Tuesday, December 21, 2010

மார்கழி நினைவுகள்.

.
மார்கழி மாதம் என்றதும் சட்டென நினைவுக்கு வருபவை, இதமான பனி,

விடிகாலை கோலங்கள், திருப்பாவை பாடல்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு

கொண்டாட்டங்கள்...; இவற்றோடு எனக்கு மார்கழி பஜனையும் சேர்ந்தே

நினைவுக்கு வரும். அம்மாவுக்கு இந்த பஜனை, பாடல்கள் இவற்றில்

அதிக ஆர்வமிருந்ததால் எங்களை பஜனைக்கு அனுப்பி வைத்தார்கள்.




அதிகாலை நான்குமணிக்கே கோயிலின் ஒலிப்பெருக்கிகள் எல்லோரையும்

எழுப்பி விட்டுவிடும். அம்மாவும் எழும்பி, எங்களுக்கு வெந்நீர் வைத்து,

குளிக்க செய்து, அனுப்பி வைப்பார்கள். அதன்பின் தெருவாசலில் கோலம்

போடுவார்கள். முற்றத்தையே அடைக்கும் பெரிய பெரிய கோலங்கள்.

இப்போது நானும் கோலம் போடுகிறேன், சின்னதா பேருக்கு ஒரு கோலம்..

பொங்கல், கோயில்கொடை என்றால் மட்டுமே பெரிய கோலம். அம்மா

வின் சுறுசுறுப்பு இப்போதும் ஆச்சர்யப் படுத்துகிறது.



மாதுஅண்ணன், நான், குட்டி மூன்று பேரும் பஜனைக்கு போவோம்.

விஜியண்ணன் கூட சில நாட்கள் வந்திருக்கிறான். எங்கள் தெருவின்

முனையில் தான் பஜனைக்கோயில் இருந்தது.எங்களைப் போல நிறைய

சிறுவர், சிறுமியர் வருவார்கள். பஜனையை வழிநடத்தி செல்வது

செல்லத்துரை என்பவர். எங்களனைவர்க்கும் செல்லத்துரையண்ணன்.

ஆரம்ப காலங்களில் பத்து, அதிகம் போனால் பதினைந்து பேர்கள்,

ஒருவர் கையில் ஹார்மோனிய பெட்டியுடனும், சிலர் ஜால்ரா வுடனும்

ஏதோ பாடிக் கொண்டு போவார்களாம். செல்லத்துரையண்ணன் தலைமை

ஏற்று நடத்த ஆரம்பித்த பின்தான் இவ்வளவு பேர் வர ஆரம்பித்தார்கள்.

அவர்களுக்கு நல்ல கம்பீரமான குரல். தொடங்கும் போது

தோடுடைய செவி யென் விடை யேறியோன்;

தூ வெண் மதி சூடி,


என்று தேவாரத்துடன் ஆரம்பிப்பார்கள். அதன் பின்,

போற்றி என் வாழ்முதல், ஆகியப் பொருளே;

புலர்ந்தது பூங்கழல்


என திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்,

ஆதியும் அந்தமும் இல்லாத

அரும்பெரும் சோதியை யான் பாட


திருவெம்பாவை பாடல்கள்...

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்

என சில திருப்பாவை பாடல்கள்..

இதற்குள் சிவன்கோயில் வந்து விடும். அவர்கள் முதலில் பாட, பின்

நாங்களனைவரும் சேர்ந்து பாடுவோம். ஆங்காங்கே கோலம் போட்டுக்

கொண்டிருக்கும் பெண்கள் எங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பர்.

கொஞ்சம் லேட்டாக வருபவர்கள் இடையில் வந்து சேர்ந்து கொள்வர்.

சிவன் கோயிலில் பூஜை முடிந்ததும், அங்கிருந்து கிளம்பி வேறு சில

தெருக்கள் வழியாக மறுபடியும் பஜனைக் கோயிலுக்கே வந்து சேர்வோம்.

சில திருப்புகழ் பாடல்கள்... முடிக்கும் போது

ஆறிரு தடந்தோள் வாழ்க,

ஆறுமுகம் வாழ்க.


என்று முடிப்பார்கள்.



