Wednesday, March 3, 2010

குழந்தை உள்ளமே !.

` அம்மா, நீ தம்பி பாப்பா வச்சிருக்கியா, இல்ல தங்கச்சி பாப்பா

வச்சிருக்கியா?’ கேட்ட நான்கு வயது மகனின் தலையை வாஞ்சையோடு

கோதிய வாறே அம்மா திருப்பி கேட்கிறாள், ` உனக்கு என்ன பாப்பா

வேணும்?’ . `எனக்கு பக்கத்து வீட்டு அகிலா மாதிரி அழகா தங்கச்சி

பாப்பா தான் வேணும்.’ ஆசையுடன் கூறிய மகனைப் பார்த்து சிரித்தாள்

அம்மா. ஒருசில நாட்கள் கழித்து, அம்மா மருத்துவமனையில்

அனுமதிக்கப் பட்டாள். இரவு அவனிடம் அப்பா, ` உனக்கு தம்பி

பிறந்திருக்கிறான், பார்க்க போகலாமா?’ என்று அவனை

மருத்துவமனை அழைத்து வந்தார். தம்பி அம்மா பக்கத்தில்

தூங்கிக் கொண்டிருந்தான். ஆசையாய் போய் பார்க்கிறான்.

அவனது ஆச்சி அவனிடம், ` தம்பி நல்லா குண்டா,

அழகா இருக்கான் பாரு ‘ என்றார்கள். உண்மையிலேயே

தம்பி அழகாய் தானிருந்தான். பாத்ங்களும், கைகளும்,

அடர் ரோஜாப்பூ நிறத்தில். மெதுவாக கையை தொட்டுப்

பார்த்துவிட்டு`எவ்ளோ ஸாப்டா இருக்குமா’ என்றான்

ஆச்சரியமாய்.` நா தூக்கலாமா?’ கேட்டவனிடம் கொஞ்ச

நாள் ஆகட்டும் என்கிறார்கள். அடுத்தநாள், அதற்கடுத்த நாள்,

குழந்தையை பார்க்க வந்த உறவினர்கள், குழந்தையை மட்டுமே

கொஞ்ச அவனுக்கு கோபம், கோபமாய் வந்தது. தம்பி

எப்போதும் அம்மா மடியிலேயே இருந்தான். இவனால் அம்மா

பக்கத்தில் உட்கார முடிய வில்லை, அம்மா கூட படுக்க முடிய

வில்லை. ஏக்கத்தோடு நின்றான்



`ஒரு வழியாக அம்மா வீட்டுக்கு வந்து விட்டாள். ஆனால்

இங்கேயும் அதே நிலை தொடர்ந்தது. தம்பியை குளிக்க

வைக்க, கவனித்துக் கொள்ள என அம்மாவின்

பெரும்பான்மை நேரங்கள் தம்பியுடன் கழிய, இவன்

ஆச்சியுடன் இருக்க வேண்டியதாயிற்று. ஆச்சி வேறு,

`இனிமே நீ தா யூனிபார்ம் போட்டுக்கணும், ஷூ

போட்டுக்கணும்’ என, இவனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை.

கோபமும், ஏக்கமுமாய் விலகிப் போகிறான்.




பக்கத்தும் அறையில் ஏதோ வேலையாய் இருந்த

போது , குழந்தை வீறிட்டழும் சத்தம் கேட்கவே, பத்றி

ஓடி வருகிறாள். அழும் குழந்தையை சமாதானப் படுத்தும்

போது தான் கவனிக்கிறாள். இதென்ன, குழந்தை கையில்

ரத்தம். இடது கையில் சுண்டு விரலுக்கு மேலே மூன்று

கோடுகள், ஒரு கோடு மட்டும் இலேசாக பதிந்து ரத்தம் கசிந்தது.

ரத்தத்தை துடைக்கும் போது தான் கவனிக்கிறாள், அவனை.

