``அந்த அரபிக்கடலோரம்’’ ஒரு சின்னபெண்ணின் பார்வையில்

..

தொலைக்காட்சியில், பம்பாய் படப்பாடலான, `அந்த அரபிக்கடலோரம்‘

ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிலிருந்த உறவினர்கள், குழந்தைகள் ரசனை

யோடு பார்த்துக் கொண்டிருந்தனர். என்னிடம் ஏதோ கேட்க வந்த பக்கத்து

வீட்டு சிறுபெண், எட்டு வயதுக்குள் இருக்கும், அவளும் பாடலை

பார்த்துக் கொண்டிருந்தாள்.



பாடலின் இடையில் ஒருக்காட்சியில், அரவிந்தசாமி, மணீஷாகொய்ராலா

வின் கைகளை பற்ற, மணீஷா கைகளை விடுவித்துக் கொள்ளும்போது,

வளையல்கள் மட்டும் கழன்று அரவிந்தசாமியின் கைகளில் இருக்கும்.

அதைப் பார்த்த அந்த சிறுபெண், ``ஈட்டுக்கு (அடகுக்கு) கழட்டுறாங்க’’

எனக் கூற, அனைவரும் சிரித்தனர்.


அந்தக் காட்சிக்கான அவளது புரிதல் புரிந்த போது..., எனக்கு சிரிப்பு

வரவில்லை.
.
.

Wednesday, August 11, 2010

க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!

.
.
ஈ.மெயிலில் வந்த ஒரு உண்மை சம்பவம் இது.



அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். அதிர்ந்து பேச‌மாட்டான். மிக அமைதி

யான‌வ‌ன். சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால்

வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌

நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும்

வ‌ய‌தில் ஒரு த‌ங்கை. அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர்

ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌

த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டி

லிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டு

வ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.



பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில்

அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000. பிற‌ந்த‌து

முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌

தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின் 2 வருடத்துக்கு ஒரு முறை

தான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச்

செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது

அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.



ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை

ஒழிய‌ த‌ன்க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும்

என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு

எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு

ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.




அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில்

உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தி

னான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே

விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்! அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள்

அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக்

கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌

ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ்

நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு

செய்தார்.



பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிந்தது,

அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு

மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன்

குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3,000ல் போக்குவ‌ர‌த்து,

அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக்

க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை

உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி

அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில்

மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல

அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌

பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.




ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும்

இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் தவிர்த்த

விடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும்

கார‌ண‌ம்.."டைம் இல்ல‌ ". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல்

அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்


இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!

.
.

Friday, August 6, 2010

போபால்...தலைமுறைகள் தாண்டியும் தொடரும் சோகம்...


..
கண்கள், முகம் அத்தனையும், நெருப்பாய் எரிய, அந்த

டிசம்பர்மாத நள்ளிரவில், உயிரை காப்பாற்றிக் கொள்ள

வேக வேகமாய் ஓடினோம்; வேக வேகமாய் ஓடி,

வேக வேகமாய் நச்சுக் காற்றை உள்வாங்கி மக்கள் விழுந்தனர்.

குழந்தைகள் எங்கேயென்று தாய்க்கு தெரியவில்லை;

குழந்தைகட்கு தன் தாய் எங்கேயென்று தெரியவில்லை.;

ஆண்களுக்கு தன் குடும்பம் எங்கேயென்று தெரியவில்லை.



போபால் விஷவாயு தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரு பெண்மணியின்

நினைவுகூறல் இது. `உலகின் மிக மோசமான ரசாயன பேரழிவு’ என

வர்ணிக்கப் படும் போபாலின் கொடூர நிகழ்வு குறித்து அறிந்திருந்தாலும்

கொஞ்சம் ஆழமாய் உட்செல்லும் போது அறியவரும் உண்மைகள்,

உயிரை உலுக்குகின்றன.



