Thursday, March 8, 2012

மகளிர்தின வாழ்த்துக்கள், சாந்தாக்கா...!

. . இன்று உலக மகளிர் தினம். பெண்ணுரிமை, விடுதலை என்று நிறைய பேசுகிறோம். ஆனால் இது எதையுமே அறிந்திராத, ஏன் அடிப்படை கல்வி கூட இல்லாத ஒரு (அ)சாதாரண பெண்ணைப் பற்றிய பதிவு இது. தெருக்கோடியில் இருந்தது சாந்தாக்காவின் வீடு. எப்போதாவது எதிரெதிரேப் பார்த்தால் புன்னகைத்துக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே பரிச்சயம். பக்கத்து ஊருக்கு குடி போன பின், அதிகம் இங்கு வருவதில்லை. ரொம்ப நாளைக்கப்புறம் நேற்று அவர்களைப் பார்த்தேன். அவர்களைப் பார்த்ததும் அந்த சம்பவம் தான் நினைவுக்கு வந்தது.


நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள்.... வருஷந்தோறும், சித்திரைமாதம், கோலாகலமாய் நடக்கும் நடக்கும் கோயில்கொடையின் கடைசிநாள். வியாழக்கிழமை உணவெடுக்கும் நாள். மதியம் கறிச்சாப்பாட்டுக்குப் பின் தெருவில் விளையாட்டு போட்டிகள், பானை உடைத்தல், கயிறு இழுக்கும் போட்டி, மியுசிக்கல் சேர், நடந்து கொண்டிருந்தன. ஒரே ஆரவாரமும், கூச்சலும் களிப்புமாயிருந்தது. திடீரென யாரோ, ஏதோக் கூச்சலிட, சட்டென அத்தனையும் அடங்கி போனது. ``இசக்கிமுத்து மருந்தக் குடிச்சிட்டானாம், கடற்கரைல பெண்மாக் கெடக்கானாம்’. உடைப்பதற்காக கட்டப் பட்டிருந்த பானை அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. `பாவிப்பய, எதுக்கு இப்பிடி செஞ்சான்னு அரற்றிய படியே கடற்கரைக்கு ஓடினர். இசக்கிமுத்து சாந்தாக்காவின் கணவர். 35 வயதுக்குள் தான் இருக்கும். ரொம்ப அமைதியானவன், சங்கோஜி, யாரிடமும் அதிகம் பேசமாட்டான், பழகமாட்டான். தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருப்பான். அப்படிப்பாட்டவன் திடீரென த்ற்கொலை செய்து கொண்டது அதிச்சியாயிருந்தது. காரணம் தெரிந்தபோது,` சீ... இவெனெல்லாம் ஒரு மனுஷனா? இதுக்குப் போயி எவனாவது சாவானா?’ திட்டி தீர்த்தனர். 



இசக்கிமுத்து பக்கத்து ஊரில் சிறிய கடை நடத்தி வந்தான். பெட்டிக்கடையாயுமில்லாத, மளிகைகடையாயுமில்லாத கடை அது .கணவன், மனைவி இருவருமே சேர்ந்து தான் கடையை பார்த்துக் கொண்டனர். கோடைக்காலமாதலால் சர்பத் போன்ற ஒரு குளிர்பானம் தயாரித்து விற்பார்களாம். கலர் பொடி, சீனி, ஐஸ் ஆகியவற்றை கலக்கும் போது அந்த பொடியில் உள்ள ஏதோ ரசாயனம் கைகளுக்கு ஒத்துக் கொள்ளமல், அலர்ஜி ஏற்பட்டு, நாளடைவில் கைவிரல் நகங்கள் எல்லாம் சுருங்கி, விரல்முனைகள் முடங்கி ஒருமாதிரி மொக்கயாய் மாற ஆரம்பத்திருக்கிறது. தனக்கு `பெருவியாதி’ தான் வந்துவிட்டது என பயந்து புலம்பிக்கொண்டிருந்தானாம். இந்த பயத்தில் தான், கட்டிய மனைவியையும், இரண்டு மகன்களையும் நிர்கதியாய் தவிக்க விட்டு போய்விட்டான். ``ஐயோ.. இனி நா என்ன பண்ணுவேன், ரெண்டுபுள்ளைங்களையும் எப்படி காப்பாத்துவேன்..’ கடற்கரை மணலில் கிடந்து புரண்டு சாந்தாக்கா அழுததை தெருவே சொல்லிச் சொல்லி மாய்ந்து போயிற்று.


 சாந்தாக்காவை வைத்து ஆதரிக்கும் அளவுக்கு அவளுடைய அக்காவோ, கணவரது தம்பி, தங்கை குடும்பத்தினரோ வசதியானவர்கள் இல்லை. பெரிய பையனுக்கு 12, 13 வயதிருக்கலாம். அவனை துணைக்கு வைத்துக் கொண்டு அவர்கள் நடத்திக் கொண்டிருந்த கடையை தொடர்ந்து நடத்தலானார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சாந்தாக்காவுக்கும் விரல்களில் அதே நோய் இருந்து தோல் மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக் கொண்டதுடன், அந்த சர்பத் கலப்பதை விட்டு விட்டார்கள்.. கடையையும் பார்த்துக் கொண்டு, லோனுக்கு கிரைண்டர்கள் வாங்கிப் போட்டு, வீடுகளுக்கு மாவு அரைத்துக் கொடுக்கவும் தொடங்கினார்கள். பின்னர் அதுவே மாவு பாக்கெட்டுகளாக மாறின. சில வருடங்களில் படித்துக் கொண்டிருந்த சின்ன பையனும், உறவினர் கடை ஒன்றுக்கு வேலைக்குப் போய்விட்டான்.


 பதினைந்து வருட உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவற்றின் பலன், தெருமுனையில் சிதிலமாகும் நிலையிலிருந்த ஓட்டுவீடு, சிறிய காங்கிரீட் வீடாகி, வாடகைக்கு விடப் பட்டிருக்கிறது. கடை நடத்திக்கொண்டிருந்த ஊரிலேயே சொந்தமாக இடம் வாங்கி, அங்கேயும் சொந்தமாக சிறிய வீடு, சொந்த கடை, போக இரண்டு கடைகள் வாடகைக்கும் விட்டுருக்கிறார்கள். வெளிர்நிறத்தில் சாதாரணசேலை, வெறுமையான நெற்றியில் உழைப்பின், அனுபவத்தின் ரேகைகள் பளிச்சிட நடமாடும் சாந்தாக்காவைப் பார்க்கும் போதெல்லாம் பிரமித்துப் போகிறேன்.


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள். ஆனால் இந்த பெண்ணின் வெற்றிக்கு பின்னால் இருந்தது என்ன...? .

Sunday, January 15, 2012

இனிய பொங்கல்வாழ்த்துகள்

அனைவர்க்கும் இனிய பொங்கல்வாழ்த்துகள்.


.சென்னையில், பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் இளைய மகனுக்காக சில மாதங்கள் சென்னை வாசம்.... பதிவுகள் எழுதுவதில் ஒரு இடைவெளி விட வேண்டியதாகி விட்டது. இதோ பொங்கல் திருநாளிலிருந்து, மகிழ்வுடன் மீண்டும் தொடர்கிறேன். என்னை, விசாரித்த அன்புள்ளங்களுக்கும், அன்பும், நன்றியும்.


.பொங்கல் என்றதும் நினைவுக்கு வருவது பொங்கல், கரும்பு, இவற்றோடு அழகழகான கோலங்களும் தான். கோலம் போடுவதில் அம்மாவுக்கு அப்படி ஒரு ஈடுபாடு, ஆசை,பிரியம். பொங்கலன்று அதிகாலை, அலுக்காமல், சளைக்காமல் மணிக்கணக்கில் போடுவார்கள். அம்மாவிடம் இருந்து என்க்கும் இந்த பழக்கம் தொற்றி கொண்டது. விடிகாலை மூணரை மணியிலிருந்து ஐந்தரை வரை உட்கார்ந்து போட்டு முடித்தபின்னர் தான் தெரிந்தது முதுகுவலி, கால்வலி என அத்தனை வலிகளும். அம்மா எப்படித் தான் எழுபது வயதிலும் கோலம் போட்டார்களோ...... இப்போது அதிசயமாக தெரிகிறது.



-

.

Wednesday, April 6, 2011

`அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’



சாந்தமான முகம், அடக்கமான அழகு, இயல்பான குணசித்திர நடிப்பால் நம்மைக் கவர்ந்தவர் நடிகை சுஜாதா. இன்று, தன் 58 வது வயதில் காலமானார் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இவர் சில வருடங்களாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தீவிர சிறுநீரகக் கோளாறால் அவதிப் பட்டு வந்த அவர், மூன்று நாட்களுக்கொரு முறை `டயாலிஸஸ்’ செய்து வந்தார். திடீரென ஏற்பட்டுவந்த மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.


திரையுலகுக்கே உரித்தான வதந்திகளிலோ, கிசுகிசுக்களிலோ அதிகம் சிக்காதவர், மிக டீசெண்ட்டான நடிகை எனப் பெயரெடுத்தவர். அவர் உடல்நலமின்றி இருந்த செய்தி அதிகம் வெளியே தெரியாத நிலையில் அவரது மரணம் ஒரு எதிர்பாரா அதிர்ச்சியே!


டைரக்டர் கே. பாலச்சந்தரால், `அவள் ஒரு தொடர்கதை’யில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். நாயகியை மையமாக கொண்ட படமென்பதால் முதல் படத்திலேயே பெரிதும் பேசப்பட்டார். அவர்கள், அந்தமான் காதலி, தீபம், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, விதி என பல படங்களில் நடித்திருந்தாலும், மறக்கமுடியாத படம் என்றால் `அன்னக்கிளி’ தான்.


இளையராஜாவின் அறிமுகப் படம். இப்பட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தன. `மச்சானப் பாத்திங்களா...” தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிய பாடல் அது. கேட்பவரை தலையாட்டி தாளம் போடவைக்கும் பாடல். இப்படி ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு இவ்வளவு நளினமாக ஆடமுடியுமா என வியக்க வைப்பார் சுஜாதா.







அன்னக்கிளி படம், பார்த்த சில நாட்கள் மனதை என்னவோ செய்தது. `அன்னம், உன்னப் பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு’ இந்த வரிகள் நினைவிலாடிக் கொண்டே இருக்கும். அன்னமாகவே வாழ்ந்திருப்பார் சுஜாதா.



ஆ...ஆ..உருக வைக்கும் ஜானகியின் ஹம்மிங். அன்னக்கிளி உன்னைத் தேடுதே...!





சுஜாதா...! எத்தனையோ படங்களில், பாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் அன்னக்கிளியாக நெஞ்சில் நிறைந்திருக்கிறார்.

.

Tuesday, March 22, 2011

விளையாட்டு அம்மன்...

.குழந்தைக்கு உடம்பு அனலாக கொதித்தது. கண்கள் இரண்டும் இரத்தமாய் சிவந்திருந்தன. பச்சதண்ணீராக மூக்கில் ஒழுகிக் கொண்டிருந்தது. `எத்தன நாளாக் காய்ச்சல் அடிக்குது? குழந்த ஒழுங்கா பால் குடிக்கிறானா?’ குழந்தையின் நெஞ்சில் ஸ்டெத்தை வைத்தபடியே கேட்ட டாக்டரம்மாவுக்கு, `நேத்து ராத்திரில இருந்து தான் காய்ச்சல்; ஒழுங்கா பால் குடிக்க முடியல டாக்டர்’ என்றாள் கவலையோடு அவள். `எத்தன மாசம் ஆச்சி? மீஸில்ஸ் வேக்சினேஷன் போட்டாச்சா? என்றவர்க்கு, `எட்டு மாசந்தான் ஆச்சிமா, தடுப்பூசி பத்துல தான போடனும்னு சொன்னீங்க என்றாள்.