கையில் ப்ளேடுடன், கண்களில் பயத்துடன். புரிந்து விட்டது

அவளுக்கு. ` இங்கே வா ‘ அழைத்து பக்கத்தில் உட்கார

வைத்து, முதுகை தடவியவாறே, ` ஏம்மா இப்படி செஞ்சே,

தம்பி பாவம் இல்லையா, எப்படி அழறான் பாரு,

தம்பிய உனக்கு புடிக்கலியா?’. தலை குனிந்தவாறே நிற்கும்

குழந்தையின் ஏக்கம் புரிந்தவளாய், ` தம்பி இன்னும்

கொஞ்ச நாள்ல உங்கூட விளையாட வந்திருவான், நா

வேலை செய்யும் போது நீ தான் தம்பிய பாத்துக்கணும்.

அவன் ஸ்கூலுக்கு போகும் போது நீ தான் ஹோம்வொர்க்

சொல்லித் தரணும், நீ தான பெரிய பையன்.’

என்று சமாதானப் படுத்துகிறாள். அவனும் பெரியவனாய்

சந்தோஷமாய் சிரிக்கிறான்.


ஏழெட்டு மாதங்கள் கழிந்தன. தம்பி உட்கார, தவழ

ஆரம்பித்து விட்டான். தம்பியை தன் மூன்று சக்கர சைக்கிளில்

வைத்து ஓட்டுகிறான், விளையாடுகிறான். ஒருநாள்

தம்பியின் கை சக்கரத்தில் சிக்கி..., நல்லவேளையாய் காயம்

அதிகமில்லை. இடதுகையில் இரண்டு விரல்கள் இலேசாக நசுங்கி,

தோல் சிராய்த்திருந்தது. டாக்டரிடம் அழைத்து போய் மருந்து

போட்டு, மாத்திரையும் கொடுத்து , தம்பி தூங்கி விட்டான்

தம்பியின் கை பிடித்தபடியே, இவன், தம்பி பாவம்மா...
.
`தம்பிக்கு எப்டி வலிக்கும், பாருங்கம்மா! , கை வீங்கி

போச்சு, சரியாயிருமாம்மா’ , கண்களில் கண்ணீரோடு

கேட்ட மகனிடம் ,ஒண்ணுமில்லடா, ரெண்டு நாள்ல `

சரியாயிரும்,என்றாள் ஆறுதலாக. குழந்தைகளின் உலகமே

கள்ளமில்லாத அன்பாலானது என்பது புரிந்து

சந்தோஷமாய் மகனை அணைத்துக் கொள்கிறாள்.

16 comments:

ராமலக்ஷ்மி said...

கள்ளமில்லா பிள்ளை உள்ளம். அழகாய் விவரித்திருக்கிறீர்கள்.

//அழகா இருக்கான் பாரு ‘ என்றார்கள். உண்மையிலேயே தம்பி அழகாய் தானிருந்தான்.

பாத்ங்களும், கைகளும், அடர் ரோஜாப்பூ நிறத்தில். மெதுவாக கையை தொட்டுப்

பார்த்துவிட்டு`எவ்ளோ ஸாப்டா இருக்குமா’ என்றான் ஆச்சரியமாய்.` நா தூக்கலாமா?’ //

கண்கள் அகல மூத்த குழந்தைகள் இப்படிக் கேட்பது எல்லோருக்கும் காண வாய்த்திருக்கும்.

அருமை அம்பிகா!

ப்ரியமுடன் வசந்த் said...

இரண்டாவது தம்பியோ தங்கச்சியோ பிறந்த வீடுகளில் சகஜமாக காணப்படும் நிகழ்வை அழகா எழுத்தில் கொண்டுவந்துட்டீங்க....

மாதவராஜ் said...

மனதைத் தொடும் பதிவு. குழந்தைகளின் உலகைப் புரிந்து கொண்டால், வாழ்வின் அழகும் அர்த்தங்களும் புரிய வரும்.

வரிகள் பாதி பாதியாய் நிற்கின்றனவே, சரி செய்யக் கூடாதா?

கோமதி அரசு said...

குழந்தை உள்ளம் அருமை அம்பிகா,
முதல் குழந்தையை அன்பாய் பார்த்துக்கொண்டால்,அந்த குழந்தை அடுத்த குழந்தையை நன்கு பாசமாய் பார்த்துக்கொள்ளும்.
குழந்தை உளவியல் அருமை.

கண்ணகி said...