மார்கழிமாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இரவு, கோயிலில் பாடல்கள்

ஒப்பிக்கும் போட்டி நடக்கும். திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள்,

திருவெம்பாவை 20 பாடல்கள், திருப்பாவை 30 பாடல்கள், மொத்தம்

60 பாடல்கள் ஒப்பிக்க வேண்டும். அறுபதையும் ஒப்பித்தால் பொன்னாடை

போர்த்தி, பரிசும் வழங்குவார்கள். பாடல்களின் எண்ணிக்கைக்கேற்ப

எல்லோருக்கும் பரிசுகள் உண்டு. ``எப்ப பாத்தாலும் ஆம்பள பசங்க தா

நெறய சொல்றாங்க, பொம்பள புள்ளைங்களால முடியாதா?’’ என்று

எங்களை சீண்டிவிட போட்டி போட்டு ரோஷத்தோடு படித்தோம். அந்த

வருடம், பெண்களில் நானும், கிருஷ்ணவேணி என்ற பெண்ணும்

60 பாடல்கள் ஒப்பித்தோம். பையன்களில் மாதுஅண்ணனும், குட்டியும்

ஒப்பிச்சாங்க. பொங்கலன்று எல்லோர்க்கும் பரிசுகள், எங்களுக்கு சிறப்பு

பரிசுகள் வழங்கினார்கள்.



ஹைஸ்கூல் வந்ததும் இவையெல்லாம் நின்று போயின. நாங்கள் தாம்

நின்று விட்டோமே தவிர, செல்லத்துரையண்ணனின் பாட்டு, பஜனை,

எல்லாம் தொடர்ந்தன. இதைப்போலவே போட்டிகளும்... நிறைய பேர்

பரிசுகளும் வாங்கியிருப்பார்கள்.



செல்லத்துரையண்ணன் நல்ல கணீரென்ற குரலில் டி.எம்.எஸ் பாடல்

களை அப்படியே பாடுவார்கள். `கற்பகவல்லி நின் பொற்பதங்கள்

பிடித்தேன்‘ `மண்ணானாலும் திருச்செந்தூரின் மண்ணாவேன்’ இன்னும்

எத்தனையோ பாடல்கள்... மிக அருமையாக பாடுவார்கள். ஆன்மீகத்தில்

மிகுந்த நாட்டமுடன், திருமணமே வேண்டாமென்றிருந்த அவர்கள்,

வீட்டாரின் வற்புறுத்தலால் மிகதாமதாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இதைப் போல ஒரு மார்கழிமாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு, திடீரென

இறந்து விட்டார்கள்.



மார்கழிமாத பஜனை, தேவாரம், திருப்பாவை இவற்றோடு, எங்களுக்கு

செல்லத்துரையண்ணனின் பாடல்களும் சேர்ந்தே நிறைந்திருக்கின்றன.


.

Monday, December 13, 2010

விட்டில் பூச்சிகள்.

.

அந்த வீட்டை கடந்து செல்கையில் அவளைப் பார்த்தி்ருக்கிறேன். புதிதாக

குடிவந்திருந்தார்கள் போலும். நைட்டி அல்லது சுடிதார் அணிந்து வாசலில்

அமர்ந்திருப்பாள். பக்கத்துவீட்டு சிறுபெண்களை அழைத்து வைத்து பேசிக்

கொண்டிருப்பாள். குழந்தைத்தனம் மாறாத முகம். கல்லூரிமாணவி போல்

இருந்தாள். ஆனால் கழுத்தில் இருந்த தாலி திருமணம் ஆனவள் என்பதை

பறைசாற்றியது. நிரம்பவும் சின்னப் பெண்ணாயிருக்கிறாளே எண்ணமிட்ட

படியே கடந்து சென்றுவிடுவேன். சில நாட்களிலேயே அவளைப் பற்றிய

செய்திகள் தெரிய வந்தன. அவள் சென்னையை சேர்ந்தவள் என்பதும்,

பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமல் அவள் கணவன் என சொல்லிக்

கொள்ளும் நபரோடு வந்துவிட்டாள் என்பதும், அந்தநபர்க்கு 45 வயதுக்கு

மேலிருக்கும் என்பதும் தெரிந்தது. அதன்பின் அவளைப் பார்க்கையில்

எரிச்சல் கலந்த பச்சாதாபம் தோன்றும்.



ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. என்னப் பிரச்சனையோ, அந்தப்பெண்

தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்கொளுத்திக் கொண்டாள்

என்றும், மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்

பட்டிருக்கிறாள் என்றும் அதிர்ச்சியோடு பேசிக் கொண்டார்கள். அவள்

கணவன் என சொல்லிக் கொண்ட நபர், போலிஸ், விசாரணைக்கு பயந்து

எங்கோ ஓடிவிட்டான். அந்தப் பெண்ணைப் பற்றிய விபரங்கள், பெற்றவர்,

முகவரி எதுவும் தெரியாத நிலையிலே அந்த பரிதாபத்துக் குரியவள்

இறந்து விட்டாள். பூட்டிக்கிடக்கும் அந்த வீட்டை கடக்க நேர்கையில்

அந்த குழந்தைத்தனம் மாறாத முகம் நினைவுக்கு வந்து சங்கடப்

படுத்துக்கிறது.



சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இன்னொரு சம்பவமும் நினைவுக்கு

வருகிறது. அந்தப்பெண்ணுக்கும் 18வயது போல் தான் இருக்கும். ஒரு

கடையில் வேலை செய்து வந்தாள். நல்ல அமைதியான சுபாவமுடைய

பெண் தான். ஆனாலும் விதியோ அல்லது அவளது மதியோ, கடை

முதலாளியோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரும் இதேபோல் நடுத்தர

வயதினர் தான். மனைவி, குழந்தைகள் இருந்தனர். அவளுக்கு அம்மா

மட்டும்தான். அந்த ஏழைத்தாயால் அவளைக்கண்டிக்க முடியவில்லையோ

அல்லது எல்லோரும் கூறியது போல் அந்த முதலாளியின் பணம் ஊமை

யாக்கிற்றோ, அவர்கள் பழக்கம் தொடர்ந்தது.



ஊமை ஊரைக் கெடுக்குங்குறது சரியாத்தா இருக்கு’ என்று ஏசுவோரும்

இருந்தனர். `நல்ல புளியங்கொம்பாத்தா புடிச்சிருக்கா’ எனப் பொறாமைப்

படுவோரும் இருந்தனர். அவளும் ஒரு பெண்குழந்தைக்கு தாயானாள்.

அவள் இரண்டாம்முறை கருவுற்ற பின் அவர் வருவது குறைந்து

போயிற்று. அடுத்ததும் பெண் தான். அவரிடமிருந்து சில சமயங்களில்

பணம் மட்டுமே வந்தது. உறவினர்கள் ஏதோ பஞ்சாயத்து பேசினர்.

கொஞ்சம் பணத்துடன் அவளது உறவு தீர்க்கப் பட்டது. `ரெண்டும்

பொண்ணாப் போச்சி, ஆம்புளப்புள்ளனா வந்திருப்பாரு’ என முதலாளி

யின் மோசடிக்கு சப்பைக் கட்டப்பட்டது.


தாயின் அவலநிலை காண சகியாமலோ, தானும் துன்பம் தர வேண்டா

மென்றோ, இரண்டாவது குழந்தை சில நாட்களிலேயே கண்ணை மூடி

விட்டது. இளவயதில் அடுத்தடுத்த இரண்டு பிரசவங்கள், ஒழுங்கான

பராமரிப்பின்மை, மனப்பாரம் எல்லாமாக சேர்ந்து அவளை காசநோயில்

தள்ளியது. அக்கம்பக்கத்தினர் முகத்தில் விழிக்கவும் முடியாமல், ஆற்ற

முடியாத துயரத்துடன் சரியான சிகிச்சையின்றி, குடிசையிலே அடைந்து

கிடந்தவள், ஓரிரு மாதங்களிலேயே இறந்தும் விட்டாள். அவளது

சாவுக்குக் கூட அந்த முதலாளி வரவில்லை.


`இவ ஒழுங்கா இருந்தா இந்த நெலம வ்ந்துருக்குமா?’, `அடுத்தவ

புருசனுக்கு ஆசப் பட்டா இப்பிடி தா ஆவும்‘, என அவளைப் பற்றின

விமர்சனங்கள் தொடர்ந்தன. `ஆம்புளன்னா அப்படித்தா, சேறக் கண்டா

மிதிப்பான், தண்ணியக் கண்டா கழுவுவான், பொம்பளயில்ல ஒழுங்கா

இருக்கனும்’ என ஆண்களின் `கல்யாண குணங்கள்’ நியாயப் படுத்தப்

பட்டன. மகன் தவறு செய்தால், `நீ சரியா இருந்தா, அவன் ஏன் இப்படி

அலைறான்’ என மருமகளை குற்றம் சாட்டும் மாமியார்கள், மருமகன்

தவறு செய்தால் ,`பார்த்து பதவிசா நடந்துக்க’ என்று மகளுக்கு புத்தி

கூறும் அன்னையர்கள், கணவன் தவறு செய்தால், `ஏதோ கெட்டநேரம்’

என்று கையாலாகத்தனதுடன் ஏற்றுக் கொள்ளும் மனைவிகள், என எல்லா

கட்டங்களிலும் ஆண்களின் தவறுகள் அங்கீகரிக்கப் படுகின்றன.