L மாதிரியான உபகரணத்தை நாக்கில் வைத்து அழுத்திய படி தொண்டையை பரிசோதித்தவர், தொண்டையல்லாம் செவந்து போய் இருக்கு; முகமும் பளபள ன்னு இருக்கதப் பாத்தா அநேகமா குழந்தைக்கு மீஸில்ஸ் போடும்னு நெனைக்கிறேன். நாளைக்கு வேர்க்குரு மாதிரி rashes தெரிய ஆரம்பிச்சுரும், ரெண்டு மூணு நாள்ல காய்ச்சல் கொறஞ்சிரும், ஊசி வேண்டாம், இந்த சிரப்ப அஞ்சு நாளைக்கு, தினம் மூணு வேள, இந்த மூடிக்கி ஒரு மூடி குடு. குளுகோஸ் போட்டு தண்ணி நெறைய குடிக்க குடு, எதுவும் தொந்திரவு இருந்தா கூட்டிட்டு வா ‘ அறிவுறுத்திய டாக்டரம்மாவுக்கு நன்றி கூறியவள் குழந்தையை தோளில் போட்டு துண்டால் மூடியபடி வீட்டுக்கு கிளம்பினாள்.


டாக்டரம்மா கூறியது போலவே மறுநாள் சிவப்பாய் ரேஷஸ் வேர்க்குரு போல தெரிந்தன. வீட்டில் இருந்த அவளது பாட்டி, வேலைக்காரம்மாஆகியோர், ` இதென்ன செய்யும், சிச்சிலிப்பான் அம்மன், சும்மா வெளயாட்டு அம்மன் ரெண்டு நாள்ல எறங்கிரும்’ என்று ஆறுதல் கூறினார்கள். `அம்மா, மாரித்தாயே! பச்சப் புள்ள, பாரம் தாங்காது; சீக்கிரமா எறங்கிருமா’ உனக்கு துள்ளுமாவு இடிச்சு வைக்கிறேன்’ பாட்டி வேண்டிக் கொண்டாள். வெளிவாசல் நடைல ஒருக் கொத்து வேப்பிலையை சொருகி வைத்தார்கள். `ஆத்தா வந்திருக்கா; சுத்தபத்தமா இருக்கணும், தெரிஞ்சுதா’ என்றாள் வேலைக்காரம்மா இவளிடம் தனியாக. புரிந்தவளாய் தலையை ஆட்டினாள் இவள். `தெனம் அந்தியில, அஞ்சாறு வேப்பங்கொழுந்து, எள்ளு போல மஞ்சள், ஒரு சின்ன துண்டு சுக்கு தட்டி போட்டு கொதிக்க வச்சு கொடும்மா, இது தாய் மருந்து, வேற இங்கிலீசு மருந்தெல்லாம் வேண்டாம் என்றார்கள். இவளும் தலையை ஆட்டினாள். ஆனால் குழந்தை எல்லா மருந்தையும் வாந்தியெடுத்தான்.


மறுநாள் பொங்கல். ஊரே களை கட்டியிருந்தது. `வீட்டுல அம்மன் போட்டிருந்தா வாசல்ல பொங்கக் கூடாது’ என்றாள் பாட்டி. போன வருஷம் அவளுக்கு தலைப் பொங்கல். வீட்டின் முற்றத்தில், ஒரே நேரத்தில் மூணு பானை வச்சி பொங்கல் பொங்கினார்கள். ஒண்ணுல சர்க்கரைப் பொங்கல், ரெண்டுல பால் பொங்கல். பனைஓலைய வச்சி தீ போட்டதில முற்றமெல்லாம் ஒரே புகை மண்டல். இவளுக்கு அப்போது எட்டாவது மாசம். மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள். புகைமூட்டத்தில ஒரே தும்மலாக வந்தது. அடிவயிற்றை பிடித்துக் கொண்டு கஷ்டப் பட்டு தும்மிக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டிருந்த அவள் மாமியார், (அவுங்க பட்டணத்துல இருக்கவங்க. ஏற்கெனவே வெளில வச்சு பொங்குறது புடிக்காது) இதுதான் சமயமுன்னு,`இப்போ யாரு இப்படி ஓலைய வச்சு தீ போட்டு வெளிய வச்சு பொங்குறா? பேசாம அடுத்த வருஷம் உள்ள, அடுப்புல வச்சி பொங்க வேண்டியது தான் என்றார்கள். அத ஞாபகப் படுத்திக் கொண்ட பாட்டி, `ஹூம்... போன வருஷம்... நல்ல நாளும் அதுவுமா எந்த நேரத்துல உள்ள வச்சி பொங்கனும் னு சொன்னாளோ, இந்த வருஷம் பொங்க முடியாமலே போச்சி’ எரிச்சலோடு அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.



நாலைந்து நாள் கழித்து `அம்மன்’ இறங்கியதும், முகத்தின் பளபளப்பு குறைந்து சகஜ நிலை வந்திருந்தது. பானை தண்ணியில் வேப்பிலை போட்டு வெயிலில் வைத்து அந்த தண்ணீரால் தலைக்கு ஊற்றி `அம்மனுக்கு போக்கு’ விட்டார்கள். குழந்தை சாதாரணமாய் விளையாடிக் கொண்டு தானிருந்தான். இரண்டு நாட்கள் கழித்து குழந்தைக்கு மறுபடி மேல் காய்ந்தது. இவள் காய்ச்சல் சிரப்பை ஊற்றினாள். ஊரிலிருந்து வந்திருந்த அவள் அம்மா, `அம்மன் போட்டு தலைக்கு தண்ணீ ஊத்துன புள்ளைக்கு காய்ச்சல் திருப்பக் கூடாது. வெளையாட்டுக் காரியமில்ல’ ன்னு சத்தம் போட்டு டாக்டரிடம் கூட்டிப் போனாள்.


`நான் தந்த சிரப்பக் குடுத்தியா ? கேட்ட டாக்டரம்மாவிடம், இங்கிலீஸ் மருந்து குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்றாள் தயங்கியபடி. `என்னம்மா இது? இப்பப் பாரு, குழந்தைக்கு ரெண்டு லங்ஸ்லேயும் சளிக் கட்டியிருக்கு. நிமோனியா அட்டாக் ஆன மாதிரி தெரியுது’, எக்ஸ்ரே எடுத்து வரச் சொன்னார். நிமோனியா கன்ஃபார்ம் ஆனதும் குழந்தையை அட்மிட் செய்தார்கள். குழந்தை மூச்சு விட சிரமப் பட்டான். பொட்டுதண்ணீ உள்ள எறங்கல. பச்சத் தண்ணியா வயிற்றோட்டம் வேற. குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள். எட்டு மாதக் குழந்தையை, கைகால்களை அசைக்க விடாமல் கட்டுப் படுத்து வதற்குள் இவர்களுக்கு மூச்சு முட்டியது. கைகால்களில் அங்கங்கே குளுக்கோஸ் ஏற்றிய இடம் வீங்கிப் போனது. மாற்றி மாற்றி ஊசிப் போட்டார்கள்.


பார்க்க வந்த பெரியவர்கள், `இதே பேறு கால ஆசுபத்திரி; கண்ட பொம்பளையும் வருவா, அந்த தீட்டு வாடைக்கே புள்ளைக்கு வாயாலயும் வயித்தாலயும் வரும். பக்கத்து ஊரு வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போயி வேரு வாங்கி கட்டினா எல்லாஞ் சரியாயிரும்’ என்றனர். `அம்மங்கண்ட வீட்டுல சுத்தமா இருக்கலன்னா இப்பிடித்தா ஆவும்’ இது பக்கத்து வீட்டு பெரியம்மா. வயித்தெரிச்சல் தாங்க முடியாம `கொஞ்சம் பேசாம இருக்கீங்களா?’ கத்தினாள் இவள்.


ஒரு வாரத்தில் குழந்தைக்கு சளியும் காய்ச்சலும் குறைந்தது. `இன்னொரு எக்ஸ்ரே எடுக்கனும், மீஸில்ஸ் வந்து நிமோனியா அட்டாக் ஆனா ப்ரைமரி காம்ப்ளெக்ஸ் வர வாய்ப்பிருக்கு’ என்றார் டாக்டர். சொன்னது போலவே ப்ரைமரி காம்ப்ளக்ஸ் அட்டாக் ஆகியிருந்தது. `விளையாட்டு அம்மன், ஒண்ணும் செய்யாதுன்னு சொன்னாங்களே டாக்டர்’ என்றவளிடம் ,`மீஸில்ஸ் வந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப கொறஞ்சிரும், உன் பையன் ஏற்கனெவே நோஞ்சான். அதுலயும் தடுப்பூசி போடுற்துக்கு முன்னாலயே அம்மன் போட்டுருச்சி. நீ வேற ஆண்டிபயாடிக் மருந்த ஒழுங்கா குடுக்கல. அதனால தான் இவ்வளவு கஷ்டம்’ விளக்கியவர் `இனிமேலாவது மருந்து, மாத்திரைகளை ஒழுங்கா கொடு. மூனு மாசம் தொடர்ந்து குடுக்கனும்; ஒருநாள் கூட நிறுத்தக் கூடாது’ எச்சரித்து அனுப்பினார்.

.

Monday, March 14, 2011

கொஞ்சம் சிரிக்கலாமா....?



கொஞ்சம் சிரிக்கலாமா....?

இ.மெயிலில் வந்த படங்கள் இவை.

உங்கள் பார்வைக்காக...









































vijay to star in Dhoom 3!!!!




Excited?







After Sivaji... The NEXT BIG BLOCKBUSTER!!!

Just wait till you see vijay bike ride in his next movie...( just like he won in KURUVI CAR race by holding accelerator wire using histeeth !!!!!)

IN HIS NEXT MOVIE DHOOM-3


Just go through the mail step by step...
....
...
..
....
vijay is Chasing Villains
...
...
....
...
...
...
His bike is almost out of gas. NO FUEL!!!
....
...
....
....
....
What would you do???
..
...
...
...
...


Give up, of course. YOU are NOT vijay.
...
...
...
...
....

So what would HE do???
..
...
...
....
....


.

Monday, March 7, 2011

பெயர் புரா(கார)ணம்; தொடர்பதிவு.

.

`75+ லும் சாம்பியன்’ என்று மாமாவைப் பற்றி ஒரு பதிவு எழுதி்யிருந்தது நினைவிருக்கலாம். அதில் சண்டிகரில் நடைபெறவிருக்கும் `ஆல் இண்டியா சாம்பியன்’ போட்டிகளில் மாமா கலந்து கொள்ளவிருப்பதாக எழுதியிருந்தேன். மாமா அதில் கலந்து கொண்டு, குண்டு எறிதலில் மூன்றாவது பரிசு வாங்கியி் ருக்கிறார்கள் என்பதை சந்தோஷத்துடனும், பெருமையுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.


`பெயரின் மேல் காதல்’ இந்த தொடர்பதிவுக்கு ஸ்ரீஅகிலா அழைத்து இருந்தார். பெயர் என்பது நமக்கான அதிமுக்கியமான அடையாளம். மற்றவர்கள் நம்மை அழைக்கவும், நம்மை நாமே அறிமுகப் படுத்திக் கொள்ளவும் அவசியமான தொன்று. பிறந்த சில மாதங்களிலேயே நம் பெயரை, உணர்ந்து கொள்கிறோம். அனால் கொஞ்சம் வளர்ந்த பிறகுதான், நம்ம பேரு நல்லா இருக்கா, ஸ்டைலா இருக்கா என்றெல்லாம் யோசிக்கிறோம்.


