Sunday, January 3, 2010

எம் பெண்கள் முன்னேறுகின்றனர்.!!!

என்னிடம் புருவம் சரிசெய்து கொள்ள வந்திருந்தனர் இரண்டு பெண்கள். சாதாரண காட்டன் சுடிதாரில் மிக எளிமையாக தோற்றமளித்த அவ்விரு இளம்பெண்களும் பக்கத்து
ஊரான அம்மன்புரத்தில் இருந்து வந்திருப்பதாகக் கூறினர். `படிச்சுக்கிட்டு இருக்கீங்களாம்மா’
பேச்சுக் கொடுத்தேன் நான். அவர்கள் கூறிய பதில் ஆச்சரியப் படுத்தியது. அதில் ஒருப்
பெண் திருநெல்வேலியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணி
புரிவதாகக் கூறினாள். இன்னொருப் பெண் M.Phil படித்துக் கொண்டிருப்பதாகக் கூறினாள்.
அம்மன்புரம் என்பது மூன்று அல்லது நான்கு தெருக்கள் மட்டுமேக் கொண்ட சிற்றூர்.
அந்தக் குக்கிராமத்துப் பெண்கள் இந்த அளவு கல்வியில் முன்னேறியிருப்பது வியப்பாய் இருந்தது. இதேப் போல் ஒருமுறை, இங்குள்ள ஒருப் பெண் மேகாலயா அருகில் டெலிபோன் டிபார்ட்ண்ட்டில் A.E. யாக இருப்பதாகக் கூறவும், அருகில் இருந்த என் அண்ணன் மகள் என்னிடம், `என்ன அத்தை, உங்க ஊர் இவ்வளவு முன்னேறி விட்டதா?’ என்றாள் ஆச்சரியமாய். எனக்கும் அதே அச்சரியம் தான்.

நினைவுகள் பின்னோக்கி செல்ல நான் படித்துக் கொண்டிருந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். நடு்நிலைப் பள்ளி வரை நாற்பது இருக்கும் மாணவியரின் எண்ணிக்கை, உயர்நிலைப் பள்ளியை அடையும் போது இருபத்தைந்து ஆகிவிடும். அதுவும் வயதுக்கு வந்தபின் பெண்கள் கல்வியை தொடர்வது மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான். என்னுடன் படித்தவர்களில் கல்லூரி சென்று படிப்பை தொடர்ந்தவர்கள் ஏழு பேர் மட்டுமே. அப்போதெல்லாம் கல்லூரி செல்வதென்றால் தூத்தூகுடி அல்லது திருநெல்வேலி செல்ல வேண்டும். நான் தூத்தூகுடி செயிண்ட் மேரீஸ் கல்லூரியில் படித்தேன். எங்கள் தெருவில் இருந்து கல்லூரி சென்றது நான் ஒருவள் மட்டுமே. என்னையே ஒரு மாதிரி வினோதமாகத் தான் அப்போதுப் பார்த்தனர்.

இப்போது நிலைமையே வேறு. பக்கத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம், நாசரேத் என சுற்றி சுற்றி மகளிர் கல்லூரிகள். அதனால் படிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகி உள்ளது. பஜாரில் உள்ள கடைகளில் தொண்ணூறு சதவிகிதம் வேலை செய்கின்றனர். ப்ளஸ் டூ வரை படித்த பெண்கள் எஸ்.டி. டி. பூத், டிராவல்ஸ், மருத்துவமனை, எனவும், டிகிரி வரை படித்தவர்கள் மெட்ரிக்குலேஷன், மனேஜ்மண்ட் பள்ளிகள் எனவும் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று பெற்றவர்களின் சு்மையை குறைப்பதால் அவர்களும் தைரியமாக அனுப்புகின்றனர்.