இரு குழந்தைகளுக்கும் இடையில் அன்பை வளர்ப்பது தாயிடம்தான் உள்ளது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம் .குழந்தையை அன்பைப் பகிர பழக்கிட்டா ப்ரச்சனை இல்லை என்பதை நல்லா சொல்லி இருக்கீங்க.. அழகான தங்கச்சிப்பாப்பாக்கு பதில் சேட்டைக்கார தம்பி என்பதில் கொஞ்சம் வருத்தமிருந்தாலும் இன்னோரு அம்மா போல பாத்துக்கனும் என்றதும் என்பெண் மனதைதேற்றிக்கொண்டாள் ..:)

காமராஜ் said...

குழந்தைகள் தனக்குப் பிடிக்காதவற்றை நேரடியாகச் சொல்லி விடுகிறார்கள். கவனிப்பாரற்ற ஏக்கம் எல்லோரிடத்திலும் அடங்கிக்கிடக்கும்.
அதற்கும் கூட குழந்தைகளே உதார புருசர்கள்.நாம் அவர்களிடத்தில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய்யவே இருக்கிறது.
நல்ல பதிவு அம்பிகா.

sathishsangkavi.blogspot.com said...

இரு குழந்தைகள் உள்ள வீடு இப்படித்தான் இருக்குங்க.....

Thenammai Lakshmanan said...

மிக எளிமையா அழகா பாசத்தைப் பற்றி சொல்லிட்டீங்க அம்பிகா

Unknown said...

ரசித்தேன்

க.பாலாசி said...

குழந்தைகளின் முகமே காட்டிவிடும் இதுபோன்ற நேரத்தில் வெளிக்கொணரும் ஏக்கங்களை.... நெஞ்சைத்தொட்டது....பெரிய பையனை அடிக்காமல் நீங்க புகட்டிய அறிவுரையே சிறந்தது...

Deepa said...

ப்ளேடுடன் நின்றானா?
அப்படியும் அடிக்காம‌ பிள்ளைக்கு அறிவுரை சொல்லி இருக்கீங்க! ஆஹா...
நெகிழ வைத்த பதிவு அக்கா.
படmum ரொம்ப அழகு!

ஆமாம், கவிஷ் மனோ சேட்டைகள் பற்றி நீங்கள் புத்தகமே போடாலாம் இல்ல? :)

VijayaRaj J.P said...

பாசக்கார பயலுக...

நல்ல பதிவு

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))))))


ப்ளேடுடன் நின்றானா?
அப்படியும் அடிக்காம‌ பிள்ளைக்கு அறிவுரை சொல்லி இருக்கீங்க! //

ஆமாம் , இதுதான் எனக்கும் ஆச்சரியம்.

எப்படியோ எனக்கு ரொம்ப பயனுள்ள பதிவு ;)

Priya said...

குழந்தைகளின் உலகை பற்றி மிக அழகா எழுதி இருக்கீங்க‌!

அம்பிகா said...

உங்கள் வருகைக்கும், அன்புக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி, பிரியமுடன் வசந்த்.

நன்றி மாதண்ணா.

வாங்க கோமதி அரசு.
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

நன்றி, கண்ணகி.

அதேதான். சரியாக சொல்லியிருக்கீங்க. வருகைக்கும், பகிர்வுக்கும் நனறி முத்துலெட்சுமி.

நன்றி காமராஜ் அண்ணா.

நன்றி சங்கவி.

நன்றி தேனம்மை லக்ஷ்மணன்.

முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி A.சிவசங்கர்.

பகிர்வுக்கு நன்றி பாலாசி.

தீபா,
குழந்தைகள், திடீரென ஒரு புது வரவை ஏற்றுக்கொள்வதில்லை.அன்பை பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை.
சிலசமயம், `பாப்பாவ பூச்சாண்டி கிட்டே புடிச்சி கொடுத்திரலாம், என்று கூட சொல்லியிருப்பதாக அறிந்திருக்கிறேன்.
நாம் அரவணைத்தால், சரியாகி விடுவார்கள்.

ஆமாம் விஜியண்ணா, ரொம்ப பாசக்கார பயலுக.

அமித்துஅம்மா,
\\எப்படியோ எனக்கு ரொம்ப பயனுள்ள பதிவு ;)\\

வாழ்த்துக்கள் அமித்தம்மா.

ப்ரியா,
உங்கள் முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.