பிறந்த நட்சத்திரம், தேதிக்கு பொருத்தமாக சிலர்(பலர்) பெயர் வைக்கிறார்கள். குடும்பத்தில் பெரியவர்கள், , தலைவர்கள், பிடித்த நடிகர், நடிகை பெயர் இப்படி ஏதாவது... சிலர் கடவுள் பெயரும் வைக்கிறார்கள். என்பெயர் அந்தவகை தான். ஆனால் என் ஜாதக பெயர் மிக நீ......ளமானது. குணலோஜன மங்கள அம்பிகா. நல்லவேளை, ஸ்கூலில், அம்பிகா மட்டும் தான். ஆசிரியர்கள் பிழைத்தார்கள் (அட்டெண்டென்ஸ்) எடுக்க ரொம்ப கஷ்ட பட்டிருப்பார்கள். நானும் தான். எல்லோரும் எவ்ளோ கேலி பண்ணியிருப்பார்கள். அப்பாடா!


ரொம்ப நாள் வரை குடும்பத்தில் எல்லோருக்கும் நான் `பாப்பா’ தான். கொஞ்சம் வளர்ந்தபின் இந்த பாப்பா வேண்டாமென சண்டை போட்டிருக்கிறேன். ஆனாலும் அம்மாவுக்கு நான் `பாப்பா’ வாகத்தான் இருந்தேன். அதுவும் மிகச் செல்லமாக `பாப்பாம்மா. ஒருதடவை இப்படித்தான், எங்கேயோ போவதற்காக பஸ் ஏறும்போது, (அப்போது நான் காலேஜ் படித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன்) `பாப்பா, பார்த்து... பார்த்து ஏறுமா’ என அம்மா பாசமிகுதியில் சொல்ல, ஏதோ சின்ன பாப்பா, பஸ் ஏறமுடியாமல் கஷ்ட படுது போல ன்னு எல்லோரும் எட்டிப் பார்க்க, வீட்டுக்கு வந்து அம்மாகிட்டே ஒரே சண்டை. இருந்தாலும் அம்மாவுக்கு நான் பாப்பாம்மா தான். அம்மா இறந்தபின் இந்த பாப்பாம்மா என்ற அழைப்புக்காக மிகவும் ஏங்கியிருக்கிறேன். ஒருநாள் என்சின்ன மகன் ஏதோ சேட்டை செய்தானென்று நான் கோபத்தில் கத்த, அவன் மிக கூலாக, `என்ன பாப்பா, எதுக்கு கத்துற’ என்றதும் சந்தோஷத்தில் அமைதியாகி விட்டேன்.


அப்பாவுக்கு நான் எப்பவும் `அம்பிமா’ தான். இதைப் பார்த்து என் பையன்களும் அம்பிமா என்றே அழைப்பார்கள். இதென்ன, இப்படி பேர் சொல்லிக் கூப்பிடுறாங்க என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பேர் சொல்லத்தானே பிள்ளைகள், சொல்லட்டும் என்பேன். இதைப் போலவே என் அண்ணன் மகள், என் கணவரின் தம்பி பெண்கள் எல்லோருக்குமே நான் அம்பிமா தான். பெரியம்மா, அத்தை, இவைகளைவிட அம்பிமா தான் பிடிக்கிறது. பக்கத்துவீட்டு சிறுமிகள் அம்பிகா அக்கா என்று அழைப்பதை, என் இரண்டாவது அண்ணன், `அம்பி காக்கா’ என்று பிரித்துக் கூப்பிட்டு கடுப்படிப்பான்.


அம்பிகா என்ற பெயர் எனக்கு பிடித்தமானதாக தான் இருந்தது, ஒரே ஒரு விஷயத்தை தவிர, `அ’ வில் ஆரம்பிப்பதால் எக்ஸாம் ஹாலில் முதல் பெஞ்ச் சில் அமர்ந்திருப்பேன். அப்படி இப்படி திரும்பக் கூட முடியாது. முதலில் என்னிடம் தான் பேப்பர் வாங்குவார்கள், பிடுங்குவார்கள். எரிச்சலாய் வரும். கல்லூரியில் படிக்கும் போது, எனக்கு அடுத்தது அனார்கலி என்னும் பெண். லாயர் பீரியட்ல அட்டெண்டென்ஸ் எடுக்கும் போது, எங்கள் இரண்டு பேர் பெயரையும் வாசித்து விட்டு,` என்ன இலக்கிய காதலர்கள் பேரா இருக்கே’ எனவும், எங்களுக்கு அந்த பெயரே செல்லப் பெயரானது.


கிராமங்களில் நிறைய வித்தியாசமான பெயர்கள் வைப்பார்கள். ஒரு பையன் பெயர் `கப்பல்’. அந்த பையனுக்கு முன்னால் மூன்று குழந்தைகள் பிறந்து இறந்து விட்டதால், அந்த பையனுக்கு இப்படி ஒர் பெயர் வைத்தார்களாம்.


ஒரு பேனா வாங்கினாலோ, அல்லது எதையாவது எழுதிப் பார்க்க வேண்டுமென்றாலோ, அநேகர் முதலில் எழுதிப் பார்ப்பது தம் பெயரைத்தான், காதலர்கள் வேண்டுமெனில் விதிவிலக்காக இருக்கலாம். இது ஒரு மனோ தத்துவ ரீதியான உண்மை.


சிலருடைய பெயர்கள் நம்மை மிகவும் ஈர்க்கக் கூடியவையாய் இருக்கும். என்னோடு கல்லூரியில் படித்த இரட்டை சகோதரிகள் பெயர்கள், மதிவதனா, மதனகீதா, மிக அழகான பெயர்கள். அதேபோல் பதிவுலகில் `சந்தனமுல்லை’ யின் பெயரும் மிகவும் பிடித்த, அழகான பெயர். சமீபத்தில் ஒரு டாக்டர் தம்பதியினர், இருவரும் அமெரிக்காவில் இருக்கின்றனர், தங்கள் பெண்ணுக்கு `இளவேனில்’ எனப் பெயர் வைத்திருப்பதாக கூறிய போது ஆச்சர்யமாக இருந்தது.


இது ஒரு தொடர் பதிவு. யாரை அழைப்பது என்று தெரியவில்லை. விருப்பமிருப்பவர்கள் தொடருங்களேன்....


.

Friday, February 25, 2011

பதிவில் லைவ் கிரிக்கெட் பார்க்க....

பதிவில் லைவ் கிரிக்கெட் பார்க்க....

இதற்கான லிங்க் ஐ என் மகன் அனுப்பியிருந்தான்.






.

Wednesday, February 16, 2011

மனப்பிறழ்வு..

`தொரலிங்கத்துக்கு பைத்தியம் புடிச்சிட்டாம்’ தெரு முழுசும் ஒரே பேச்சாகக் கிடந் தது. தொரலிங்கம் சுபாவத்தில் ஒரு அப்பிராணி. குரலுயர்த்திப் பேசவோ, சண்டை யிடவோ தெரியாது. அப்படிப் பட்டவன் தான், இப்போது திறந்த வாய் மூடாமல் பேசிக் கொண்டே யிருக்கிறான். ஒரே சொற்பொழிவுதான். அதுவும் எப்படி, பழைய தமிழ் படங்களில் பேசுவார்களே, அப்படி தூய தமிழில் பேசுகிறான். அவன் மனைவி ராஜம் செய்வதறியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். `எந் தலவிதியா இது, நல்லா யிருந்த மனுஷன் இப்படி கோட்டி புடிச்சி பேசுராறே, நா என்ன பண்ணுவேன்’ ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறாள்.


தொரலிங்கத்துக்கு அம்மா கிடையாது. சின்ன வயசிலேயே இறந்து போயிட்டாங்க. மாற்றாந்தாயிடம் தான் வளர்ந்தான். கொடுமை என்றில்லாவிட்டாலும் பெரிய ஒட்டுறவோ நெருக்கமோ கிடையாது. இரண்டு தம்பிகள், தங்கையிடமும் அப்படியே. சென்னையில் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்தான். அப்போது தான் அவனுக்கு கல்யாணமும் முடிவாகியது. பொண்ணு அதே ஊர், அதே தெரு தான்; நாலைந்து வீடுகள் தள்ளி. சின்ன வயசுலப் பார்த்திருக்கிறான். ஆளு நல்ல அம்சமா தான் இருப்பாள். சந்தோஷத்தில் மிதந்தான்.


அவனுக்கு பேசிவைத்திருந்த ராஜமோ சுபாவத்தில் அவனுக்கு எதிர்மாறானவள். வாயாடி, மகா கர்வி. மாநிறம் தான் என்றாலும் `பளிச்’ ன்னு இருப்பாள். ஐந்து தங்கைகள், ஒரு தம்பி என பெரியக் குடும்பம் அவளுடையது. அப்போது இவளுக்கு 18 வயது தான் ஆகியிருந்தது. மாப்பிள்ளை தொரலிங்கத்தை அவளுக்கு அறவே பிடிக்க வில்லை. குள்ளமா இருப்பான். கொஞ்சம் கூன் வேற போடுவான். ரெண்டு கையும் கொஞ்சம் திருகினாப்புல இருக்கும். ஒரு கால் கொஞ்சம் கட்டை என்பதால் நடக்கும் போது ஒரு மாதிரி குதிச்சி குதிச்சி நடக்குற மாதிரி தெரியும். எரிச்சலா வந்தது. அம்மாவிடம் முணங்கிப் பார்த்தாள், மூஞ்சிய காட்டிப் பார்த்தாள். எதுவும் நடக்க வில்லை. வாய மூடிட்டு சும்மாக் கிட, நாம இருக்குற நெலமைல இதவிட நல்ல மாப்ள கெடைக்க மாட்டான். அவனுக்கு என்ன கொறச்சல் ’என மகளை ஒரேயடியாக அடக்கி விட்டாள்.


அத்தனைக் கோபத்தையும் தொரலிங்கத்து கிட்டே காட்டினாள். `உம்மேல ஒரே வீச்சமா வீசுது, கத்தாழ நாத்தம் அடிக்குது, தூரப் போ என விரட்டுவாள். ஒழுங்கா சவரம் செய்யப்படாமல் வளர்ந்திருந்த தாடியப் பாத்து, `ஆட்டு தாடி மாதிரி இருக்கு. பட்டணத்தில் பூதம் ஜீ.பூம்பா’ என்பாள். அவன ஒரு மனுசனாவே மதிக்க மாட்டாள். பாடாப் படுத்தினாள். அவன் `என்ன ராஜம், கொழம்பு இப்படி யிருக்கு’ என்றால் போதும்; வேற வினையே வேண்டாம். பொழிஞ்சு தள்ளிருவாள். `உம்மூஞ்சிக்கு இது போதும், பேசாம தின்னுங்க’ என்பாள். ஆனாலும் கூட அவள் காலால் இட்ட வேலை களை இவன் தலையால் செய்து முடிப்பான். தண்ணி புடிச்சிக் குடுப்பான், துணி தொவச்சிக் குடுப்பான், சமயத்துல வாசல் பெருக்கி தெளிக்கவும் செய்வான். உள்ளூர்லயே ஒரு காண்ட்ராக்டர் கிட்ட வேலைக்குப் போனான. நல்ல உழைப்பாளி அவன். உடம்புக்கு சரியில்ல ன்னாலும் லீவு போட விட மாட்டாள். `உடம்புக்கு என்ன கொள்ளை, பேசாம ஒரு மாத்திரைய முழுங்கிட்டு வேலைக்கு போற வழியப் பாரு’ என்று விரட்டி விடுவாள். மனைவி அமைந்தது அவனுக்கு ஒரு சாபமாகவே ஆகிப் போனது..


எப்படியோ ரெண்டு பொண்ணுங்க பொறந்துச்சுங்க. மூத்தவ அப்படியே தாயைக் கொண்டிருந்தாள்; தோற்றத்திலும், குணத்திலும். சின்னவ அப்படியே தகப்பன எங்கேன்னு இருந்தாள். இதோ முப்பது வருச குடும்ப வாழ்க்கையும் கழிந்து விட்டது. போன வாரம் தான் ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் நடந்தது. கல்யாணமான மூன்றாவது நாளில் இருந்து தான் இவன் இப்படி பேச, சிரிக்க ஆரம்பித்தான்.


கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தவன், இப்போது கம்பீரமாக பேசலானான். முகத்தில் ஜீ.பூம்பா தாடியெல்லாம் இல்லை. மகள் கல்யாணத்திற்காக ஷேவ் செய்திருப்பான் போலும். `ஏய் , ராஜம், இங்கே வா’ கம்பீரமாக அதட்டும் அவனை முறைத்த படியே, `என்ன அதிகாரமெல்லாம் ஒரேயடியா இருக்கு’, என்றவளை மீண்டும் அதட்டினான். `மறு பேச்சு பேசாதே, வா என்றால் வா’ என்றான். எங்கேயோ தேடிப்புடிச்சி சமையல் குறிப்பு புத்தகங்கள் நான்கைந்து வாங்கி வந்தான். `உனக்கு சமையல் செய்யவே தெரிய வில்லை. இதைப் படித்து விட்டு ஒழுங்காக செய்’ என்றவனை பயத்துடன் பார்த்தாள். நடுராத்திரி 12 மணிக்கு எழும்பி உட்கார்ந்து சாமி படத்தை எல்லாம் எடுத்து வைத்து ஊதுபத்தி, சூடம் காட்டி பூஜை செய்தான். `ஏ ராஜம், உன்மேல் துர்நாற்றம் வீசுகிறது, போ, போய் குளித்து விட்டு வா’ என்றான். `ஆமா... எனக்கு வேற வேல இல்லை பாரு’ என மறுத்தவளை பளார் பளாரென நான்கைந்து அறைகள் விட்டான். `அய்யய்யோ.... இந்த பாவி என்ன கொல்றானே’ அலறியடித்து பக்கத்து வீட்டுக்கு ஓடினாள்.


மறுநாள் கலையில் இளைய மகள் அப்பாவை பார்க்க வந்தாள். சர்வாங்கமும் நடுங்கி கூனிக்குறுகி உட்கார்ந்திருந்த அம்மாவை பார்க்க இப்போது பாவமா யிருந்தது. தொரலிங்கம் இப்போதும் விறைப்பாக நின்று பேசிக் கொண்டிருந்தான். மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாசலில் கார் வந்து நின்றது. `எனக்கா பைத்தியம், வாசல்நிலையில் ஓங்கி குத்தியவன், எனக்கொன்றும் பயமில்லை, நான் எங்கு வேண்டுமானாலும் வருவேன், பின்வாசல் வழியாக வர வேண்டுமா அல்லது முன்வாசல் வழியாக வர வேண்டுமா’ வீரவசனம் பேசியபடி காருக்குள் போய் அமர்ந்து கொண்டான். `பாத்தியா, இப்படித்தான் வசனமா பேசிக்கிட்டே இருக்காரு’, மகளிடம் சொன்னவள், `செத்த நேரம் வாய வச்சிக்கிட்டு சும்மாக் கெடங்களேன்’ பழக்க தோஷத்தில் மறுபடி அதட்டினாள். `அம்மா, நீங்க கொஞ்சநாள் அப்பாகிட்ட சண்ட போடாம, எதுத்து பேசாம, அன்பா இருங்க, அப்பாக்கு தன்னால சரியாயிரும்’ என்றாள் மகள் அழுதுகொண்டே!.

.

Tuesday, February 8, 2011

ஹீரோக்களின் சாகசங்கள்; பாதிக்கப்படும் பிஞ்சுகள்.

.

திருச்சியிலிருந்து நெல்லைக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தோம். ரெயிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவன், எட்டுஅல்லது ஒன்பது வயதிருக்கும், `துறுதுறு’ வெனஅதீத சுறுசுறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்தான். அடிக்கடி வாசலை நோக்கி செல்ல முற்பட்ட அவனைக் கட்டுப் படுத்த அவன் அன்ன பெரும் பிரயத்தனம் பட வேண்டியிருந்தது. ``ஏம்மா வெளிய எட்டி பாக்க வுட மாட்டேங்குறீங்க?’’ கோபமாக கேட்ட அவனிடம், ``வேண்டாம்ப்பா, வெளிய வுழுந்துருவ’’ என்றாள் அன்னை. ``வுழுந்தா என்ன... ட்ரெய்ன மிஸ் பண்ணுவேன், பின்னாலேயே ஓடி வந்து கடைசிப் பெட்டிய ஜம்ப் பண்ணி புடிச்சி, டாப் ல ஏறி வந்துருவேன்’’ என்றான் வீரமாக. பதறிப் போன அன்னை, அவனுக்கு யதார்தத்தை புரிய வைக்க திணறிப் போகிறாள்.


சிறுவனின் உரையாடலைக் கேட்டு அதிர்ந்து போன நான், அதைப் பற்றி என் சகோதரியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவள் கூறிய இன்னொரு சம்பவம் மனதை அப்படியே உறைந்துப் போகச் செய்தது. அவள் மகன் படிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நான்காவது படிக்கும் சிறுவன் ஒருவன், தன்னை சினிமா ஹீரோவாக பாவித்துக் கொண்டு அந்த விபரீத செயலில் இறங்கி யிருக்கிறான். மண்ணெண்ணெயை வாய் நிறைய அடக்கிக் கொண்டு, கையில் தீக்குச்சியை பற்ற வைத்து, அதில் வாயிலிருந்த எண்ணெயை ஊத முற்பட்டிருக்கிறான். குபீர் குபீரென நெருப்பு பறந்து போகும் என நினைத்தவனின் முகமெங்கும் நெருப்பு பிடித்துக்கொள்ள, இரண்டொரு நாட்கள் உயிருக்கு போராடியவன் பரிதாபமாக இறந்து போனானாம்.


என்னக் கொடுமை இது... இந்த அளவுக்கா குழந்தைகள் மனம், ஹீரோக்களின் சாகசங்களுக்கு அடிமை பட்டுக் கிடக்கிறது? இப்படித்தான், முன்பு `சக்திமான்’ என்ற சீரியல் ஒளிபரப்பான போது இரண்டு குழந்தைகள் `சக்திமான் எங்களை காப்பாற்று’ எனக் கூறியபடி உயரமான கட்டிடத்திலிருந்து குதித்ததாக செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து, அந்த சீரியலை தடை செய்ய வேண்டுமெனக் கண்டனங்கள் எழுந்ததும் நினைவிருக்கலாம்.


கட் அவுட், பாலாபிஷேகம் என இளைஞர்கள் தான் இந்த `ஹீரோ வொர்ஷிப்’ புக்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள் என நினைத்தால், இப்படி பிஞ்சு நெஞ்சிலும் நஞ்சு கலந்து விட்டிருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஈன்று புறந்தருவதோடு கடன் முடிந்து விடுவதில்லை. பேணிக்காப்பதும், இத்தகைய மாயைகளை புரிய வைப்பதும் பெற்றோரின் கடமை தான்.

.

Tuesday, January 25, 2011

தலைவர் சிலை திறப்புவிழாவும், தண்ணீர் பஞ்சமும்...

.

ஐந்து நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை. எங்கேயாவது உடைப்பு ஏற்பட்டிருக்கும்; சரி செய்ததும் வந்துவிடும் என்று நம்பிக்கையோடு இரண்டு நாட்கள் காத்திருந்த மக்கள் மூன்றாவது நாளும் வராததால், வார்டு கவுன்சிலர், பஞ்சாயத்துபோர்டு நிர்வாகிகளிடம் முறையிட்டனர். அதன்பின்னர் தான் விஷயமே தெரிய வந்தது.


அரசியல்தலைவரின் சிலை திறப்புவிழாவு்க்கு வருகை தரும் மத்தியமந்திரி ஜி.கே. வாசனை வரவேற்க கட்அவுட்கள், பேனர்கள் வைப்பதற்காக குழிதோண்டிய தொண்டர்களின் கைங்கர்யத்தால் குடிநீர் குழாய் உடைந்து விட்டதாம். சரிசெய்ய வேண்டிய பஞ்சாயத்து நிர்வாகமோ, அவர்கள் பேனரை அகற்றினால் தான் நாங்கள் சரி பண்ண முடியும் என மிகப் பொறுப்பாக பதிலளித்துள்ளனர். ஏனெனில் பஞ்சாயத்து நிர்வாகிகள் அ.தி.மு.க.வினர்.


நேற்றிரவே விழா முடிந்து விட்டது. தலைவர் வருகைக்காக நான்கு நாட்கள் முன்னரே சுறுசுறுப்பாக பேனர் வைக்க குழிதோண்டிய புண்ணியவான்கள், இன்னும் அதை அகற்றாததால், வெற்றிகரமான ஐந்தாவது நாளாக இன்றும் குடிதண்ணீர் வரவில்லை.

மக்கள் காலிக்குடங்களுடன் குடிதண்ணீருக்காக அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். ஐம்பதடி பேனரில் ``மணிமுத்தாறு அணை தந்த மாவீரராக’’ தலைவர் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

.

Saturday, January 15, 2011

.பொங்கல் திருநாள் உற்சாகமாக மலர்கின்றது

பொங்கல் திருநாள் உற்சாகமாக மலர்கின்றது., அழகழகான வண்ணக் கோலங்களுடன்...





`தேங்கா, கரும்பு, மஞ்சக்கொல, காயி எல்லாமே போன வருசத்துக்கு, இப்போ மூணுமடங்கு ஏறிப்போச்சி. ஹூம்ம்ம்.... என்ன செய்ய....’` வயிற்றெரிச்சலோடு புலம்பினாலும் தேவைகளை சுருக்கிக் கொண்டு, பொங்கலை உற்சாகமாக வரவேற்கும் மக்கள்.



`101 தேங்கா, 21 வாழத்தாரு, ஒருக்கட்டு கரும்பு, பித்தளப்பான, சாமான், அரிசி, காய்கறி ன்னு வாங்கி தல பொங்கப்படி குடுக்குறதுக்குள்ள மூச்சு முட்டிப் போச்சு,’ மகளை திருமணம் செய்துக் கொடுத்துவிட்டு மாப்பிள்ளை வீட்டார் கேட்ட தலைப் பொங்கல் சீர் கொடுக்கத் திணறிப் போன தாயின் அங்கலாய்ப்புகள்....



`அரசு வழங்கிய பச்சரிசி, வெல்லம் சேர்த்து பொங்கலிட்டு மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் தமிழ் புத்தாண்டு, பொங்கல் திருநாளை கொண்டாடுங்கள்.’


என்ற தமிழக முதல்வரின் வாழ்த்துக்களோடு பொங்கல் திருநாள் உற்சாகமாய் மலர்கின்றது.


அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

.

Tuesday, January 11, 2011

75 + லும் சாம்பியன்

.
``இன்னும் தூங்கிட்டா இருக்கீங்க ? நேரமாச்சு.. சீக்கிரம் குளிச்சி கிளம்புங்க‘’ அதிகாலையில் எல்லோரையும் விரட்டும் இந்த சுறுசுறுப்பான குரலுக்கு சொந்தக்காரர், அம்மாவின் தம்பி... முழுப்பெயர் சித்தரஞ்சன். எங்களுக்கு `ரஞ்ச மாமா’. எங்கள் குடும்பத்து விசேஷம் என்றில்லை, உறவினர்கள், நண்பர்கள் என அனைவர் வீடுகளிலும் மாமாவின் கலகலப்பான குரல் எல்லோரையும் அதட்டிக் கொண்டிருக்கும்.





ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் யுனிவெர்சிட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தடகள விளையாட்டுபோட்டிகளில் 75 வயதினர்க்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் பங்கேற்று மூன்று பதக்கங்களுடன் ( இரண்டு முதல் பரிசு, மூன்றாம் பரிசு ஒன்று ) வெற்றி வீரராக நேற்று மாமா வந்திருந்தார்கள். 60 வயது தாண்டிவிட்டாலே, ` அய்யோ வலிக்குதே’, என்று இடுப்பையும், முழங்கால்களையும் பிடித்துக் கொள்பவர்கள் மத்தியில் மாமா விதிவிலக்கானவர்கள். 76 வயதுக்கு அதிபயங்கர சுறுசுறுப்பு. காலையிலேயே குளித்து தவறாது கோயிலுக்கு போய்வருவார்கள். எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது கூட மாமா அனேகமாக அங்கும் இங்குமாக நடந்து கொண்டே தான் பேசுவார்கள்.







பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மாமா சிறந்த விளையாட்டு வீரர் என்று தெரியும். சிறுகிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர்கள் பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆனது குறித்து அவர்களிடமே விசாரித்து தெரிந்து கொண்டது:-

ஆறுமுகனேரியில் நடுநிலைப்படிப்பை முடித்து, மெஞ்ஞானபுரம் csi ஹைஸ்கூலில் சேர்ந்தபின் தான் ஆர்வத்துடன் விளையாட்டுபோட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்கள். 400mts, 800mts ஓட்டபந்தயங்களில் கலந்து கொண்டார்கள். சுற்று வட்டாரங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு சென்றும் விளையாடி வெற்றியும் பெற்றார்கள். இண்டர்மீடியட் (தற்போதைய +1, +2, அப்போது கல்லூரியில்) படிப்புக்காக பாளையங்கோட்டை செயிண்ட். ஜான்ஸ் கல்லூரியில் சேர்ந்தார்கள். இண்டர்காலேஜ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400mts, 800mts கலந்து கொண்டு வெற்றிபெறாவிட்டாலும் நிறைய அனுபவங்கள் பெறமுடிந்தது. போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மணவரிடம் அவரது பயிற்சி முறைகள் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார்கள். அந்தமாணவர் ஆற்று மணலில் ஓடி பயிற்சி எடுப்பேன் என்றாராம். அந்த வருடம், 2 மாத கோடை விடுமுறையில், காயல்பட்டினம், அடைக்கலாபுரம் (இரண்டும் பக்கத்து ஊர்கள் ) ரெயில்வேலைனை ஒட்டி இருந்த வழியில், (மணல்வெளியாக இருக்குமாம்), ஓடி பயிற்சி எடுத்தார்களாம். இரண்டாமாண்டு படிக்கும் போது 400 மீ, 800மீ, 400மீ தடை ஓட்டம், லாங்ஜம்ப் அனைத்திலும் கலந்து கொண்டதில் 400மீ ரன்னிங்கில் யுனிவெர்சிட்டி சாம்பியன். அப்போது ஏரியாக்கு ஒரு யுனிவெர்சிட்டியெல்லாம் கிடையாது. சதர்ன் யுனிவெர்சிட்டி என ஒரே யுனிவெர்சிட்டி தான். அதன்பின் கோச் மூலம் மாமாவுக்கு டிரெய்னிங் கொடுக்கப் பட்டிருக்கிறது. இதுதான் முறைப்படி எடுத்துக் கொண்ட முதல் டிரெய்னிங். அந்த வருடம் கல்லூரியின் அனைத்து போட்டிகளிலும் மாமாதான் சாம்பியன்.


இவர்களுடைய விளையாட்டுத் திறமையால் சென்னை லயோலா கல்லூரியில் B.A; வில் இடம் கிடைத்தது. அதலெடிக்ஸ் பிரிவில் 400மீ, 800மீ, 400மீ தடையோட்டம், எல்லாவற்றிலும் மாமா தான் சாம்பியன். வாலிபாலில் யுனிவெர்சிட்டி ப்ளெயர் இரண்டாமாண்டு படிக்கும் போது வாலிபால் டீம் காப்டனாக இருந்திருக்கிறார்கள். அலிகார்யுனிவெர்சிட்டி, கல்கத்தா, அகமதாபாத் ல் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.


கல்லூரி படிப்பு முடிந்து வேலை, குடும்பம் என்றான பின் விளையாட்டை தொடர முடியவில்லை. சமீபத்தில் முதியோருக்கான தடகளப் போட்டிகள் நடப்பதை கேள்விப் பட்டு 70+ பிரிவில் கலந்துகொண்டு ரன்னிங்கில் இரண்டாம் பரிசு பெற்றார்கள். சிறுவயதில் விளையாடும் போது இரண்டு முறை கீழே விழுந்து வலது காலில் முறிவு ஏற்பட்டிருந்ததால், அந்தகாலில் வீக்கம் ஏற்பட்டு அடுத்த வருடம் விளையாட முடியாது போயிற்று. அதிகம் ஓடவேண்டாம் என அறிவுறுத்தப் பட்டதால், எறியும் போட்டிக்காக பயிற்சி எடுத்துக் கொண்டு அதில் கலந்து கொண்டார்கள். இந்த வருடம் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்றவற்றில் முதலிரண்டில் முதல் பரிசும், மற்றதில் மூன்றாவது பரிசும் வாங்கியிருக்கிறார்கள்.


சென்றவருடம், லயோலாகல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, விளையாட்டுபோட்டிகளில் இவர்களது திறமை பற்றி தெரிந்து கொண்டதும், மேடையில் அமரவைத்து கவுரவப் படுத்தியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் முன்னாள் டி.ஜி.பி.ஸ்ரீபால், தற்போதைய ஜார்கண்ட்கவர்னர், தயாநிதி மாறன் போன்றோரும் கலந்து கொண்டனராம்.






அடுத்தமாதம் சண்டிகாரில் ஆல் இண்டியா போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதாக ஆர்வத்துடனும், தன்னம்பிக்கையுடனும் கூறும் மாமாவுக்கு ஷுகர், பிபி, கொலாஸ்டிரல் எதுவும் கிடையாது. உணவில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. அதீத ஆர்வத்துடன் இனிப்புகள் அதிகமாக சாப்பிடும் மாமா, இப்பவும் பேரன்களுடன் சேர்ந்து ஆசையாக பட்டம் விடுவார்கள். தன்பிள்ளைகள், பேரன்கள் யாரும் விளையாட்டில் பிரகாசிக்க வில்லையே என்ற ஆதங்கம் அவ்வப்பொழுது பேச்சில் வெளிப்படும். இவர்கள் எனக்கு மாமா மட்டுமில்லை, மாமனாரும்கூடத்தான்.

Monday, January 3, 2011

இலவச தொலைக்காட்சியை முதல்வர்க்கே அன்பளிப்பாக தந்த விவசாயி!!

.

.என் மகனுக்கு இ.மெயிலில் வந்த செய்தியை எனக்கு ஃபார்வர்ட்

செய்திருந்தான். அதை கீழே தந்திருக்கிறேன்.



புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும்

விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவசதொலைக்காட்சிப்

பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி

கொடுத்திருக்கிறார்.



கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட

தி.மு.க.செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத்

தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது

பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்

பட்டதும், கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார்

என்ற விவசாயி மேடையேறினார்.



அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டியை வாங்கிக்

கொண்டார். ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி. வி. யை பெரியண்ண

அரசுவிடமே கொடுத்துவிட்டு, கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.

ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக

வாங்கிப் படித்தார்.



அதில் ‘ மனிதனுக்கு டி . வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான்.

ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம்.

தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன . இவை

எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகுஅடைந்து விட்டனவா?

குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு

அடைந்து விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்தபின்

மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி . யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக

இருந்திருக்கும் . இதற்கு மட்டும்எங்கிருந்து நிதி வந்தது? இந்தியாவின்

முதுகெலும்பான விவசாயிகள்தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள்.

டி . வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான

மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.



தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து

போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு

மாவாட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம் .

இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி,

மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே

போதும்.



அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி. வி.முதல் கார் வரை

அனைத்தையும்வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ

அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.




விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை,

லஞ்சம் ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு

நடமாடும் பிணமாக நான் எப்படி டி . வி. பார்க்க முடியும்? எனவே

எனக்கு இந்த டி.வி . வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு

மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது .



எனவே,இந்த டி.வி . யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் இதை ஏற்றுக்

கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும்

அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச செய்தாலே போதும்.

இந்தியா வல்லரசாகி விடும் ’ என்று நீண்டது அந்த மனு.



இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை. அருகில்

இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த

மனுவையும் டி. வி. யையும்வாங்கி வைத்துக் கொண்டு மேலும்

பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.



இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.



“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்

பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு

நகரத்துலபோய் கூலி வேலைக்கும், ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்

கிட்டிருக்கான் . இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும்

வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய்

இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது .



சாராயத்தை குடிச்சுட்டு , ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்

வர்க்கம் சோம்பேறியாகிக் கிட்டிருக்கு .ரொம்ப சீப்பா கணக்குப்

போட்டாலும் ஒரு டி. வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில்

ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. 2கோடி குடும்பஅட்டைக்கும்

டி. வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும் . இதை

வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.



கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு

டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி. வி. பாத்து

வேற சிரிக்கணுமாக்கும். அதுனாலதான் நான் டி.வி . யை திருப்பிக்

கொடுத்தேன்’’ என்றார் .


டி.வி . யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு

கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில் ‘ கொத்தமங்கலத்துக்கு வந்த டி . வி. க்கள் 2519.

அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு

டி.வி. யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ’

என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார் .



மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்

படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார்

பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார் . மக்களை சோம்பேறி

களாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை

பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!




செய்தி உண்மையா அல்லது பொய்யா என்று தெரிய வில்லை.

உண்மையெனில், விவசாயி விஜயகுமார் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் .

உரியவர். அவருக்கு வாழ்த்துக்கள்.


கற்பனையெனில், இந்த இலவசங்கள் மீதான வெறுப்பில்,

இப்படி நடந்து விடக் கூடாதா, என்ற ஆதங்கத்துடன், இவ்வாறு

கற்பனை செய்து ஒரு செய்தி அனுப்பிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.


செய்தி உண்மையென்று முத்துச்சரம் ராமலக்ஷ்மி உறுதி செய்திருக்கிறார்.

அதற்கான சுட்டியும் கொடுத்திருக்கிறார்.


http://surveysan.blogspot.com/2010/12/blog-post_22.html
.

.

Tuesday, December 21, 2010

மார்கழி நினைவுகள்.

.
மார்கழி மாதம் என்றதும் சட்டென நினைவுக்கு வருபவை, இதமான பனி,

விடிகாலை கோலங்கள், திருப்பாவை பாடல்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு

கொண்டாட்டங்கள்...; இவற்றோடு எனக்கு மார்கழி பஜனையும் சேர்ந்தே

நினைவுக்கு வரும். அம்மாவுக்கு இந்த பஜனை, பாடல்கள் இவற்றில்

அதிக ஆர்வமிருந்ததால் எங்களை பஜனைக்கு அனுப்பி வைத்தார்கள்.




அதிகாலை நான்குமணிக்கே கோயிலின் ஒலிப்பெருக்கிகள் எல்லோரையும்

எழுப்பி விட்டுவிடும். அம்மாவும் எழும்பி, எங்களுக்கு வெந்நீர் வைத்து,

குளிக்க செய்து, அனுப்பி வைப்பார்கள். அதன்பின் தெருவாசலில் கோலம்

போடுவார்கள். முற்றத்தையே அடைக்கும் பெரிய பெரிய கோலங்கள்.

இப்போது நானும் கோலம் போடுகிறேன், சின்னதா பேருக்கு ஒரு கோலம்..

பொங்கல், கோயில்கொடை என்றால் மட்டுமே பெரிய கோலம். அம்மா

வின் சுறுசுறுப்பு இப்போதும் ஆச்சர்யப் படுத்துகிறது.