இன்ஜினியரிங் படிக்கும் போது `கம்ப்பஸில் ப்ளேஸ் ’ ஆன ஒருப் பெண், ஐ.டி. ஃபீல்ட் டல் என்பதால் பாங்க் எக்ஸாம் எழுதி செலக்ட் ஆகி ஐ.ஒ .பி யில் சேர்ந்தும் விட்டாள். அதன் பின் டி. சி.எஸ் சில் ஆர்டரும் வந்து சேர்ந்தது. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் பெண்களின் தன்னம்பிக்கையும் மனதைரியமும் நிறைவளிக்கிறது. பெண்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு பெறும் போது அவர்களை அடிமைப் படுத்தும் வரதட்சணை போன்ற கொடிய விலங்குகள் தானே அகன்று விடும். அந்தநாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

26 comments:

அண்ணாமலையான் said...

உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீன் போகாது... நல்ல நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்...

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பகிர்வு....

இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லையே.....

VijayaRaj J.P said...

கிராமப்புற பெண்கள் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' திறமையை
வளர்த்துக்கொண்டால் மேலும் முன்னேற முடியும்.

நம்பிக்கையூட்டும் பதிவு... வாழ்த்துக்கள்.

கண்ணகி said...

கேட்க சந்தொசமாக இருக்கிறது.நம்பிக்கை துளிர்விடுகிறது.

ஆர்வா said...

அனைவருமே யோசிக்க வேண்டிய விஷயத்தை பதிவிட்டிருக்கிறீர்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல பதிவு..

Thamizhan said...

அடுப்பூதும் பெண்களுக்குப்
படிப்பெதற்கு ?
என்று கேட்ட காலம் மாறியுள்ளது.
பெண்ணுரிமைக்காகப் போராடியவர்களை,
முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி போன்றோர் சேர்ந்து பெண்ணுரிமைக்காகப் போராடிய ஈ.வெ.ராமசாமியைப் "பெரியார்" பட்டங்கொடுத்துப் பெண்கள் மாநாட்டிலே 1938லே பாராட்டியவரை,
கல்வி வள்ளல் காமராசரை
நன்றியுடன் அனைவரும் பாராட்ட வேண்டும்.

ப்ரியமுடன் வசந்த் said...

நான் பயந்தது சரிதான் போல மேடம்...!

இன்னும் நிறைய துறைகள் கால் பதிக்க வேண்டியிருக்கிறது மட்டுமல்லாது கால் பதித்து சாதிக்கவும் வேண்டியிருக்கிறது

பாரதியின் கனவு சாத்தியமாகி வருகிறது...!

சந்தனமுல்லை said...

படிக்கவே அருமையாக இருக்கிறது..
இன்னும் பலதுறைகளிலும் முன்னேற வேண்டியிருக்கிறது..அதற்கு கல்விதான் முதல்படி!

தங்களின் பெருமிதம் பாராட்டுக்குரியது!
:-)

அம்பிகா said...

நன்றி அண்ணாமலையான்.

உண்மைதான், சங்க்கவி.

உண்மைதான் அண்ணா,
`ஸ்போக்கன் இங்க்லீஷ்’ ஒரு குறை தான். தரமான ஆங்கிலவழி பள்ளிகளில் பயிலாதது, பெற்றோர் படிக்காதவர்களாயிருப்பது, என பல காரணங்கள் இருந்தாலும், அடிப்படை கல்வி இருந்தால் மற்றவை தானே சரியாகி விடும் என நினைக்கிறேன்.

அம்பிகா said...

வாங்க கண்ணகி,
முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

பகிர்வுக்கு நன்றி, கவிதை காதலன்.

வருகைக்கும், பகிர்வுக்கும், நன்றி பட்டாபட்டி.

உண்மைதான் தமிழன். அடுப்பூதும் பெண்கள் ஆகாய வீதியில் பறப்பது
சாதாரணமாக வந்துவிடவில்லை.
பலரது உழைப்பில் தான் வந்து கொண்டிருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி தமிழன்.

அம்பிகா said...