இத்தகைய ஆபத்தான தொழிற்சாலை, எங்கள் மண்ணுக்கு தேவை

யில்லை என பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளால் நிரா

கரிக்கப்பட்ட யூனியன் கார்பைட் நிறுவனம், இந்திய மண்ணில் ,

போபாலில் தன் தொழிற்சாலையை தொடங்குகிறது. நெருக்கமான

குடியிருப்புகளுக்கு அருகாமையில் இத்தகைய ஆபத்தான தொழிற்

சாலை அமைக்கப்பட்டது முதல் தவறு.. .தொடர்ந்த விபத்துகள்,

பாதுகாப்பு ஏற்பாடுகளை அலட்சிய படுத்துதல் என பல்வேறு குளறு

படிகள். 1983ல் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய ஒரு குழு அமைக்கப்

பட்டு, அதன் பரிந்துரையின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த

பட்டன., ஆனால் இங்கில்லை, வெர்ஜீனியாவில் உள்ள அதன் இன்னொரு

தொழிற்சாலையில். ஏனெனில் அமெரிக்கர்களின் உயிர்கள் மட்டுந்தானே

மதிப்பு வாய்ந்தவை. போபால் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருக்கிறது

என பலரது எச்சரிக்கையையும் அலட்சியப் படுத்தியதன் விளைவு, அந்த

கொடூரம் நிகழ்ந்தே விட்டது. 42 டன் மெத்தில் ஐசோசயனைட், மொத்த

மாக ஒரே கலனில் சேமிக்கபட்டிருந்தது விபத்தின் கொடூரத்தை மிக

மோசமானதாக்கி விட்டது..



முதல் நாளில் 3,000 பேருக்கு மேல், முதல் வாரத்தில் 8,000 பேர், மொத்தம்

23,000 என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டது. 2000 வருடத்துக்கு

பிறகான இழப்புகள் கணக்கில் கொள்ளப் படவில்லை. 1,00,000

மேலானோர் மிக மோசமாக பாதிக்கப் பட்டனர். பார்வை கோளாறுகள், ,

சுவாச சீர்கேடுகள் நரம்பு மண்டல பாதிப்புகள், கருச்சிதைவுகள், இன்னும்

பல வகை்படுத்த முடியா பாதிப்புகள்.

சம்பவத்துக்கு பின், சிதைந்த நிலையில் பிறந்த

சிசுக்கள், கண்ணாடி சீசாக்களில் ஸ்பெஸிமன்களாய் வைக்கப்

பட்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்த போது,
ஒரு தாயாய்

அடிவயிறு கலங்கி போனேன். மீண்டுமொருமுறை அதைப் பார்க்கும்

திராணியில்லாததால் பிரசுரிக்கவில்லை. இதைப் போன்ற நிகழ்வு

உலகின் எந்த மூலையிலும் நடக்கக்கூடாது.





பாதிக்கப்பட்ட, இந்த பெயரில்லாத, குரலில்லாத பல ஆயிரம் அப்பாவி

களுக்கு, 26 வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை. யூனியன் கார்பைட்

நிறுவனத்தை வாங்கியுள்ள டவ் கெமிக்கல்ஸ், அதனுடைய எந்த கடன்

களுக்கும் பொறுப்பேற்க மறுத்து விட்டது. யூனியன் கார்பைடின் அதிகாரி

கள் தப்பியோடி விட, அந்நிறுவனத்தின், எஞ்சியிருந்த அத்தனை ரசாயன

நச்சுகளும், இன்னமும் அகற்றப் படவில்லை. அதன் பின்னரான 25 ஆண்டு

கால பருவமழையில் அத்தனை நச்சுகளும் மண்ணின் அடி ஆழம் வரை

ஊடுருவி, நிலத்தடி நீரை மோசமாக்கி வைத்திருக்கிறது. வேறுவழியின்றி,

20,000க்கும் மேலானோர் அதை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.



விஷவாயுவின் பாதிப்புகள், தலைமுறைகள் தாண்டி, இன்னும் தொடர்ந்து

கொண்டுதானிருக்கிறது. குழந்தைக்கு புகட்டும் தாய்பாலில் கூட விஷத்தின்

வீரியம் இன்னும் இருக்கிறது. சம்பவத்தில் உயிர் தப்பிய ரஷ்தா என்னும்

பெண்மணி, தன் ஐந்து மகன்களை புற்றுநோய்க்கு காவு கொடுத்தவர்

சொல்கிறார்.