இங்கே, இந்த இரண்டு பெண்களின் செய்கையுமே முட்டாள்த்தனமானது,

ஏற்புடையது அல்ல என்ற போதிலும், இருவருக்குமே வாழ்வின்

சூட்சுமங்கள் புரிபடாத வயது. ஆனால் அந்த ஆண்கள்....? மகள்

வயதொத்த பெண்ணின் வாழ்வை பாழாக்குகிறோம் என்பது தெரியாதா?

அவர்களின் ஏழ்மையை, அறியாமையை உபயோகப்படுத்திக் கொள்வது

புரியாதா?

``பெண் என்பவள் மிதிப்பதற்கும், கழுவதற்கும், சேறோ அல்லது

தண்ணீரோ இல்லை, உயிரும் உணர்வுகளும் நிரம்பிய மனிதப் பிறவி ’’

என்பதை எப்போது உணர்வார்கள்?

.

Saturday, December 11, 2010

எனது வலைப்பக்கத்தின் வயது ஒன்று; மகாகவிக்கு 128.

.

.சொல்லத்தான் நினைக்கிறேன் என்று நினைத்ததை எழுத தொடங்கி

இன்றுடன் ஓராண்டு நிறைவுறுகிறது.. பெரிய திட்டமிடல்களோ,

முனைப்போ இன்றி, என் மனம், என் நினைவுகள், என் உணர்வுகள்

என மனதில் பட்டதை ஒரு ஆர்வத்துடன் எழுதினேன். இதுவரை

எழுதிய பதிவுகள் 76, என்னை பின்தொடர்வோர் 140 பேர். மிகப்

பெரிய சாதனையாக இல்லாவிடினும், என் எழுத்துக்கு கிடைத்த

மிகப் பெரிய அங்கீகாரமாகவே கொள்ள முடிகிறது. தமிழ்மணம்

தெரிவு செய்த முதல் இருபது பதிவுகளில் 13 வதாக, ஒருமுறை

வந்ததுமே எனக்கு சாதனையாகத் தான் தெரிகிறது.. என்

பதிவுகளை தொடர்ந்து வாசித்து, வாக்களித்து, பின்னூட்டமிட்டு

எனக்கு அன்பும், ஆதரவும் நல்கும் அனைத்து அன்பு உள்ளங்

களுக்கும், என் அன்பும், நன்றியும். என் பதிவுகள் அச்சில் வர

உறுதுணையாயிருந்த, என்வலைப்பக்கத்தின் முதலாண்டு

நிறைவுக்கு முன்னதாகவே வாழ்த்து தெரிவித்த

திரு.எஸ். வி. வேணுகோபாலன் அவர்களுக்கும் என் நன்றியும்,

அன்பும்.




மகாகவியின் பிறந்த நாளில் என் வலைப்பக்கம் தொடங்கப்

பெற்றது தற்செயலான நிகழ்வெனினும், எனக்கு பெருமைக்

குரியதே! ஆனால் அவர்க்கு அது வருத்தந் தருவதாயிருக்

கலாம். மகாகவியின் பிறந்த நாளில்,


எண்ணிய முடிதல் வேண்டும்;

நல்லவே எண்ணுதல் வேண்டும்.

திண்ணிய நெஞ்சம் வேண்டும்;

தெளிந்த நல்லறிவு வேண்டும்.

பண்ணிய பாவமெலாம்

பரிதிமுன் பனியேப் போல

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னையே!


என்பதைத் தவிர வேறென்ன வேண்டிட முடியும்?

.

Friday, December 3, 2010

ஜவ்வு மிட்டாய்

.