மாதுஅண்ணன், நான், குட்டி மூன்று பேரும் பஜனைக்கு போவோம்.

விஜியண்ணன் கூட சில நாட்கள் வந்திருக்கிறான். எங்கள் தெருவின்

முனையில் தான் பஜனைக்கோயில் இருந்தது.எங்களைப் போல நிறைய

சிறுவர், சிறுமியர் வருவார்கள். பஜனையை வழிநடத்தி செல்வது

செல்லத்துரை என்பவர். எங்களனைவர்க்கும் செல்லத்துரையண்ணன்.

ஆரம்ப காலங்களில் பத்து, அதிகம் போனால் பதினைந்து பேர்கள்,

ஒருவர் கையில் ஹார்மோனிய பெட்டியுடனும், சிலர் ஜால்ரா வுடனும்

ஏதோ பாடிக் கொண்டு போவார்களாம். செல்லத்துரையண்ணன் தலைமை

ஏற்று நடத்த ஆரம்பித்த பின்தான் இவ்வளவு பேர் வர ஆரம்பித்தார்கள்.

அவர்களுக்கு நல்ல கம்பீரமான குரல். தொடங்கும் போது

தோடுடைய செவி யென் விடை யேறியோன்;

தூ வெண் மதி சூடி,


என்று தேவாரத்துடன் ஆரம்பிப்பார்கள். அதன் பின்,

போற்றி என் வாழ்முதல், ஆகியப் பொருளே;

புலர்ந்தது பூங்கழல்


என திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்,

ஆதியும் அந்தமும் இல்லாத

அரும்பெரும் சோதியை யான் பாட


திருவெம்பாவை பாடல்கள்...

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்

என சில திருப்பாவை பாடல்கள்..

இதற்குள் சிவன்கோயில் வந்து விடும். அவர்கள் முதலில் பாட, பின்

நாங்களனைவரும் சேர்ந்து பாடுவோம். ஆங்காங்கே கோலம் போட்டுக்

கொண்டிருக்கும் பெண்கள் எங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பர்.

கொஞ்சம் லேட்டாக வருபவர்கள் இடையில் வந்து சேர்ந்து கொள்வர்.

சிவன் கோயிலில் பூஜை முடிந்ததும், அங்கிருந்து கிளம்பி வேறு சில

தெருக்கள் வழியாக மறுபடியும் பஜனைக் கோயிலுக்கே வந்து சேர்வோம்.

சில திருப்புகழ் பாடல்கள்... முடிக்கும் போது

ஆறிரு தடந்தோள் வாழ்க,

ஆறுமுகம் வாழ்க.


என்று முடிப்பார்கள்.



மார்கழிமாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இரவு, கோயிலில் பாடல்கள்

ஒப்பிக்கும் போட்டி நடக்கும். திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள்,

திருவெம்பாவை 20 பாடல்கள், திருப்பாவை 30 பாடல்கள், மொத்தம்

60 பாடல்கள் ஒப்பிக்க வேண்டும். அறுபதையும் ஒப்பித்தால் பொன்னாடை

போர்த்தி, பரிசும் வழங்குவார்கள். பாடல்களின் எண்ணிக்கைக்கேற்ப

எல்லோருக்கும் பரிசுகள் உண்டு. ``எப்ப பாத்தாலும் ஆம்பள பசங்க தா

நெறய சொல்றாங்க, பொம்பள புள்ளைங்களால முடியாதா?’’ என்று

எங்களை சீண்டிவிட போட்டி போட்டு ரோஷத்தோடு படித்தோம். அந்த

வருடம், பெண்களில் நானும், கிருஷ்ணவேணி என்ற பெண்ணும்

60 பாடல்கள் ஒப்பித்தோம். பையன்களில் மாதுஅண்ணனும், குட்டியும்

ஒப்பிச்சாங்க. பொங்கலன்று எல்லோர்க்கும் பரிசுகள், எங்களுக்கு சிறப்பு

பரிசுகள் வழங்கினார்கள்.



ஹைஸ்கூல் வந்ததும் இவையெல்லாம் நின்று போயின. நாங்கள் தாம்

நின்று விட்டோமே தவிர, செல்லத்துரையண்ணனின் பாட்டு, பஜனை,

எல்லாம் தொடர்ந்தன. இதைப்போலவே போட்டிகளும்... நிறைய பேர்

பரிசுகளும் வாங்கியிருப்பார்கள்.



செல்லத்துரையண்ணன் நல்ல கணீரென்ற குரலில் டி.எம்.எஸ் பாடல்

களை அப்படியே பாடுவார்கள். `கற்பகவல்லி நின் பொற்பதங்கள்

பிடித்தேன்‘ `மண்ணானாலும் திருச்செந்தூரின் மண்ணாவேன்’ இன்னும்

எத்தனையோ பாடல்கள்... மிக அருமையாக பாடுவார்கள். ஆன்மீகத்தில்

மிகுந்த நாட்டமுடன், திருமணமே வேண்டாமென்றிருந்த அவர்கள்,

வீட்டாரின் வற்புறுத்தலால் மிகதாமதாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இதைப் போல ஒரு மார்கழிமாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு, திடீரென

இறந்து விட்டார்கள்.



மார்கழிமாத பஜனை, தேவாரம், திருப்பாவை இவற்றோடு, எங்களுக்கு

செல்லத்துரையண்ணனின் பாடல்களும் சேர்ந்தே நிறைந்திருக்கின்றன.


.

Monday, December 13, 2010

விட்டில் பூச்சிகள்.

.

அந்த வீட்டை கடந்து செல்கையில் அவளைப் பார்த்தி்ருக்கிறேன். புதிதாக

குடிவந்திருந்தார்கள் போலும். நைட்டி அல்லது சுடிதார் அணிந்து வாசலில்

அமர்ந்திருப்பாள். பக்கத்துவீட்டு சிறுபெண்களை அழைத்து வைத்து பேசிக்

கொண்டிருப்பாள். குழந்தைத்தனம் மாறாத முகம். கல்லூரிமாணவி போல்

இருந்தாள். ஆனால் கழுத்தில் இருந்த தாலி திருமணம் ஆனவள் என்பதை

பறைசாற்றியது. நிரம்பவும் சின்னப் பெண்ணாயிருக்கிறாளே எண்ணமிட்ட

படியே கடந்து சென்றுவிடுவேன். சில நாட்களிலேயே அவளைப் பற்றிய

செய்திகள் தெரிய வந்தன. அவள் சென்னையை சேர்ந்தவள் என்பதும்,

பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமல் அவள் கணவன் என சொல்லிக்

கொள்ளும் நபரோடு வந்துவிட்டாள் என்பதும், அந்தநபர்க்கு 45 வயதுக்கு

மேலிருக்கும் என்பதும் தெரிந்தது. அதன்பின் அவளைப் பார்க்கையில்

எரிச்சல் கலந்த பச்சாதாபம் தோன்றும்.



ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. என்னப் பிரச்சனையோ, அந்தப்பெண்

தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்கொளுத்திக் கொண்டாள்

என்றும், மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்

பட்டிருக்கிறாள் என்றும் அதிர்ச்சியோடு பேசிக் கொண்டார்கள். அவள்

கணவன் என சொல்லிக் கொண்ட நபர், போலிஸ், விசாரணைக்கு பயந்து

எங்கோ ஓடிவிட்டான். அந்தப் பெண்ணைப் பற்றிய விபரங்கள், பெற்றவர்,

முகவரி எதுவும் தெரியாத நிலையிலே அந்த பரிதாபத்துக் குரியவள்

இறந்து விட்டாள். பூட்டிக்கிடக்கும் அந்த வீட்டை கடக்க நேர்கையில்

அந்த குழந்தைத்தனம் மாறாத முகம் நினைவுக்கு வந்து சங்கடப்

படுத்துக்கிறது.



சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இன்னொரு சம்பவமும் நினைவுக்கு

வருகிறது. அந்தப்பெண்ணுக்கும் 18வயது போல் தான் இருக்கும். ஒரு

கடையில் வேலை செய்து வந்தாள். நல்ல அமைதியான சுபாவமுடைய

பெண் தான். ஆனாலும் விதியோ அல்லது அவளது மதியோ, கடை

முதலாளியோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரும் இதேபோல் நடுத்தர

வயதினர் தான். மனைவி, குழந்தைகள் இருந்தனர். அவளுக்கு அம்மா

மட்டும்தான். அந்த ஏழைத்தாயால் அவளைக்கண்டிக்க முடியவில்லையோ

அல்லது எல்லோரும் கூறியது போல் அந்த முதலாளியின் பணம் ஊமை

யாக்கிற்றோ, அவர்கள் பழக்கம் தொடர்ந்தது.



ஊமை ஊரைக் கெடுக்குங்குறது சரியாத்தா இருக்கு’ என்று ஏசுவோரும்

இருந்தனர். `நல்ல புளியங்கொம்பாத்தா புடிச்சிருக்கா’ எனப் பொறாமைப்

படுவோரும் இருந்தனர். அவளும் ஒரு பெண்குழந்தைக்கு தாயானாள்.

அவள் இரண்டாம்முறை கருவுற்ற பின் அவர் வருவது குறைந்து

போயிற்று. அடுத்ததும் பெண் தான். அவரிடமிருந்து சில சமயங்களில்

பணம் மட்டுமே வந்தது. உறவினர்கள் ஏதோ பஞ்சாயத்து பேசினர்.

கொஞ்சம் பணத்துடன் அவளது உறவு தீர்க்கப் பட்டது. `ரெண்டும்

பொண்ணாப் போச்சி, ஆம்புளப்புள்ளனா வந்திருப்பாரு’ என முதலாளி

யின் மோசடிக்கு சப்பைக் கட்டப்பட்டது.


தாயின் அவலநிலை காண சகியாமலோ, தானும் துன்பம் தர வேண்டா

மென்றோ, இரண்டாவது குழந்தை சில நாட்களிலேயே கண்ணை மூடி

விட்டது. இளவயதில் அடுத்தடுத்த இரண்டு பிரசவங்கள், ஒழுங்கான

பராமரிப்பின்மை, மனப்பாரம் எல்லாமாக சேர்ந்து அவளை காசநோயில்

தள்ளியது. அக்கம்பக்கத்தினர் முகத்தில் விழிக்கவும் முடியாமல், ஆற்ற

முடியாத துயரத்துடன் சரியான சிகிச்சையின்றி, குடிசையிலே அடைந்து

கிடந்தவள், ஓரிரு மாதங்களிலேயே இறந்தும் விட்டாள். அவளது

சாவுக்குக் கூட அந்த முதலாளி வரவில்லை.


`இவ ஒழுங்கா இருந்தா இந்த நெலம வ்ந்துருக்குமா?’, `அடுத்தவ

புருசனுக்கு ஆசப் பட்டா இப்பிடி தா ஆவும்‘, என அவளைப் பற்றின

விமர்சனங்கள் தொடர்ந்தன. `ஆம்புளன்னா அப்படித்தா, சேறக் கண்டா

மிதிப்பான், தண்ணியக் கண்டா கழுவுவான், பொம்பளயில்ல ஒழுங்கா

இருக்கனும்’ என ஆண்களின் `கல்யாண குணங்கள்’ நியாயப் படுத்தப்

பட்டன. மகன் தவறு செய்தால், `நீ சரியா இருந்தா, அவன் ஏன் இப்படி

அலைறான்’ என மருமகளை குற்றம் சாட்டும் மாமியார்கள், மருமகன்

தவறு செய்தால் ,`பார்த்து பதவிசா நடந்துக்க’ என்று மகளுக்கு புத்தி

கூறும் அன்னையர்கள், கணவன் தவறு செய்தால், `ஏதோ கெட்டநேரம்’

என்று கையாலாகத்தனதுடன் ஏற்றுக் கொள்ளும் மனைவிகள், என எல்லா

கட்டங்களிலும் ஆண்களின் தவறுகள் அங்கீகரிக்கப் படுகின்றன.