``சம்பவத்தில் உயிரிழந்த அத்தனை பேரும் அதிர்ஷ்டசாலிகள்;

உயிர் தப்பிய நாங்கள் தான் துரதிர்ஷ்டசாலிகள்’’



போபால் சம்பவத்திலிருந்து பாடம் கற்று கொண்டதாக `டவ் கெமிக்கல்ஸ்

கூறியுள்ளது.. இவர்கள் பாடம் கற்றுக் கொள்ள பலியானவை, ஆயிரக்

கணக்கான அப்பாவிகளின் இன்னுயிர்கள்.. ஆனால் நம் இந்திய அரசாங்கம்

பாடம் கற்று கொண்டதாக தெரியவில்லை.



R.தினேஷ் என்பவர் இந்திய ஜனநாயகத்தை பற்றிக் கூறியது இது.

ஜனநாயகம் இனிமேலும்,

``of the people, by the people, for the people'

என்பதில்லை.

``off the people, buy the people, far the

people''

என்றாகிவிட்டது. என்கிறார். இதேநிலை நீடித்தால், `எங்கள் பாரததேசம்’’

என்று தோள் தட்ட முடியுமா..?
.
.

Tuesday, August 3, 2010

ஆடிப் பெருக்கு ; தங்கம் பெருகுமா..?

.
.
. .``ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி,

. . வாடியம்மா, எங்களுக்கு வழித்துணையாக-எம்மை

. . வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக...


சிறுவயதில் வானொலிகளில் கேட்ட பாடல். என்ன படம் என்றெல்லாம்

தெரியாது. ஆடிப் பெருக்கின் சிறப்பை உணர்த்தும் பாடல். ஆனால் இப்

போதெல்லாம் நகைக்கடை, ஜவுளிக்கடை விளம்பரங்கள் தான் ஆடிப்

பெருக்கை நினைவூட்டுகின்றன.


ஆடிமாதம், பதினெட்டாம் தேதியன்று, பதினெட்டாம் பெருக்கு அல்லது

ஆடிப்பெருக்கு, காவேரி கரையோர மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாட

படுகின்றது. விவசாயிகள் காவேரிஅன்னைக்கு வழிபாடு நடுத்துவது, புது

மணப்பெண்கள், மஞ்சள் கயிறு அணிந்து சிறப்பு வழிபாடு நடத்துவது இந்

நாளின் சிறப்பம்சங்களாகும்.








நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் இத்தகைய

திருவிழாக்கள், இன்று நகை வியாபாரிகளால் வியாபார திருவிழாக்களாகிக்

கொண்டிருக்கின்றன.










.

.
ஆடிப்பெருக்கு என்றலே நகை, புடவை வாங்க வேண்டுமென்றாகி விட்டது.

என் உறவுக்கார பெண் என்னிடம், ``ஆடிப்பெருக்குக்கு நீங்க என்ன

வாங்க போறீங்க.?’’ என்றாள்.

``நல்லதா ரெண்டு பெருக்குமாறு வாங்க போறேன்’’ என்றேன். என்னை

ஒரு மாதிரி பார்த்து விட்டு, ``எங்க வீட்டுக்காரர் கிட்டே கேட்டதுக்கு

அவரும் இதையே தான் சொன்னாரு’’ என்றாள் மகா சோகமாக.


காவேரியிலே தான் தண்ணியே இல்லையே, பின் எங்கிருந்து வெள்ளப்

பெருக்கு, ஆடிப்பெருக்கு எல்லாம், என்கிறீர்களா?. அதுவும் சரிதான்.
.
.

Sunday, August 1, 2010

என்னை, நானே...! [ தொடர்பதிவு ]

.
.
அமைதிச்சாரல் அழைத்திருந்த தொடர்பதிவு இது. பதிவுலகில் நாம்

எப்படி பட்டவர் ?. நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொள்வதன்

மூலம் நம்மிடம் உள்ள குறை, நிறைகளை உணர, களைய ஒரு

வாய்ப்பாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அம்பிகா.


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில்

பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


உண்மையான பெயரே தான். [ நல்லா தானே இருக்கு.]