பாரதியின் கனவு நனவாகும் நாள் நிச்சயம் வரும்.
இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இது ஒரு நல்ல ஆரம்பமே!
நன்றி ப்ரியமுடன் வசந்த்.

அம்பிகா said...

வாங்க முல்லை,
நம் பெண்களின் முன்னேற்றம் உண்மையிலேயே சந்தோஷமாகத்தான்
இருக்கிறது.

சுந்தரா said...

இன்றைக்குதான் உங்க வலைப்பூவைப் பார்த்தேன்.

நம்ம ஊர்ப்பெண்களின் முன்னேற்றத்தைப்பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குது.
மாற்றங்களும் முன்னேற்றங்களும் இன்னும்தொடரவேண்டும்.

பாராட்டுக்கள்!

அம்பிகா said...

வாங்க சுந்தரா,
`நம்ம ஊர்ப்பெண்கள்’
செங்குழியை அடுத்த பூச்சிக்காடு தான் உங்கள் பூர்வீகம் என்று மாதுஅண்ணனின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள். சரிதானே!
உங்கள் முதல் வருகைக்கும், பகிர்வுக்கும், நன்றி.

மாதவராஜ் said...

மிக இயல்பான மொழி உன்னிடம் இருக்கிறது. நம்பிக்கையோடு விஷயங்களைப் பார்க்கிறாய். தொடரட்டும் உன் எழுத்துக்கள்.

அமுதா said...

நல்ல பகிர்வு. குக்கிராமத்தில் இருந்தும் பெண்கள் நல்ல நிலைக்கு வருகிறார்கள் என்பது நல்ல விஷயம். மகிழ்ச்சியாக உள்ளது இது போன்ற பாஸிடிவ் விஷயங்கள் கேட்கையில்...

thiyaa said...

அருமை
நல்ல பதிவு
வாழ்த்துகள்

தமிழ் உதயம் said...

காலத்தின் தேவை இது. பெண்களின் திருமண வயது கூட, கூட அவர்களின் கல்வி கற்றலும் அதிகரித்தது. ஐம்பது வருஷம் முன் சராசரியாக 15 வயதில் திருமணம் முடியும். அப்பொது அவர்களின் படிப்பு 5வதோடு முடிந்தது. 18 வயதில் திருமணம் எனும் போது, படிப்பு 8 வதோடு முடிந்தது. பிறகு 10ம் வகுப்பு. திருமண வயது 20 ஆன போது, +2, காலேஜ் ஆனது. இப்போது படிக்க முடிகிற வரை படிப்பு, பிறகு வேலை. பிறகு திருமணம்

அம்பிகா said...

நன்றி, மாதண்ணா.

வாங்க, அமுதா,
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

வாங்க, தியாவின் பேனா,
உங்கள் வருகையும், வாழ்த்தும்,
சந்தோஷப் படுத்துகிறது.

உண்மைதான் தமிழுதயம்.
பகிர்வுக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\வரதட்சணை போன்ற கொடிய விலங்குகள் தானே அகன்று விடும். அந்தநாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.//
உங்கள் நம்பிக்கை நனவாகட்டும்.. :)

அம்பிகா said...

வாங்க முத்துலெட்சுமி,
உங்கள் முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான பகிர்வு.

// இந்தப் பெண்களின் தன்னம்பிக்கையும் மனதைரியமும் நிறைவளிக்கிறது//

இதுதான் ரொம்ப முக்கியமான விஷயம்.நிறைவானதும் கூட.

Deepa said...

//பெண்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு பெறும் போது அவர்களை அடிமைப் படுத்தும் வரதட்சணை போன்ற கொடிய விலங்குகள் தானே அகன்று விடும். அந்தநாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள் அக்கா. நம்பிக்கை அளிக்கும் பாஸிட்டவான பகிர்வு. நன்றி

அம்பிகா said...

வாங்க அமைதிச்சாரல்,
உங்கள் முதல்வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

அம்பிகா said...

நன்றி, தீபா.