இங்கே, இந்த இரண்டு பெண்களின் செய்கையுமே முட்டாள்த்தனமானது,

ஏற்புடையது அல்ல என்ற போதிலும், இருவருக்குமே வாழ்வின்

சூட்சுமங்கள் புரிபடாத வயது. ஆனால் அந்த ஆண்கள்....? மகள்

வயதொத்த பெண்ணின் வாழ்வை பாழாக்குகிறோம் என்பது தெரியாதா?

அவர்களின் ஏழ்மையை, அறியாமையை உபயோகப்படுத்திக் கொள்வது

புரியாதா?

``பெண் என்பவள் மிதிப்பதற்கும், கழுவதற்கும், சேறோ அல்லது

தண்ணீரோ இல்லை, உயிரும் உணர்வுகளும் நிரம்பிய மனிதப் பிறவி ’’

என்பதை எப்போது உணர்வார்கள்?

.

Saturday, December 11, 2010

எனது வலைப்பக்கத்தின் வயது ஒன்று; மகாகவிக்கு 128.

.

.சொல்லத்தான் நினைக்கிறேன் என்று நினைத்ததை எழுத தொடங்கி

இன்றுடன் ஓராண்டு நிறைவுறுகிறது.. பெரிய திட்டமிடல்களோ,

முனைப்போ இன்றி, என் மனம், என் நினைவுகள், என் உணர்வுகள்

என மனதில் பட்டதை ஒரு ஆர்வத்துடன் எழுதினேன். இதுவரை

எழுதிய பதிவுகள் 76, என்னை பின்தொடர்வோர் 140 பேர். மிகப்

பெரிய சாதனையாக இல்லாவிடினும், என் எழுத்துக்கு கிடைத்த

மிகப் பெரிய அங்கீகாரமாகவே கொள்ள முடிகிறது. தமிழ்மணம்

தெரிவு செய்த முதல் இருபது பதிவுகளில் 13 வதாக, ஒருமுறை

வந்ததுமே எனக்கு சாதனையாகத் தான் தெரிகிறது.. என்

பதிவுகளை தொடர்ந்து வாசித்து, வாக்களித்து, பின்னூட்டமிட்டு

எனக்கு அன்பும், ஆதரவும் நல்கும் அனைத்து அன்பு உள்ளங்

களுக்கும், என் அன்பும், நன்றியும். என் பதிவுகள் அச்சில் வர

உறுதுணையாயிருந்த, என்வலைப்பக்கத்தின் முதலாண்டு

நிறைவுக்கு முன்னதாகவே வாழ்த்து தெரிவித்த

திரு.எஸ். வி. வேணுகோபாலன் அவர்களுக்கும் என் நன்றியும்,

அன்பும்.




மகாகவியின் பிறந்த நாளில் என் வலைப்பக்கம் தொடங்கப்

பெற்றது தற்செயலான நிகழ்வெனினும், எனக்கு பெருமைக்

குரியதே! ஆனால் அவர்க்கு அது வருத்தந் தருவதாயிருக்

கலாம். மகாகவியின் பிறந்த நாளில்,


எண்ணிய முடிதல் வேண்டும்;

நல்லவே எண்ணுதல் வேண்டும்.

திண்ணிய நெஞ்சம் வேண்டும்;

தெளிந்த நல்லறிவு வேண்டும்.

பண்ணிய பாவமெலாம்

பரிதிமுன் பனியேப் போல

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னையே!


என்பதைத் தவிர வேறென்ன வேண்டிட முடியும்?

.

Friday, December 3, 2010

ஜவ்வு மிட்டாய்

.

’என்னத் தெரியுதா’ சிரித்தபடியே என்னை நெருங்கியவளை முதலில்

இனம் கண்டுகொள்ள முடியவில்லை. அந்த `ஸ்பிரிங்’ முடியும், வெகுளி

சிரிப்பும் ஒரு புகைப்படலமாய் நிழலாடியது. `நா ந்தா .....’ பேரைச்

சொன்னதும், சட்டென ஸ்படிகமாய் பளிச்சிட்டன நினைவுகள். `எம் மக’

அவளின் பிரதியாய், அதே சுருட்டை முடியுமாய் நின்ற பெண்ணை

அறிமுகப் படுத்தினாள். `காலேஜ் ல படிக்கா’ குரலில் பெருமை வழிந்தது.

பரஸ்பர நலவிசாரிப்புகளுக்கு பின் விலகி சென்ற அவளின் நினைவுகளில்

மூழ்கினேன்.



இருபது வருஷமிருக்குமா அவளைப் பார்த்து... கூடவே இருக்கலாம்.

சிறு வயதில் நான் படித்த பள்ளிக்கு எதிரில் தான் அவள் வீடு. என்னுடன்

ஐந்தாவதோ, ஆறாவது வகுப்போ, சரியாக நினைவில்லை, சேர்ந்து

படித்தாள். `என்னை தெரியுதா’ என்றோ, அல்லது `நீ ஜோதியக்கா மக

தானே’ எனறோ என்னை அணுகும்பலரை அடையாளம் காட்ட முடியாத

என் ஞாபகசக்தியை அவமானத்துடன் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இவள்

குறித்த அனைத்து நினைவுகளும் பதிந்திருக்க முக்கியமான காரணங்கள்

இருந்தன. முதலாவது அவள் பெயர். இரண்டாவது அவள் அம்மா விற்கும்

ஜவ்வு மிட்டாய்.




`பரிபூரணம்’ இப்படி ஒரு பெயரை யார் வைத்தார்கள் என வியப்பாய்

ிருக்கும். இன்னொரு விஷயம், அந்த பெண்ணுக்கு `ர’ வை உச்சரிக்க.

வராது `ஹ’ ன்னு தான் சொல்வாள் இதுக்காகவே ஸ்கூலில் நிறைய

பேர் அவளை கேலி செய்வதுண்டு.

ஒம் பேரு என்ன?

பஹிபூஹணம்.

ஒங்கம்மா பேரு...

ஹாஜபூபதி ( ராஜ பூபதி.)

உந் தம்பி பேரு

ஹாம தொஹ (ராம துரை)

தங்கச்சி...

ஹாஜ குமாஹி (ராஜ குமாரி)

எல்லோரும் கெக்கலி கொட்டி சிரிப்பார்கள். அவளை பார்க்க பாவமா

யிருக்கும். சில சமயம் அழுதும் விடுவாள். அவர்கள் வீட்டில் அத்தனை

பேருக்கும் இந்த குறையும் இருந்தது, அத்தனை பேர் பெயரிலும் ர வும்

இருந்தது. ` நாக்குல வசம்ப சுட்டு தேச்சி வுட்டா, நாக்கு திருத்தமா

பேச்சி வரும்’னு மருந்து சொல்வோரும் இருந்தனர். வீட்டின் வறுமை

காரணமாக அத்துடன் படிப்பையும் நிறுத்தி விட்டாள்.



ஸ்கூலுக்கு எதிரில், மேஜையாகவும் இல்லாத, ஸ்டூல் மாதிரியும்

இல்லாத ஒரு பலகை வச்சி, அதில் ஜவ்வு மிட்டாய் வச்சி அவங்க

அம்மா வியாபாரம் பண்ணுவாங்க. அவங்க ஜவ்வுமிட்டாய் ஸ்கூல்

பிள்ளைகளிடம் மிகவும் பிரபலம். நல்ல பஞ்சுமிட்டாய் ரோஸ்கலர்ல,

மஞ்சள் கலரில், பொரிகடலை நொறுக்கி அதில் தூவி, என தினுசு்தினுசா

வச்சிருப்பாங்க. எனக்கும் ஆசையா இருக்கும். ஆனா அம்மா திட்டுவாங்க.

ஈ மொய்க்கும் வாங்க கூடாதுன்னு சொல்வாங்க. அதனால ஒரு தடவ

`அம்மா இப்போ தா போட்டுட்டு இடுக்காங்க’ ன்னு வீட்டுக்கு கூட்டிட்டு

போனா. அவங்கம்மா பாகு காய்ச்சிட்டிருந்தாங்க. தம்ளர் தண்ணியில

ஒரு சொட்டு பாகை வுட்டு `இப்பிடி கரையாம இருந்தா பதம் வந்துட்டு’

ன்னு சொல்லி ஒரு அகல பாத்திரத்துல தேங்கா எண்ணய தேச்சி அதுல

ஊத்தி ஆற வச்சாங்க. பாதி சூட்டிலேய எடுத்து, கைலயும் எண்ணய

தேச்சிட்டு, மொத்த பாகையும் சுருட்டி கைல எடுத்தாங்க. சூடா இருக்கும்

போதே இழுக்கணும்‘ னு ஒரு கொக்கில போட்டு இழுக்க ஆரம்பிச்சாங்க.

இதுக்குன்னே வாசல் நெலை ல `ட’ மாதிரி ஒரு கொக்கி அடிச்சி வச்சி

இருந்தாங்க. அது எண்ண கசடேறி பளபளன்னு இருந்திச்சி. சூடு தாங்காம

அடிக்கடி கைய ஊதிக்கிட்டாங்க. சூடா மிட்டாய இழுத்து இழுத்து, அவங்க

கையெல்லாம் காய்ப்பு புடிச்சி இருந்திச்சி. ரொம்ப நேரம் இழுத்திட்டே

இருந்தாங்க. `இப்புடி இழுக்கலன்னா மிட்டாயி ஜவ்வு இல்லாம கடுக் கடுக்

ன்னு ஆயிரும்‘னு சொல்லிட்டே எனக்கு மிட்டாய் குடுத்து அனுப்னாங்க.



நினைவுகளில் மூழ்கியிருந்த எனக்கு திடுமென நினைவு வந்தது. அவள்

மகள் அவளைப் போலில்லாமல் சுத்தமாக பேசுவாளா, `ர’ வை அழுத்த

மாய் உச்சரிப்பாளா, என்ன பெயர் வைத்திருப்பாள்? கவலையாய் நினைத்த

போதே, அந்த பெண்ணின் திருத்தமான முகம் நினைவு வந்தது. அதில்

தெளிவும், தன்னம்பிக்கையும் விரவி நின்றதாய் தோன்றியது. கல்லூரி

யில் படிப்பதாய் கூறியது நினைவு வந்தது. ஜவ்வு மிட்டாயின் இனிப்பு

இப்போதும் தித்தித்தது.

.

Wednesday, December 1, 2010

வினோத நட்பு

.

.விலங்குகளின் வினோத நட்பு பற்றிய சில புகைப்படங்கள், இணையத்தில்

( கூகிள் ) காணக் கிடைத்தன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.




ஓ..... எத்துணை இனிமையானவை..., அன்பு நண்பனின் கரங்கள்.

-மேரி ஏங்கல் ஃப்ரைட்.




.நட்பு என்பது, ஒரே ஆன்மா.., இரு உடல்களில். _ அரிஸ்டாடில்




நண்பனுடன் இருட்டில் நடப்பது, வெளிச்சத்தில் தனியே நடப்பதை

விடவும் இனிமையானது. - ஹெலன் ஹெல்லர்.





உங்கள் உறவுகளை நிர்ணயிப்பது விதியென்றாலும், உங்கள் நட்பை

நீங்கள் நிர்ணயம் செய்ய முடியும். _ஜக்யுஸ் டிலைட், பிரெஞ்சு கவி





உண்மையான சந்தோஷம் எத்தனை நண்பர்கள் என்பதில் இல்லை,

நண்பர்கள் யார் என்பதிலேயே....- சாமுவெல் ஜான்சன், பிரிட்டிஷ்

எழுத்தாளர்.





நண்பர்களை் அளவிட நினைத்தால், உன்னால் யாரையுமே நேசிக்க

முடியாது. _ மதர் தெரசா.