3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அண்ணன் மாதவராஜ் ஒரு பதிவில் என்னை பற்றி இப்படி எழுதி இருந்தார்.

”என்னோடு பால்ய காலத்தில் கதைகளை நோக்கி ஓடிவந்த என் தங்கை,

இதே நேரம் தன் பையனின் அல்லது கணவனின் துணிமணிகளைத்

துவைத்துக் கொண்டிருப்பாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு

"இப்பல்லாம் புத்தகங்கள் படிக்கிறியா" என்று கேட்டபோது, சிரித்துக்

கொண்டே "காபி சாப்பிடுறியா" என்று அவள் என்னிடம் கேட்டாள்.”


உண்மையும் அதுதான். அதை படித்தபின் ஏற்பட்ட ஆர்வத்தில், வலை

பக்கங்களை படிக்க ஆரம்பித்தேன். பின் பின்னூட்டங்கள்... போன

டிசம்பரில் வலைப்பக்கம் தொடங்கி எழுதலானேன்.



4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்ன

வெல்லாம் செய்தீர்கள்?


வலைப் பதிவு தொடங்கிய புதிதில், என் பெரிய மகன்,` மாமாவிடம்

சொல்லி `தினத்தந்தியில்’ விளம்பரம் செய்யுங்க’ என்று கேலி செய்வ

துண்டு. `ஹூம் ’ என அவனை முறைத்து விட்டு மிகுந்த `தன்னம்பிக்

கையுடன்?’ எழுதிக் கொண்டிருக்கிறேன். [ ஒரு நாள் பிரபலம் ஆவோம்

என்ற நம்பிக்கையுடன் ]



5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து

கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை

என்றால் ஏன்?


ஓரளவு. பகிர்ந்து கொள்வதால் ஒரு நெருக்கம் தோன்றுகிறது.



6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது

பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


நம் உணர்வுகளை பதிய, வெளிப்படுத்த, நம் போன்றோரை அறிந்து

கொள்ளும் களமாக வலைத்தளம் உதவுகிறது. [ சம்பாதிக்கிறதா?

ஹா..ஹா..]



7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்?

அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


இந்த ஒன்று மட்டுமே!



8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது

பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்


பொறாமையெல்லாம் இல்லை. ஆனால் பலரது எழுத்துக்களால் ஈர்க்கப்

பட்டிருக்கிறேன். அவர்களை போல எழுத வேண்டும் எனும் ஆசை உண்டு.



9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு

பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


முதன் முதலில் பாராட்டியவர்கள் என்றால்; மாதுஅண்ணன்,

திரு. வேணுகோபாலன் அவர்கள், சகோதரர் பாரா, காமராஜ் அண்ணன்,

சகோதரிகள் முல்லை, தீபா... இப்போது ... நீங்கள் எல்லோருமே!

பாராட்டுக்கள் உற்சாகப் படுத்துகின்றன. நன்றாக எழுத வேண்டும் எனும்

உத்வேகம் தருகின்றன.



10கடைசியாக...விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு

தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்


என்னை பற்றி நிறைய எழுதி விட்டேன். இங்கு வந்து நிறைய நட்புகள்,

சொந்தங்கள் கிடைத்திருக்கின்றன. நெகிழ்வாக உணர்கின்றேன். இன்னும்

எழுத்துக்களை செம்மை செய்ய வேண்டும் என்பதையும் உணர்கிறேன்.


பதிவை தொடர நான் அழைப்பது,

மாதவராஜ்

காமராஜ்

நேரம் அனுமதித்தால் தொடருங்கள்.
.
.

Thursday, July 29, 2010

எங்கே செல்கிறது இளைய தலைமுறை...?

.
.
பள்ளிகூடத்தில் நடந்த கோஷ்டிமோதலில், 9ம் வகுப்பு மாணவன்,

துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து 8ம் வகுப்பு மாணவன்

காயம். இன்று காலை நாளிதழில் வெளிவந்த செய்தி இது. சம்பவம்

நடந்தது, தெற்கு டெல்லியில், `வீர்சந்திரா கார்வெல் பப்ளிக் ஸ்கூல்’

எனும் தனியார் பள்ளியில். மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும்

போது ஏற்பட்ட கோஷ்டி மோதலில், சக மாணவனை துப்பாக்கியால்

சுட்டிருக்கிறான்.