’என்னத் தெரியுதா’ சிரித்தபடியே என்னை நெருங்கியவளை முதலில்

இனம் கண்டுகொள்ள முடியவில்லை. அந்த `ஸ்பிரிங்’ முடியும், வெகுளி

சிரிப்பும் ஒரு புகைப்படலமாய் நிழலாடியது. `நா ந்தா .....’ பேரைச்

சொன்னதும், சட்டென ஸ்படிகமாய் பளிச்சிட்டன நினைவுகள். `எம் மக’

அவளின் பிரதியாய், அதே சுருட்டை முடியுமாய் நின்ற பெண்ணை

அறிமுகப் படுத்தினாள். `காலேஜ் ல படிக்கா’ குரலில் பெருமை வழிந்தது.

பரஸ்பர நலவிசாரிப்புகளுக்கு பின் விலகி சென்ற அவளின் நினைவுகளில்

மூழ்கினேன்.



இருபது வருஷமிருக்குமா அவளைப் பார்த்து... கூடவே இருக்கலாம்.

சிறு வயதில் நான் படித்த பள்ளிக்கு எதிரில் தான் அவள் வீடு. என்னுடன்

ஐந்தாவதோ, ஆறாவது வகுப்போ, சரியாக நினைவில்லை, சேர்ந்து

படித்தாள். `என்னை தெரியுதா’ என்றோ, அல்லது `நீ ஜோதியக்கா மக

தானே’ எனறோ என்னை அணுகும்பலரை அடையாளம் காட்ட முடியாத

என் ஞாபகசக்தியை அவமானத்துடன் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இவள்

குறித்த அனைத்து நினைவுகளும் பதிந்திருக்க முக்கியமான காரணங்கள்

இருந்தன. முதலாவது அவள் பெயர். இரண்டாவது அவள் அம்மா விற்கும்

ஜவ்வு மிட்டாய்.




`பரிபூரணம்’ இப்படி ஒரு பெயரை யார் வைத்தார்கள் என வியப்பாய்

ிருக்கும். இன்னொரு விஷயம், அந்த பெண்ணுக்கு `ர’ வை உச்சரிக்க.

வராது `ஹ’ ன்னு தான் சொல்வாள் இதுக்காகவே ஸ்கூலில் நிறைய

பேர் அவளை கேலி செய்வதுண்டு.

ஒம் பேரு என்ன?

பஹிபூஹணம்.

ஒங்கம்மா பேரு...

ஹாஜபூபதி ( ராஜ பூபதி.)

உந் தம்பி பேரு

ஹாம தொஹ (ராம துரை)

தங்கச்சி...

ஹாஜ குமாஹி (ராஜ குமாரி)

எல்லோரும் கெக்கலி கொட்டி சிரிப்பார்கள். அவளை பார்க்க பாவமா

யிருக்கும். சில சமயம் அழுதும் விடுவாள். அவர்கள் வீட்டில் அத்தனை

பேருக்கும் இந்த குறையும் இருந்தது, அத்தனை பேர் பெயரிலும் ர வும்

இருந்தது. ` நாக்குல வசம்ப சுட்டு தேச்சி வுட்டா, நாக்கு திருத்தமா

பேச்சி வரும்’னு மருந்து சொல்வோரும் இருந்தனர். வீட்டின் வறுமை

காரணமாக அத்துடன் படிப்பையும் நிறுத்தி விட்டாள்.



ஸ்கூலுக்கு எதிரில், மேஜையாகவும் இல்லாத, ஸ்டூல் மாதிரியும்

இல்லாத ஒரு பலகை வச்சி, அதில் ஜவ்வு மிட்டாய் வச்சி அவங்க

அம்மா வியாபாரம் பண்ணுவாங்க. அவங்க ஜவ்வுமிட்டாய் ஸ்கூல்

பிள்ளைகளிடம் மிகவும் பிரபலம். நல்ல பஞ்சுமிட்டாய் ரோஸ்கலர்ல,

மஞ்சள் கலரில், பொரிகடலை நொறுக்கி அதில் தூவி, என தினுசு்தினுசா

வச்சிருப்பாங்க. எனக்கும் ஆசையா இருக்கும். ஆனா அம்மா திட்டுவாங்க.

