வானம் இருட்டிக் கொண்டு வந்தது. மழை வருமோ, குடை
கூட கொண்டு வரலியே என நினைத்தபடியே வீட்டை நோக்கி வேகமாக
நடக்கத் தொடங்கினேன். `அக்கா, நீங்க தானே பார்லர் வச்சிருக்கீங்க’ என்னை வழிமறித்த அந்த பெண்ணுக்கு முப்பது வயதுக்குள் இருக்கும். சாதாரண நடுத்தர குடும்பத் தோற்றம். ஆமாம் என்பதாய் தலையசைத்தபடியே அவளை ஏறிட்டேன்.`அக்கா எம்பொன்ணு கருப்பா இருக்கா, கொஞ்சம் கலராக்க முடியுமா?’ என்றாள். `ப்ளீச்சிங்,பேஷியல் ஏதாவது செய்யலாம். பார்லருக்கு கூட்டிட்டு வாங்க’ என்றேன்.சட்டென ஏதோ தோன்ற உங்க பொண்ணுக்கு என்ன வயசிருக்கும்?எனக் கேட்டேன்.` எட்டு வயசாச்சு’ என்றாள் அவள். தலையிலடித்துக் கொள்ளலாம்போலிருந்தது. நிதானத்தை வரவழைத்துக் கொண்டு,`இந்த வயசுல எதுவும் செய்ய கூடாது. தோல் ரொம்ப மென்மையா இருக்கும். +2 முடிச்சு காலேஜ் போறவயசுல கூட்டிட்டு வாங்க, பாக்கலாம்’. சிந்தனையுடன் நடக்கத் தொடங்கினேன்.
  மேலேகுறிப்பிட்ட சம்பவம்ஒருஉதாரணம்தான்.பெண்குழந்தை
கருப்பாய் பிறந்து விட்டாலே, கவலையும் சேர்ந்தே பிறந்து விடுகிறது
என்ன குழந்தை பிறந்திருக்கிறது என்று கேட்பவர்களுக்கு பெண்குழந்தை என்று பதில் வந்தால், அவர்களின் அடுத்த கேள்வி குழந்தை என்ன கலர் என்பதாகத்தான் இருக்கிறது. என் தோழியின் மகள் ஏழாவது வகுப்பு தான் படிக்கிறாள்.கொஞ்சம் கருப்பாக
இருப்பாள். அவள் நிறத்தை சுட்டிக்காட்டி பேசி ஒருவித தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி அதீத அல்ங்காரம் செய்யவும் பழக்கிவிட்டனர். விளைவு படிப்பில் நாட்டமின்றி முழுநேரமும் `மேக்கப்செட்’ டும் கையுமாய் அலைகிறாள். இன்னொரு சம்பவம்; B.E. முடித்து ஒரு நிறுவனத்தில வேலை செய்யும் பெண் `மூக்கும் முழியுமாக’ அழகாக இருப்பாள். ஆனால் நிறம் குறைவாக இருப்பாள். அவளுக்கு திருமணம். நிறையநகைகள்
போட்டு, ஆடம்பரமாக திருமண ஏற்பாடுகள் செய்திருந்தனர் ஆனாலும் பெண், முகத்தில் மலர்ச்சியில்லை. விசாரித்த போது தெரிந்தது. மாப்பிள்ளை கொஞ்சம் கலராகஇருப்பாராம்.நிச்சயதார்த்தத்தின் போதே பிள்ளைவீட்டார் இவள் நிறத்தைக் குறித்து
ஏதேதோ பேசி அவளை நோகடித்திருக்கின்றனர். கேட்பதற்கே வருத்தமாயிருந்தது.கோபமும் வந்தது. நிச்சயம் இவள் நிறத்தை காரண்ம் காட்டி கூடுதல் வரதட்சணை வாங்கியிருப்பார்கள் என எரிச்சலும் வந்தது
இந்த வெள்ளை கலர் மோகம் பெரும்பாலான பெண்களை
ஆட்டி படைக்கிறது எனலாம்.கறுப்பாய் இருப்பவர்கள் கொஞ்சம் மாநிறம்
ஆகிவிடமாட்டோமா எனவும், மாநிறமாய் இருப்பவர்கள், கொஞ்சம் வெளுத்து விடவும்,வெளுப்பாய் இருப்பவர்கள் அதை தக்கவைத்துக்
கொள்ளவும் விழைகின்றனர்.கருப்பாய் இருப்பதென்பது
ஒரு குறைபாடில்லை. இயற்கையான விஷயம். அதுவும் இந்த நவீனயுகத்தில் ஓரளவு நிறத்தை மேம்படுத்த எத்தனையோ வழிமுறைகள்
உள்ளன. மேலும் அழகு என்பதொன்றும் நிரந்தரமில்லையே!.
மிகப் பழைய படம், நானும் ஒரு பெண் என நினைக்கிறேன், விஜயகுமாரி , `கண்ணா கருமை நிற கண்ணா’ என அழுதழுது
பாடுவார். ஆண்டுகள் பல கழிந்துவிட்டாலும் இன்னும் பல விஜயகுமாரிகள் ஆங்காங்கே அபஸ்வரத்தில் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்...