கல்லூரிமாணவர்கள் மோதல், அடிதடி, கொலை என பெருகிவரும்

வன்முறைகள் பள்ளி மாணவர்களிடையேயும் பரவியிருப்பது அதிர்ச்சி

யளிக்கிறது. இளைய தலைமுறை எதை நோக்கி போய் கொண்டிருக்

கிறது? இத்தனை தீவிர விரோதமும், குரோதமும் வளர யார் காரணம்?

குறை எங்கிருக்கிறது?

பெற்றோர் வளர்ப்பிலா? திரைப்படங்களில் வெளிப்படும் அதீத வன்

முறையா?



எனக்கு தெரிந்த இரு குழந்தைகள், ஒரே வகுப்பில் படிப்பவர்கள்,

எப்போதும் ஒன்றாக விளையாடுபவர்கள், பெற்றோர் சண்டை காரண

மாக ஒருவரையொருவர் முறைத்து கொண்டு போகின்றனர். ஆறு

மாதமாக அந்த குழந்தைகள் பேசுவது கூட கிடையாது. இது ஒரு சின்ன

உதாரணம் அவ்வளவே. இப்படி குழந்தைகளிடையே துவேஷத்தை

வளர்த்தால், அவர்கள் பெரியவர்களாகும் போது எப்படியிருப்பார்கள்?

ஏற்கெனவே டிவியும், கம்ப்யூட்டரும் நம் குழந்தைகளின் நட்புவட்டத்தை

குறுக்கி விட்டன. இளைய தலைமுறையினரிடம் அன்னியோன்னியம்,

சகிப்புதன்மை குறைந்து விட்டதையே இந்த வன்முறைகள் உணர்த்து

கின்றன.


என்ன செய்யப் போகிறோம் நாம்..?
.
.

Tuesday, July 20, 2010

கொடிது, கொடிது, வறுமை கொடிது.

.

தெருவில் ஒரே கூச்சலும், களேபரமுமாயிருந்தது. இரண்டு வீடுகள்

தள்ளியிருந்த வேப்ப மரத்தடியில் படுக்க வைக்க பட்டிருந்தான், அந்த

சிறுவன். பத்து, பன்னிரெண்டு வயதுக்குள் இருக்கும் அவனுக்கு. வலி

யால் துடித்துக் கொண்டிருந்தான். வலது கை ஒரு மாதிரி கோணிக்

கொண்டு கிடந்தது. அவனை சுற்றி ஒரேக் கூட்டம். ஆளாளுக்கு ஏதோ

பேசிக் கொண்டிருந்தனர்.



பக்கத்து பள்ளிக்கூடத்து மரத்தில் ஏறி விளையாடியவன், கீழே விழுந்து

கையை ஒடித்துக் கொண்டிருக்கிறான். கூட்டத்திலிருந்த ஒருவர் `அவன்

பாட்டிய எங்கே காணும்’, என்றதும், `அது வேலைக்கு போயிருக்கு,

சாயங்காலம் தான் வரும்’ என்றார் இன்னோருவர். தாயில்லாத அவனை

பாட்டி தான் ஏதோ கூலிவேலை செய்து வளர்த்துக் கொண்டிருந்தார்.

`பண்டார வெளக்காரர் கிட்டே கூட்டிட்டு போங்கப்பா’ என்றார் இன்னொரு

வர். பண்டாரவிளைக்காரர் என்பவர் அந்த சுற்றுபட்டியிலிருக்கும் எல்லா

ஊர்காரர்களுக்கும் எலும்புமுறிவுக்கு கட்டு போட்டு வைத்தியம் செய்பவர்.

அதற்குள் வைத்தியருக்கு யாரோ போன் செய்ய, அவர் பக்கத்து ஊரிலி

ருப்பதாகவும், அங்கு வர இரண்டு்மணி நேரமாகும் என்றும், வலிகுறைய

மாத்திரை கொடுத்து படுக்க வைக்குமாறும் கூறியிருக்கிறார். பக்கத்துவீட்டு

பெண்மணி சோறு வடித்த கஞ்சி கொடுத்து், மாத்திரையும் கொடுத்தார்.