ஈ மொய்க்கும் வாங்க கூடாதுன்னு சொல்வாங்க. அதனால ஒரு தடவ

`அம்மா இப்போ தா போட்டுட்டு இடுக்காங்க’ ன்னு வீட்டுக்கு கூட்டிட்டு

போனா. அவங்கம்மா பாகு காய்ச்சிட்டிருந்தாங்க. தம்ளர் தண்ணியில

ஒரு சொட்டு பாகை வுட்டு `இப்பிடி கரையாம இருந்தா பதம் வந்துட்டு’

ன்னு சொல்லி ஒரு அகல பாத்திரத்துல தேங்கா எண்ணய தேச்சி அதுல

ஊத்தி ஆற வச்சாங்க. பாதி சூட்டிலேய எடுத்து, கைலயும் எண்ணய

தேச்சிட்டு, மொத்த பாகையும் சுருட்டி கைல எடுத்தாங்க. சூடா இருக்கும்

போதே இழுக்கணும்‘ னு ஒரு கொக்கில போட்டு இழுக்க ஆரம்பிச்சாங்க.

இதுக்குன்னே வாசல் நெலை ல `ட’ மாதிரி ஒரு கொக்கி அடிச்சி வச்சி

இருந்தாங்க. அது எண்ண கசடேறி பளபளன்னு இருந்திச்சி. சூடு தாங்காம

அடிக்கடி கைய ஊதிக்கிட்டாங்க. சூடா மிட்டாய இழுத்து இழுத்து, அவங்க

கையெல்லாம் காய்ப்பு புடிச்சி இருந்திச்சி. ரொம்ப நேரம் இழுத்திட்டே

இருந்தாங்க. `இப்புடி இழுக்கலன்னா மிட்டாயி ஜவ்வு இல்லாம கடுக் கடுக்

ன்னு ஆயிரும்‘னு சொல்லிட்டே எனக்கு மிட்டாய் குடுத்து அனுப்னாங்க.



நினைவுகளில் மூழ்கியிருந்த எனக்கு திடுமென நினைவு வந்தது. அவள்

மகள் அவளைப் போலில்லாமல் சுத்தமாக பேசுவாளா, `ர’ வை அழுத்த

மாய் உச்சரிப்பாளா, என்ன பெயர் வைத்திருப்பாள்? கவலையாய் நினைத்த

போதே, அந்த பெண்ணின் திருத்தமான முகம் நினைவு வந்தது. அதில்

தெளிவும், தன்னம்பிக்கையும் விரவி நின்றதாய் தோன்றியது. கல்லூரி

யில் படிப்பதாய் கூறியது நினைவு வந்தது. ஜவ்வு மிட்டாயின் இனிப்பு

இப்போதும் தித்தித்தது.

.

Wednesday, December 1, 2010

வினோத நட்பு

.

.விலங்குகளின் வினோத நட்பு பற்றிய சில புகைப்படங்கள், இணையத்தில்

( கூகிள் ) காணக் கிடைத்தன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.




ஓ..... எத்துணை இனிமையானவை..., அன்பு நண்பனின் கரங்கள்.

-மேரி ஏங்கல் ஃப்ரைட்.




.நட்பு என்பது, ஒரே ஆன்மா.., இரு உடல்களில். _ அரிஸ்டாடில்




நண்பனுடன் இருட்டில் நடப்பது, வெளிச்சத்தில் தனியே நடப்பதை

விடவும் இனிமையானது. - ஹெலன் ஹெல்லர்.





உங்கள் உறவுகளை நிர்ணயிப்பது விதியென்றாலும், உங்கள் நட்பை

நீங்கள் நிர்ணயம் செய்ய முடியும். _ஜக்யுஸ் டிலைட், பிரெஞ்சு கவி





உண்மையான சந்தோஷம் எத்தனை நண்பர்கள் என்பதில் இல்லை,

நண்பர்கள் யார் என்பதிலேயே....- சாமுவெல் ஜான்சன், பிரிட்டிஷ்

எழுத்தாளர்.





நண்பர்களை் அளவிட நினைத்தால், உன்னால் யாரையுமே நேசிக்க

முடியாது. _ மதர் தெரசா.





நட்பு, நிதானமாக அமையலாம்; ஆனால் இறுக்கமானதாகவும்,

நிலையானதாகவும் அமைய வேண்டும்._ சாக்ரடீஸ்




என்னுடைய சந்தோஷத்தை என் நண்பனின் இழப்பில் கொண்டாட

முடியாது._ ஜார்ஜ் வாஷிங்டன்.





ஒரு உண்மையான நண்பன் 10,000 உறவினர்களுக்கு சமம்.

_ யூரி பைட்ஸ் , கிரேக்க எழுத்தாளர்.


.