நட்பு, நிதானமாக அமையலாம்; ஆனால் இறுக்கமானதாகவும்,

நிலையானதாகவும் அமைய வேண்டும்._ சாக்ரடீஸ்




என்னுடைய சந்தோஷத்தை என் நண்பனின் இழப்பில் கொண்டாட

முடியாது._ ஜார்ஜ் வாஷிங்டன்.





ஒரு உண்மையான நண்பன் 10,000 உறவினர்களுக்கு சமம்.

_ யூரி பைட்ஸ் , கிரேக்க எழுத்தாளர்.


.

Thursday, November 25, 2010

பலநாள் பாவமும், ஒருநாள் புண்ணியமும்...

.

.நேற்று மாலையிலிருந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.

பலத்தமழை இல்லையென்றாலும், கொஞ்சம் பலத்த தூறலாக, அவ்வப்

போது கொஞ்சம் பலமாக என இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.

அந்த சின்ன குடிசையின், முன்னிருந்த ஒட்டு திண்ணையில் சுருட்டி

மடக்கி உட்கார்ந்து இருந்தார் தண்டுபத்து பாட்டி. குடிசையின் பல இடங்

களில் மழைநீர் சொட்டிக் கொண்டிருந்தது. அலுமினிய போணி, தகர

வாளி, பிளாஸ்டிக்டப்பாஎன அங்கங்கே ஒவ்வொன்று, சொட்டும் துளிகளை

வாங்கிக் கொண்டிருந்தன.



பக்கத்து தெருவிலிருக்கும் இந்துஸ்கூலில் லீவு விட்டுவிட்டார்கள் போலும்

குழந்தைகள் `ஹைய்யா’ என்ற உற்சாக ஆரவாரத்துடன், `இன்னிக்கு

ஃபுல்லா மழ பெய்யுமாம்’ எனக் கத்தியபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சாயங்காலம் மாதிரி அடைத்து இருட்டிக் கொண்டிருந்த வானத்தை பார்க்க,

பார்க்க பாட்டிக்கு வயிற்றில் புளியை கரைத்தது போலிருந்தது.


பாட்டியின் பேரே நிறைய பேருக்கு தெரியாது. பிறந்த ஊரான தண்டுபத்தி

லிருந்து வாழ்க்கை பட்டு வந்ததிலிருந்து `தண்டுபத்தாள்’ தான்.இதைப்

போல `காயாமொழியாள், மூலக்கரையாள்’, என ஊர் பெயரே சொந்த

பேரானவர்கள் நிறைய பேர் இருந்தனர். கொஞ்சம் பெரிசுகளுக்கு தண்ட

பத்தக்கா, மற்ற எல்லோருக்கும் தண்டபத்து பாட்டி தான். பாட்டி அவள்

கணவர்க்கு இரண்டாம் தாரம். அவரை விட அவர் கணவர் இருபது

வயது கிட்ட மூத்தவர். மூத்தாள் மகன் ராமசாமிக்கு 18 வயதிருக்கும்.

இவரைவிட நான்கைந்து வயது தான் குறைவு. திருமணமான கொஞ்ச

நாளிலேயே கணவர் போய் சேர்ந்துவிட, குழந்தை குட்டி இல்லாத

பாட்டி தனியானார். `சொந்த மகனே ஒண்ணும் செய்றதில்ல, இவ எங்க

நம்மள கவனிப்பா’ன்னு பாட்டி தன்கையே தனக்குதவின்னு வேலை செய்ய

ஆரம்பத்தார்.


நல்ல மினுமினுக்கும் கறுப்பு நிறம், எண்பது வயதுக்கு தளராத தேகம்.

மூணு வருஷத்துக்கு முன் `சிக்கன்குனியா’ காய்ச்சல் வரும்வரை,

பாட்டி அறுப்பு, நடவு என ஏதோ ஒரு வயல் வேலை பார்த்துக் கொண்டு

தானிருந்தார். தெருவில் முக்கால்வாசி பேரின் நடையே காய்ச்சலால்

வித்தியாசமாக மாறிவிட்டது. பாட்டியையும் மூட்டுவலி படாதபாடு படுத்தி

விட்டது. காய்ச்சலில் கிடந்த போது, ராமசாமியின் மகள் பாக்கியம் தான்

பார்த்துக் கொண்டாள். கொஞ்சம் முன்கோபம் அதிகமே தவிர ஓரளவு

செய்வாள். யார்யாரையோப் பார்த்து, எழுதிப்போட்டதில் முதியோர்

உதவித் தொகை 400 ரூ வருகிறது. அதில் 200 ரூ வை சாப்பாட்டுக்கு

என பாக்கியத்திடம் கொடுத்து விடுவாள். மிச்சப் பணத்தை சேர்த்து

வைத்ததில் 2000 ரூ இருக்கிறது.



கூரைக்கு புதுஓலை வைக்கலாம் என விசாரித்துப் பார்த்தாள். `ஓல

வாங்க மட்டுமே 2000 ரூ ஆவுமாம், அப்புறமா மோட்டு ஓல தனியா

வேணும், இத்துப் போன நாலஞ்சு கம்ப மாத்தணும், கூலி தலக்கி

400 ரூன்னு ரெண்டு பேருக்கு, ‘ பாட்டி தனக்குள் கணக்கு பார்த்துக்

கொண்டு இருந்தார்.



மழை விடுவதாக இல்லை. `போனதடவ ரோடு போடுறேன்னு ரோட்ட

வேற ஒசத்திப் புட்டானுவ. மழத்தண்ணீ உள்ள வந்துறும் போல இருக்கு’

எரிச்சலோடு அங்கேஇங்கேயிருந்து நாலைந்து துண்டு செங்கல்லை எடுத்து

வந்து வாசல் முன்னால அடுக்கி வச்சு, அதும்மேல கொஞ்சம் மண்ணை

அள்ளிப் போட்டு தற்காலிகதடுப்பு சுவர் அமைத்து அதையே பயத்துடன்

பார்த்துக் கொண்டிருந்தார். `ஹூம்... பல நாள் பாவத்த தாங்குனாலும்,

ஒரு நாள் புண்ணியத்த தாங்க முடியாது போல’, அங்கலாய்த்துக் கொண்டு

இருந்தார். மழை இன்னும் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. பக்க வாத்யமாக

பாட்டியின் புலம்பலும் சேர்ந்து கொண்டது.

.

Friday, November 19, 2010

நல்லதொரு குடும்பம்...., பதிவுலகம்.

.

பதிவர் செல்வேந்திரனின் திருமணத்தில் கலந்து கொள்ள மறுநாள் காலை

திருச்செந்தூர் வரப்போவதாக, புதன்இரவு மாதுஅண்ணனிடம் இருந்து

போன் வந்தது. பதிவுலக நண்பர்கள் சிலரும் வந்திருப்பதாகவும்,

திருமணம் முடிந்து திரும்பும் போது என்னை பார்க்க வருவதாகவும்

மாதுஅண்ணன் கூறியதும் சந்தோஷத்துடன், ``அப்போ நம்ம வீட்டுக்கு

மத்தியான சாப்பாட்டுக்கு வந்து விடுங்கள்’ என்றேன். நண்பர்களிடம்

கேட்டு, அண்ணன் சரியன்றதும், மிக உற்சாகமாக, சந்தோஷமாக

காத்திருந்தேன். ஸாரி, காத்திருந்தோம். ஆம், என் கணவரும் லீவு

போட்டுவிட்டு வீட்டிலிருந்தார்.



இந்த டிசம்பர் வந்தால், `சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்ற பீடிகை

யுடன் பதிவுலகத்துக்கு வந்து ஒரு வருடம் முடியப் போகிறது. எழுத

ஆரம்பித்த சில நாட்களில், `நான் உங்கள் பக்கத்து ஊர்க்காரி, தற்சமயம்

துபாயில் இருக்கிறேன்’என்று் இமெயிலில் அறிமுகமானவர் அன்புத்தோழி

சுந்தரா. பின்னர் chat ல் தொடர்ந்த அன்பு, சென்ற ஆகஸ்ட் மாதம்,

லீவில் ஊர் வந்திருந்த போது, ஆறுமுகனேரி வந்து, என் வீட்டை

விசாரித்து, திடீரென என்முன் வந்து நின்றபோது சந்தோஷத்தில் திக்கு

முக்காடிப் போனேன். மிகக் குறைந்த நேரமே பேசிக் கொண்டிருந்தோம்.

அவரும் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. நானும் வெளியே

கிளம்பிக்கொண்டிருந்ததால் மற்றொரு நாள் வருவதாக கூறிச் சென்றார்.

மறுநாள் செல்லில் அழைதுப் பேசினேன். இரண்டொரு நாளில் ஊர்

திரும்புவதாகவும், அடுத்தமுறை வரும்போதும் கட்டாயம் வருவேன் என்று

விடைபெற்றார். நான் சந்தித்த முதல் வலையுலக சொந்தம் இவர் தான்.



சமீபத்தில் சென்னை வந்திருந்த போது பதிவர் தீபாவின் வீட்டில் வைத்து,

அகிலா ஸ்ரீ அகிலாவை தீபா அறிமுகப் படுத்தினார். `அக்கா’ என வாய்

நிறைய அழைத்து அன்போடு பேசிய அகிலாவை சந்த்தித்தது அதுதான்

முதல்முறை என என்னாலேயே நம்ப முடியவில்லை.


நேற்று (வியாழன்) மதியம் பன்னிரண்டு மணியளவில், மாதுஅண்ணன்

பாரா அண்ணன், அண்ணன் மணிஜீ, வடகரைவேலன் ஆகியோர் வந்தனர்.

பின்னூட்டங்கள் மூலம் அன்பை பொழியும் பாரா அண்ணன், எங்கேயோ

கண்காணாத தேசத்தில் இருந்து அன்பால் அறிமுகமான பாரா அண்ணன்,

என்முன் எளிமையான சிரிப்புடன் அமர்ந்திருந்தார். என்னை கட்டாயம்

பார்க்க வேண்டும் என்றதாக மாதுஅண்ணன் கூறிய போது நெகிழ்ந்து

போனேன். அண்ணன் மணிஜீ, வேலன் ஆகியோர் எழுத்துக்களை ஓரளவு

வாசித்திருக்கிறேன். சிறிது நேரம் குடும்பம், குழந்தைகள் என பரஸ்பர

அறிமுகங்கள், விசாரிப்புகளை தொடர்ந்து கலகலப்புக்கு பஞ்சமில்லாத

அரட்டை, சிரிப்பு, பேச்சு, பின் மதிய உணவு என நேரம் போனேதே

தெரியவில்லை. தங்கையின் கணவரை அத்தான் என்றுதான் அழைப்

போம் என பாராஅண்ணன், என் கணவரை அத்தான் என்று உரிமையோடு

பாசத்தோடு அழைத்த போது, அவரும் நெகிழ்ந்து தான் போய்விட்டார்.

மணிஜீஅண்ணன் பிறந்தநாள் என்றறிந்து சந்தோஷத்துடன் வாழ்த்தினோம்

அப்பாவை வணங்கி பிறந்தநாள் ஆசீர்வாதங்கள் பெற்றபின்னர், அனைவ

ரிடமும் விடைபெற்று கிளம்பி சென்றனர். வீடு வெறுமையாய் ஆனாலும்

மனம் நிறைந்திருந்தது.


புதியவர்கள், முதல்முறையாக சந்திக்கிறோம் போன்ற உணர்வுகளின்றி,

ஒரு குடும்பத்தவர் போல் நெருக்கமாய் உணர்ந்தோம். எங்கோ ஒரு

கிராமத்தில் வாழும் என்னையும், இணைய குடும்பத்தில் இணைத்து

வைத்த பதிவுலகை, சந்தோஷமாய், பெருமையாய், நன்றியுடன்

நினைக்கிறேன். இந்த சந்தோஷத்துக்கு காரணமான செல்வேந்திரன்

தம்பதியினர்க்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

.