இதற்குள் அவன் பாட்டி தகவல் தெரிந்து வந்து விட்டார்கள். வந்த

வேகத்தில் பையனை நாலு சாத்து சாத்தியது. `அறிவிருக்கா.? கை

ஒடஞ்சி கடக்கவன போட்டு அடிக்கியே’ என எல்லோரும் பிடித்துக்

கொண்டனர்.

`நா என்ன செய்வேன், வைத்தியருக்கு எப்படி ருவா குடுப்பேன்,

ஒவ்வொரு தடவ கட்ட வரும்போதும் அம்பது, நூறுனு குடுக்கனுமே,

நா என்ன செய்வேன். இப்படி தெண்டம் இளுத்து வுட்டுட்டானே’ என

அழுது கொண்டிருந்தாள்.


பாசத்தை புறந்தள்ளியது ஏழ்மை. பாவம், அவள் என்ன செய்வாள்...
.
.

Wednesday, July 14, 2010

குழலினிது..., யாழினிது...,

.
.
u.k.g. படிக்கும் போது...


அம்மா, நாளைக்கு ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங். நீங்க வாங்கம்மா.


சரிப்பா.


இதோ இந்த பட்டு சேலய கட்டிட்டு அழகா வாங்கம்மா.


சரிப்பா.


10th std படிக்கும் போது...


அம்மா, நாளைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங். பிரின்ஸி உங்கள கண்டிப்பா

கூட்டிட்டு வரச் சொன்னாங்க.


ஏண்டா?


வேறன்ன, க்ளாஸ்க்கு லேட்டா வந்தான், ரெக்கார்ட் நோட் சப்மிட்

பண்ணல, க்ளாஸ்க்கு நோட்டு கொண்டு வரல, இப்டி எதாவது

கம்ப்ளெயிண்ட் பண்ணத்தான். நிறைய டோஸ் வாங்க வேண்டிய

திருக்கும் னு நெனைக்கிறேன். எதுக்கும் கொஞ்சம் சிம்பிளாவே

வாங்க.


...????
.
.

Friday, July 9, 2010

விருதுகள் - அன்பை பகிர்ந்து கொள்ளுதல்.

.
.

.
.
சகோதரி சந்தனமுல்லை `தங்கமகன்’ விருது தந்திருக்கிறார். விருது

பெறுதல் என்பது மிக சந்தோஷமான விஷயம்; எந்த வயதாக இருந்

தாலும். இந்த சந்தோஷத்தை என் வலையுலக உறவுகளோடு பகிர்ந்து

கொள்வது கூடுதல் சந்தோஷம்.


அமுதா.

தீபா.

கண்ணகி.

செ. சரவணக்குமார்.

ராகவன்.


வலையுலகை பொறுத்தமட்டில் இவர்கள் அனைவரும் என்னைவிட

அனுபவம் மிக்கவர்கள் தாம். இருப்பினும் அன்பை பகிர்ந்து கொள்ள

தடையில்லையே. விருது தந்த முல்லைக்கு நன்றிகள்.

விருது பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள்.
.
.

Wednesday, July 7, 2010

எனக்கொரு தோழி இருந்தாள்...

.

.
எனக்கொரு தோழி இருந்தாள்;

விடுதி வாழ்வில் ஒரு விடியலாய்,

மனம் இறுக்கமான நேரங்களில் நெருக்கமாய்,

தொலைத்து விட்டேன் அவளை...



அவளுக்கென விருப்பு வெறுப்புகள் இருந்ததில்லை.

என் விருப்புகளே அவள் விருப்புகளாய்,

என் வெறுப்புகளும் அவள் விருப்புகளாய்,

தேடிக் கொண்டிருக்கிறேன் அவளை இன்னமும்...



கடைசிநாளின் புகைப்படம்,

கடிதம் வழிவந்த உன் ப்ரியங்கள்,

உனக்கான என் தேடல்கள்,

பொக்கிஷமாய் அத்தனையும்; நீ பார்க்கவென.


காத்திருக்கிறேன் வேலரசி!

கட்டாயம் நீ கிடைப்பாய்.
.

Thursday, July 1, 2010

மருமகளாக நான்..., நினைவலைகள், தொடர்பதிவு.

.
`மருமகளின் டைரிக்குறிப்புகள்’ என்ற தொடர்பதிவுக்கு தீபா அழைத்திருந்

தார். சந்தனமுல்லையால் தொடங்கப் பட்ட தொடர்பதிவு இது. `டீனேஜ்

டைரிக் குறிப்புகள்’ என்று முல்லையால் தொடங்க பட்ட தொடர்பதிவு,

`பதின்பருவத்து குறிப்புகள்’ என ராகவனால் அழகாக பெயரிடப் பெற்று

வலையுலகெங்கும் வலம் வந்தது. மறுபடியும் நினைவலைகளை மீட்ட

செய்யும் ஒரு அருமையான தொடர்பதிவு.



பிறந்த வீட்டில் இருந்து முற்றிலும் புதிய சூழலில் அடியெடுத்து வைக்கும்

புதுமருமகள், நிறையவே அனுபவங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஆனால் நான் திருமணம் செய்துகொண்டது சொந்த மாமா மகன் என்பதால்

இவ்வாறான அனுபவங்கள் அதிகமில்லை. என் நட்பு வட்டம், கல்லூரியின்

கடைசி நாளில், `பசுமை நிறைந்த நினைவுகளே’ என்று ஆட்டோக்ராப்,

கொஞ்சநாள் உருகி உருகி கடிதங்கள், இவற்றோடு நின்று விட்டதால்,

எனக்கென அழைப்பிதழ்கள் தேவைப் படவில்லை. திருமணப் புடவை,

நகைகள் இவற்றில் அதிக ஆர்வமில்லையென்றாலும், எனக்கு கொண்டு

வரப்பட்ட சட்டைதான், எனக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லாமல், தொள

தொள வென்றிருந்தது. சட்டையை போட்டதும் மகா எரிச்சல் வந்த

தென்னவோ உண்மை. ஏனென்றால், கல்லூரி முடித்து, வீட்டிலிருந்த

போது `டெய்லரிங்’ கற்று கொண்டு எனக்கான ஜாக்கெட் எல்லாம் நானே

தான் தைப்பேன். `பெயிண்ட் அடித்த மாதிரி போட்டிருக்கியே’னு மற்றவர்

கள் கூறும் அளவுக்கு தைத்துப் போடுவேன். பிறகென்ன... என் பெரிய

அண்ணி தான் அங்கங்கே ஊக்குகள் குத்தி சரி செய்து விட்டார்கள். வாழ்க்

கையும் இப்படித்தான், முன்னபின்னே இருந்தாலும் நமக்கேற்றார் போலசரி

செய்து கொள்ள வேண்டும் என்று சிம்பாலிக்காக சொல்வது போலிருந்தது.

பிறகு தான் தெரிந்தது, அளவுசட்டை மாறிபோய் என் மாமியாரின் அளவில்

தைக்கப் பட்டிருந்தது.



கிராமங்களில் புதுப்பெண்ணுக்கு நிறைய டெஸ்ட் வைப்பார்களாம். காலை

யில் வாசல் தெளிக்க சொல்வார்களாம். தெளிக்கும் முறையை வைத்தே

அவள் சோம்பேறியா, செலவாளியா என்றெல்லாம் தெரிந்து கொள்வார்

களாம். பெண்களுக்கு மட்டும் தானா, ஆண்களுக்கு இல்லையா என்றெல்

லாம் கேட்க கூடாது. இது பெண்களுக்கான (அ)நீதி மட்டுமே. பெண்கள்

தானே வீட்டை நிர்வகிக்கப் போகிறார்கள் என்பதால் இவை ஏற்படுத்தப்

பட்டிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் இப்போது வழக்கத்தில் இருப்

பதாக தெரிய வில்லை. நல்லவேளை, எனக்கு அப்படி எதுவும் தேர்வுகள்

வைக்க வில்லை. என் அம்மாவும், என் அண்ணிகளுக்கு இப்படியெதுவும்

டெஸ்ட் வைக்க வில்லை. ஆனால் என் நாத்தனாருக்கு, அவள் மாமியார்,

சில மஞ்சள் துண்டுகளை கொடுத்து, அம்மியில் வைத்து தட்ட சொன்னார்

களாம் (பெண்ணின் பொறுமையை தெரிந்து கொள்ள). இவள் தட்டிய

முதல் தட்டிலேயே, அத்தனை மஞ்சள்துண்டுகளும் மூலைக்கொன்றாய்

தெறித்து ஓட, அவள் மாமியார் காணாமல் போன மஞ்சள்துண்டுகளை

இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார். 13 வருடங்கள் ஆகி விட்டன. இன்னும்

கிடைக்க வில்லை.



கணவர்க்கு உள்ளூரிலேயே ஒரு பாக்டரியில் வேலை கிடைத்து விட,

நாங்கள் ஆச்சி(அம்மாவின் அம்மா) வீட்டிலேயே இருந்தோம். நான்

வளர்ந்த, படித்த அதே ஊர் என்பதால் பெரியதாக ஒன்றும் வேறுபாடுகள்

இல்லை. `சாப்ட்ட தட்டை கூட எடுக்காம ஆம்புளப் புள்ள மாதிரிப் போறி

யே’ ன்னு அம்மா திட்டும் போது `நாலு பையனுக்கு எடுக்கீங்க, என் ஒரு

தட்ட மட்டும் எடுக்க முடியாதா?’ என்று அம்மாவிடம் திமிர்த்தனமாய்

பெண்ணியம் பேசிய மாதிரி இங்கே பேச முடியாது. ஆச்சி வயதானவர்கள்.

எல்லாமே நான் தான் கவனிக்க வேண்டும். சமையலில் இருந்து அத்தனை

யும் பழகி கொண்டேன். என் மாமா என்னிடம் `பேங்க் எக்ஸாம் எழுதேன்’

என்றார்கள். மாமியார் அதெல்லாம் வேண்டாம் என்று விட்டார்கள். என்

கணவர்க்கும் அதில் விருப்பமில்லாததால் விட்டு விட்டேன். ஆனால் சில

வருடங்கள் கழித்து, நான் `பியூட்டிஷியன் கோர்ஸ்’ படிக்கப் போகிறேன்,

என்ற போது யாரும் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் வீட்டிலிருந்து

தான் படித்தேன்.



எனக்கு கொஞ்சம் கோபம் வரும் (செல்ல பெண்ணாதலால்). ஆனால் என்

கணவர்க்கு என்னை விட நிறைய கோபம் வரும் என்பதால் நான் பெரிய

கோடு பக்கத்தில் சின்ன கோடாகிப் போனேன். கொஞ்சம் வாக்குவாதம்,

நிறைய அனுசரித்தல்கள்.....! என் கணவரிடம், இப்படி ஒரு பதிவேழுதப்

போகிறேன். உங்களை பற்றி எழுதினால் என்ன செய்வீர்கள் என்றேன்.

`ஆபீஸ்ல போய் மைனஸ் வோட்டு போடுவேன்’ என்றார்.




வாழ்க்கை என்பது யாருக்கும் நினைத்தபடியே முழுமையானதாய்

அமைந்து விடுவதில்லை. அதிர்ஷ்டவசமாய் சிலருக்கு சரியாகஅமைகிறது

துரதிர்ஷ்டவசமாய் சிலருக்கு சகிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால்

பலருக்கு இரண்டுக்கும் இடைப்பட்ட சூழலில் தான் அமைகிறது. அவரவர்

திறமைக்கேற்ப சரிசெய்து கொள்கிறோம். அர்த்தமற்ற பிடிவாதங்களினால்

வாழ்வை தொலைத்துக் கொள்வதை விட, சில பல அனுசரித்தல்களினால்

அழகாக்கிக் கொள்ளலாம்.

` ஒன்றை அடைய முடிந்தால் மற்றொன்றை இழக்க நேரிடுகிறது

ஒன்றை இழக்க நேர்ந்தால் பிறிதொன்றை அடைய முடிகிறது’.

என்கிறார் அமெரிக்க கவிஞர் எமர்சன். இதேதான் வாழ்க்கையும்.


தங்கள் அனுபவங்களை நம்முடன் பகிர நான் சுந்தரா, ஹூஸைனம்மா

இருவரையும் அழைக்கிறேன்.
.